Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபிய மன்னர் குடும்பத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்து வந்த ஊடகவியலாளரான ஜமால் கஷோகி கொலைசெய்யப்பட்டமை தொடர்பில், சவூதி அரேபியா வழங்கிய விளக்கத்தை ஏற்பதற்கு, பல நாடுகளும் தமது தயக்கத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலையில், இவ்விவகாரம் மேலும் நீண்டுசெல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது.
துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துக்குள் சென்ற ஜமால், காணாமற்போயிருந்தார். அவர் கொல்லப்பட்டு விட்டாரென, துருக்கி, ஐக்கிய அமெரிக்க ஊடகங்களும் அதிகாரிகளும் தெரிவித்து வந்த போதிலும், இரண்டு வாரகாலமாக, அதை மறுத்துவந்திருந்த சவூதி, கடந்த வெள்ளிக்கிழமை, இதை ஏற்பதாக அறிவித்தது.
ஜமாலை விசாரணை செய்வதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது, அங்கிருந்த சுமார் 18 பேருக்கும் ஜமாலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதெனவும், அதைத் தொடர்ந்து அவர் கொல்லப்பட்டு விட்டாரெனவும் குறிப்பிட்ட சவூதி அரேபியா, அவரது உடலை அகற்றுவதற்காக, துருக்கியைச் சேர்ந்த ஒருவரிடம் வழங்கிவிட்டதாகவும், எனவே அவரின் உடல் எங்கேயெனத் தெரியாது எனவும் குறிப்பிட்டது. இச்சம்பவம், நாட்டின் மன்னர் அல்லது முடிக்குரிய இளவரசருக்குத் தெரிந்து நடக்கவில்லை என்று குறிப்பிட்ட அந்நாடு, இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கருதப்படும் உயரதிகாரிகள் சிலரை, பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டது.
இவ்விடயம் தொடர்பில், ஆரம்பத்திலிருந்தே அதிக கவனத்தை வெளிப்படுத்திவரும் துருக்கி, இது தொடர்பில் தாம் மேற்கொண்ட விசாரணையின் அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்தப் போவதாகத் தெரிவித்தது. “யாரையும் நாம் இப்போதே குற்றஞ்சாட்டவில்லை. ஆனால், எந்தவொரு விடயமும் மூடி மறைக்கப்பட்டிருப்பதை நாம் ஏற்கப் போவதில்லை” என்று குறிப்பிட்டது.
அதேபோல், கடுமையான விமர்சனத்தை முன்வைத்த கனடாவின் வெளிநாட்டு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், “இன்றுவரை வழங்கப்பட்டுள்ள விளக்கங்கங்கள், தொடர்ச்சியான பண்பை வெளிப்படுத்தாததோடு, நம்பிக்கைக்குரியனவாக இருப்பது குறைவாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், பிரான்ஸின் வெளிநாட்டு அமைச்சர் ஜுவான்-வைவெஸ் லே ட்ரியன், அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொறிசன், ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திரப் பிரதானி ஃபெடெரிக்கா மொகெரினி உள்ளிட்ட பலர், தமது கண்டனத்தையோ அல்லது மேலதிக விசாரணைக்கான கோரிக்கையையோ வெளிப்படுத்தினர்.
மதில் மேல் பூனையாக ட்ரம்ப்
ஊடகவியலாளர் ஜமால் காணாமற்போனமை தொடக்கம், சவூதி அரேபியாவை நியாயப்படுத்தும் வகையில் செயற்பட்டு வந்த ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது மதில் மேல் பூனையாக, இரண்டு தரப்புகளையும் சமாளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
சவூதி அரேபியாவால் ஜமால் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், அந்த அறிக்கையை, நம்பக்கூடியதாகக் கருதுவதாக, ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு முனைகளிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, அந்நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதைப் போல் கருத்துத் தெரிவித்துள்ள அவர், “விடையைக் காணும் வரைக்கும் நான் திருப்தியடையப் போவதில்லை” என்று குறிப்பிட்டார். எனினும், ஜமால் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை சவூதி ஏற்றமையை, “முதலாவது படி, சிறந்த முதலாவது படி” என அவர் வர்ணித்தார்.
இக்கொலையின் பின்னணியில், சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் காணப்படுகிறார் என, பல்வேறு தரப்புகளும் குற்றஞ்சாட்டுகின்றன. ஆரம்பத்திலிருந்தே அவரை நியாயப்படுத்திவரும் ஜனாதிபதி ட்ரம்ப், இக்கொலை தொடர்பாக, முடிக்குரிய இளவரசருக்குத் தெரியாமலிருக்கலாம் என்பதற்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இக்கொலையின் பின்னணியில், சவூதி அரேபியாவுடன் கைச்சாத்திட்டுள்ள ஆயுத ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்ற குரல்கள் அதிகரித்துள்ள போதிலும், அதை இரத்துச் செய்தால், ஐ.அமெரிக்காவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற நிலைப்பாட்டை, அவர் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். அவ்வாறு செய்தால், “அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட, எங்களுக்கு அதிகமாக ஏற்படும்” என, ஜனாதிபதி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
17 Apr 2024