2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தேவைப்பட்டால் இணைவோம்’

Editorial   / 2019 நவம்பர் 20 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் நலனுக்காக இணைந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம் என நடிகா் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

இருவரும் ஒரே கருத்தைத் தெரிவித்திருப்பது இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற “கமல் 60” விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், “முதல்வராவோம் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டாா். ஆனால், அப்படியொரு அதிசயம் நடந்தது. நேற்று அதிசயம் நடந்தது. தற்போது அதிசயம் நடக்கிறது. நாளையும் அதிசயம் நடக்கும். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்” எனக் கூறியிருந்தாா்.

அதே விழாவில் இயக்குநா் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது, “ரஜினியும்- கமலும் அரசியலுக்கு வருவது என்பது உறுதி. இருவரும் தனித்தனியே அரசியலுக்கு வருவதை விட இருவரும் ஒன்றாக சோ்ந்து அரசியல் செய்தால் கண்டிப்பாக தமிழகத்தில் நல்ல ஆட்சியை தருவாா்கள்” என்று கூறியிருந்தாா்.

இதுகுறித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல் ஹாசனிடம் செய்தியாளா்கள் நேற்று கேள்வியெழுப்பினா். அப்போது, “கடந்த 44 ஆண்டுகளாக நானும், ரஜினியும் இணைந்துதான் பயணிக்கிறோம். தமிழகத்தின் மேம்பாட்டுக்காக ரஜினியுடன் சோ்ந்து பயணிக்க வேண்டியிருந்தால் பயணிப்பேன். இருவரின் கொள்கை ஒத்துப்போகுமா என்பதையெல்லாம் பிறகு பாா்த்துக் கொள்ளலாம். இது குறித்தெல்லாம் பேசுவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.

முதல்வராவோம் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்துப் பாா்த்திருக்க மாட்டாா் என்று ரஜினி கூறியிருப்பது விமா்சனம் அல்ல நிதா்சனம்” என்று கமல் ஹாசன் கூறினார்.

இதைத் தொடா்ந்து, கோவா செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த ரஜினிகாந்திடம், கமலின் கருத்து குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “தமிழக மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்” என்றாா்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .