2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தம் இணங்கப்பட்டது’

Editorial   / 2019 நவம்பர் 14 , பி.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்திய பேரம்பேசலுடன், இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தம் ஒன்று இணங்கப்பட்டுள்ளதாக பலஸ்தீனக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் தெரிவித்துள்ளது.

வான் தாக்குதல்களில், காஸாவில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்ட பின்னரே குறித்த யுத்தநிறுத்தம் இணங்கப்பட்டதாக இஸ்லாமிய ஜிஹாத் கூறியிருந்தது.

யுத்தநிறுத்தமானது இலங்கை நேரப்படி இன்று காலை ஒன்பது மணிக்கு நடைமுறைக்கு வந்ததாக இஸ்லாமிய ஜிஹாத்தின் பேச்சாளர் மூஸாப் அல்-பிறைம் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இஸ்லாமிய ஜிஹாத்தின் தளபதியான பஹா அபு அல்-அத்தாவை, வான் தாக்குதலொன்றில் இஸ்ரேல் கொன்ற பின்னர் இஸ்ரேல் ஆரம்பித்த பதிலடித் தாக்குதல்களின் இரண்டு நாட்களின் பின்னர் குறித்த யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் இரண்டு நாட்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, அபு மல்ஹெளஸ் குடும்பத்தின் எட்டு உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 34 ஆக அதிகரித்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, காஸாவிலிருந்து ஏவப்பட்ட றொக்கெட் தாக்குதல்களில் காயமடைந்த குறைந்தது 63 இஸ்ரேலியர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இரண்டு நாட்கள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமது நாடு எடுத்ததாக எகிப்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின்படி காஸாவில் அமைதி திரும்புவதை பலஸ்தீனப் பிரிவுகள் கட்டாயம் உறுதிப்படுத்தவேண்டுமெனவும், ஆர்ப்பாட்டங்களில் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும், இஸ்ரேல் கட்டாயம் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமெனவும், பலஸ்தீனர்களின் ஆர்ப்பாட்டங்களின்போது யுத்தநிறுத்தமொன்றை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் இஸ்லாமிய ஜிஹாத்தின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஒப்பந்தம் தொடர்பான இஸ்ரேலிடமிருந்து உடனடியாக உறுதிப்படுத்தல்கள் எவையும் இருந்திருக்கவில்லை. முன்னதாக, இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடித்தால், இஸ்ரேலும் யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்கும் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

காஸாவில், இஸ்ரேலியத் தாக்குதலொன்றில் பஹா அபு அல்-அத்தா கடந்த செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து இரண்டு தரப்புகளும் பதில் தாக்குதல்களை மேற்கொண்ட நிலையில், 350க்கும் அதிகமான றொக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X