2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சபரிமலையில் பெண்கள்: ‘எனது உரிமையை வெளிப்படுத்த விரும்பினேன்’

Editorial   / 2019 ஜனவரி 15 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல தசாப்தங்களுக்குப் பின்னர், சபரிமலைக்குள் சென்ற 10 வயதுக்கும் 50 வயதுக்கும் உட்பட்ட முதலிரு பெண்களாகக் கருதப்படும் பிந்து அம்மினி, கனகதுர்கா ஆகிய இருவரும், தொடர்ந்தும் ஒளிந்து வாழும் நிலையையே எதிர்நோக்கியுள்ளனர். எனினும், தமது நடவடிக்கைகள் தொடர்பாக அவர்கள், எந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை.

இரகசியமான இடமொன்றில் தங்கியிருக்கும் அவர்களிருவரும், ஏ.எப்.பி செய்தி முகவரகத்துக்கு வழங்கிய நேர்காணலின் போது, சபரிமலைக்கெதிராக உச்சநீதிமன்றத்துக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பத்து வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள், சபரிமலைக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை, உச்சநீதிமன்றம் நீக்கியதைத் தொடர்ந்து, இம்மாதம் 2ஆம் திகதி, அவர்களிருவரும் சபரிமலைக்குச் சென்று, வரலாறு படைத்திருந்தனர்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த பிந்து, “கோவிலுக்கான எனது விஜயத்தின் பின்னர், தூய்மைப்படுத்தும் கிரியைகளைச் செய்ததன் மூலம், பூசாரி, தீண்டாமையைக் கடைப்பிடித்துள்ளார். “அது தவறானது. எனவே, கனகாவும் நானும், பூசாரிக்கெதிராக உச்சநீதிமன்றத்துக்குச் செல்லத் தீர்மானித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

சபரிமலைக்குச் சென்றமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கனகதுர்கா, “வழிபடுபவராக, எனது உரிமையை வெளிப்படுத்த விரும்பினேன். அவ்வளவும் தான். பாலின சமத்துவத்தை மீள நடைமுறைப்படுத்துவதற்கான படிகளில் அடுத்த கட்டங்களில் இதுவுமொன்று” எனத் தெரிவித்தார்.

சபரிமலைக்கான தமது பயணத்தில், பெரிதளவு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்த பிந்து, சபரிமலையில் ஏறிக்கொண்டிருக்கும் போது, வெகு சிலரே பிரச்சினையாக அமைந்தனர் எனக் குறிப்பிட்டார்.

பிந்துவும் கனகதுர்காவும் சபரிமலைக்குச் சென்ற பின்னர், இந்துக்களுக்கு எதிரானவர்கள் என, கடும்போக்கு இந்துக்கள் சிலர், அவர்களை விமர்சித்திருந்தனர்.

எனினும், அவ்விமர்சனங்களை மறுத்த அவர்களிருவரும், “சபரிமலைக்குச் செல்வதற்காக முயன்ற முதலிருவர் நாமில்லை. ஏராளமான பெண்கள் இதற்கு முன்னர் முயன்றனர். ஆனால், அம்முயற்சியில் தோல்வியடைந்தனர். எமக்கு மத நம்பிக்கை உள்ளது. ஐயப்பனை வழிபட, எப்போதுமே நாம் விரும்பினோம்” எனத் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X