2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பேரறிவாளன் மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம்

Administrator   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட ஏழு பேர் தூக்கு தண்டனை பெற்றனர். பின்னர் இவர்களது தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் பேரறிவாளன் தெரிவித்திருப்பதாவது,

“ராஜிவ் காந்தியை கொலை செய்ய தனு மனித வெடி குண்டாக மாறினார். அவர் பயன்படுத்திய பட்டி வெடிகுண்டில் வைக்கப்பட்ட மின்கலம் நான் வாங்கி கொடுத்தது என்று குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், இந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. இருந்தாலும் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்தாண்டு விசாரணைக்கு வந்தபோது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான இந்திய மத்திய விசாரணை முகவரக (சி.பி.ஐ) சிறப்புக்குழு தயாரித்த விசாரணை அறிக்கையை மனுதாரர் பேரறிவாளன் தரப்பிற்கு கொடுக்க  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சி.பி.ஐ. பேரறிவாளன் மனுவுக்கு பதில் அளிக்கவும் உத்தரவிட்டது. கடந்த ஓரு ஆண்டாக இந்த வழக்கு விசாரணைக்கு வராமல், நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில், நீதியரசர் ரமணா தலைமையிலான அமர்வில், பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு இன்று காலையில் ஆஜராகி வாதாடுகையில், “பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு கடந்த ஓர் ஆண்டாக விசாரிக்கப்படாமல் உள்ளது. விசாரணை பட்டியலில் அந்த வழக்கு முதலில் இடம்பெறும். பின்னர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடும்

இவ்வாறு ஓர் ஆண்டாக விசாரிக்கப்படாமல், நிலுவையில் இருக்கும் பேரறிவாளன் வழக்கு வருகிற நவம்பர் ஐந்தாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் பதிவுத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது.

எனவே அந்த வழக்கை பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது. திட்டமிட்டப்படி நவம்பர் ஐந்தாம் திகதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதியரசர் என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படாது எனவும், அடுத்த மாதம் ஐந்தாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X