2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பெண் உடலை கட்டுப்படுத்துவதிலிருந்து வெளிப்படும் தீவிரவாதம்

Editorial   / 2019 மே 02 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

புர்காவைப் பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்பதிலெல்லாம் எனக்குத் துளியும் உடன்பாடு இருந்ததில்லை. இப்போதும் இல்லை. பெண் உடல் மீதான ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடு மட்டுமே இந்த புர்கா. இந்த உடை எப்படி அடிப்படைவாதத்தின் கூறாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கு, புர்கா/ நிகாப் தடை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.   

2016 செப்டெம்பர் 23ஆம் திகதி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளியிட்ட ஒரு பத்வாவில், “நிகாப் முஸ்லிம் பெண்கள் மீது விதிக்கப்பட்டது (பத்வா இல. 008/F/ACJU/ 2009)”  என்றது. அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் இந்த பத்வா, நிகாப் அணியாத பெண்களை விபசாரிகள் என்று சொல்லவைத்தது. அதே ஜம்மியதுல் உலமாதான், 2019 ஏப்ரல் 29 அன்று, பாதுகாப்புக் காரணங்களுக்காக புர்கா/ நிகாபைத் தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது.   

இஸ்லாமிய அடிப்படைவாதம், பல்வேறு கூறுகளாக வெளிப்பட்டன. அதிலொன்றுதான் பெண் உடல் மீதான கட்டுப்பாடு.   

புர்கா/ நிகாபை அணியச் சொல்லிக் கேட்பதும் களைந்துவிடச் சொல்வதும், இரண்டுமே பெண் உடல் மீதான கட்டுப்பாட்டையே காட்டுகின்றன. ஜம்மியதுல் உலமா என்கிற இந்த அமைப்புக்கு, பெண்களின் உடையைத் தீர்மானிக்கின்ற அதிகாரத்தை யார் அளித்தது என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. இந்த நிறுவனத்தையும் இதில் உள்ள ஆண்களையும் அழைத்து, பெண்களின் உடை தொடர்பான ஒரு தீர்மானத்தை இயற்றுவதன் மூலமாக, நீண்டகாலத் தாகத்தை நிறைவேற்றியிருக்கிறது பேரினவாத அரசு. இது, சிங்களப் பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரல்களில் நீண்டகாலமாக இருந்த ஒன்று.   

இன்னொருபுறம் சிங்கள மதத்துக்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கும் அரசியல் அமைப்பைக் கொண்ட இலங்கை அரசு, அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த விரும்புகிறது. ஒருவன்/ள் விரும்பிய மதத்தையும் கலாசாரத்தையும் பின்பற்ற முடியும் என்ற சுதந்திரத்தை, அரசமைப்பினூடாக உறுதி செய்திருந்தபோதும், தந்திரமாக முஸ்லிம்களின் அடையாள அழிப்பை அவர்களைக் கொண்டே செயற்படுத்தி வெற்றி காண்பதற்கு, ஈஸ்டர் தாக்குதலை ஒரு துருப்பாகப் பயன்படுத்தியிருக்கிறது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட குண்டுதாரிகள் யாருமே, புர்கா/ நிகாப் உடையில் தோன்றியிருக்கவில்லை. சந்தேகமின்றி அவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருந்தார்கள். அரசாங்கமும் ஜம்மியதுல் உலமாவும், கூட்டாக இணைந்து பெண்களைப் பலியாக்கியுள்ளனர்.   

புர்கா/ நிகாப் தடை தொடர்பாக, அரச வர்த்தமானியில் தரப்பட்டுள்ள விவரணங்களில், அடையாளத்தை மறைக்கும் எல்லா வகையான திரைகளுக்கும் தடை என்பதுடன், “காதுகள் தெரியும்படியாக” என்பதையும் வலியுறுத்துகிறது. புர்கா/ நிகாப் எனப்படும் முகத்திரைகளுக்குத் தடை என்று சொல்லப்பட்டபோதும், காதுகள் தெரியும்படியாக எனும்போது சாதாரண ஹிஜாப் கூட அணிய முடியாதபடியே இந்த விதி உள்ளது. அனைத்துப் பொது இடங்களிலும் இது நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்வதனூடாக, முஸ்லிம் பெண்களுக்குப் பாதுகாப்பாற்ற, குற்றவுணர்வுக்கு  உள்ளாக்கும் சூழ்நிலையை வலிந்து ஏற்படுத்தி இருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் ஆன்மாவைச் சீண்டியுள்ளது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றமும் சட்டமும், ஒரு சமூகத்தின் மீதான சந்தேகமற்ற அத்துமீறல்.   

மூன்று தசாப்தகாலப் போர் அனுபவங்க ளிலிருந்து பார்த்தோமானால், விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்கொலைக் குண்டுதாரிகளாகப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் யாரும், புர்கா/ நிகாப் அணிந்து தாக்குதல்களைச் செய்திருக்கவில்லை. புர்கா/ நிகாப், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதெல்லாம் கட்டுக் கதைகள். குண்டுகளை வெடிக்கச் செய்யும் தற்கொலையாளி எந்த உடையிலும் அதனைச் செய்துவிட முடியும். பிக்கினி உடையில்கூட அது சாத்தியம்.   
ஆக மொத்தத்தில், இங்கே மதவெறியும் அரச பயங்கரவாதமும், பெண்ணுடலைக் கட்டியாழ்வதில் வென்றிருக்கிறது.   

ஸர்மிளா ஸெய்யித்தின் மாற்றம்
இணையத்தளத்தில் பிரசுரமான விரிவான கட்டுரையிலிருந்து சில பகுதிகள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .