2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ட்ரம்ப்பைக் காட்டிக் கொடுத்தது ஊடகம்

Editorial   / 2018 டிசெம்பர் 14 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வேட்பாளராக இருந்த போது, பிரசாரச் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில், இன்னோர் ஊடகமும், விசாரணையாளர்களிடம் வெளிப்படுத்தியுள்ளது. அவரின் தனிப்பட்ட வழக்கறிஞராக இருந்த மைக்கல் கொஹென், பிரசார நிதிச் சட்டங்களை மீறியமைக்காக 3 ஆண்டுகளுக்குச் சிறையிலடைக்கப்பட உத்தரவிட்ட அதேநாளிலேயே, இத்தகவலும் வெளியாகியுள்ளது.

கரென் மக்டுகல் என்ற மொடல் நடிகையுடன், ட்ரம்ப், தொடர்புகளை வைத்திருந்தார் எனவும், அத்தொடர்பு தொடர்பான தகவல்களை, பிரத்தியேகச் செய்திக்காகப் பணம்கொடுத்துப் பெற்றுக்கொண்ட “நஷனல் என்குவரர்” என்ற சஞ்சிகை, அச்செய்தியைப் பிரசுரிக்காமல் அப்படியே வைத்திருந்தது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. குறித்த சஞ்சிகை, ஜனாதிபதி ட்ரம்ப்பின் நெருங்கிய நண்பரும் ஆதரவாளருமான டேவிட் ஜே. பெக்கர் என்பவரால் உரிமைப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, அப்போது வேட்பாளராக இருந்த ட்ரம்ப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே, மக்டுகலின் கதையை விலைக்கு வாங்கிய பின்னர், அதைப் பிரசுரிக்காது விட்டனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக, குறித்த சஞ்சிகைக்கும் விசாரணையாளர்களுக்கும் இடையில், இணைந்த செயற்பாடுகள், இவ்வாண்டு செப்டெம்பரிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது தொடர்பான தகவல், இலங்கை நேரப்படி நேற்று (13) அதிகாலையே வெளிப்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு நேற்று அறிவித்த விசாரணையாளர்கள், இது தொடர்பான ஏற்பாடுகளில், ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவைச் சேர்ந்தோரில் ஆகக்குறைந்தது ஒருவராவது சம்பந்தப்பட்டிருந்தார் எனக் குறிப்பிட்டனர். ஆனால் அந்த நபர் யாரென, அவர்கள் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

ஒரு பக்கமாக, மைக்கல் கொஹெனின் குற்றச்சாட்டுகள், ஜனாதிபதி ட்ரம்ப்பைக் குற்றஞ்சாட்டி அவர் வெளியிட்டுள்ள கருத்துகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், தற்போது, இன்னொரு வழியில் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, பிரசாரக் காலத்தில், குறைந்தது 2 தடவைகள், பிரசார நிதிச் சட்டங்களை, அப்போதைய வேட்பாளர் ட்ரம்ப் அல்லது அவரது குழுவினர் மீறினர் என, விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .