Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Editorial / 2018 மார்ச் 20 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யத் தலையீடு காணப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் விசேட வழக்குத் தொடுநர் றொபேர்ட் மல்லரைப் பதவி நீக்குவதற்கான முயற்சிகளில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈடுபட்டு வருகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மல்லரின் விசாரணையின் போது, ரஷ்யத் தலையீடு என்பது ஒருபக்கமாக இருக்க, ரஷ்யாவுக்கும் ட்ரம்ப் பிரசாரக் குழுவுக்கும் இடையில் கூட்டிணைவு காணப்பட்டதா என்பது தொடர்பாகவும் ஆராயப்படுகிறது.
இவ்விசாரணை தொடர்பான தனது அதிருப்தியை, ஆரம்பத்திலிருந்தே வெளிப்படுத்திவரும் ஜனாதிபதி ட்ரம்ப், கடந்த வெள்ளிக்கிழமை, எப்.பி.ஐ-இன் பிரதிப் பணிப்பாளராக இருந்த அன்ட்ரூ மக்கபேயை நீக்கியமையின் மூலம், எதிர்ப்புகளைப் பற்றி அஞ்சாமல், எதை வேண்டுமானாலும் செய்யத் தயார் என்பதைக் குறிப்பிட்டுள்ளார் எனக் கருதப்படுகிறது. அதேபோன்று, மல்லர் தொடர்பான விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள, ஜனாதிபதியின் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டரான ஜெப் ஃபிளேக், ஜனாதிபதியின் அண்மைக்காலக் கருத்துகள், மல்லரைப் பதவி நீக்குவதை அடிப்படையாகக் கொண்டே காணப்படுகின்றன எனத் தெரிவித்தார். “இந்நிலைமை அங்கு செல்லாது என நான் நம்புகிறேன். ஏனென்றால், காங்கிரஸிலுள்ள எங்களால் அதை ஏற்க முடியாது” என்றார்.
ஜனாதிபதி ட்ரம்ப்பின் நெருக்கமான செனட்டர்களுள் ஒருவராகக் கருதப்படும் லின்ட்ஸி கிரஹாமும், அதேபோன்ற கருத்தையே வெளிப்படுத்தினார். தலையீடுகளின்றி, தனது விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, மல்லருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்ததோடு, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பலர், இதே நிலைப்பாட்டில் காணப்படுகின்றனர் என்று குறிப்பிட்டார்.
அதேபோல், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரான போல் றயனின் பிரதிநிதியொருவர் கருத்துத் தெரிவிக்கும் போது, “மல்லரும் அவரது குழுவினரும், பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டதோடு, இதுவே சபாநாயகரின் தொடர்ச்சியான நிலைப்பாடாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
இவ்வாறான அழுத்தங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அறிவிப்பொன்றை விடுத்த வெள்ளை மாளிகையின் சட்டத்தரணி டை கொப், விசேட வழக்குத் தொடுநர் றொபேர்ட் மல்லரை நீக்குவது குறித்து, ஜனாதிபதி ட்ரம்ப் சிந்திக்கவில்லை என்றார்.
ஆனால், மல்லர் மீதான ஜனாதிபதி ட்ரம்ப்பின் விமர்சனங்கள், தொடர்ந்த வண்ணமேயுள்ளன. மல்லரின் விசாரணைக் குழுவின், கடும்போக்கான ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் 13 பேர் உள்ளனர் எனவும், குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் எவரும் இல்லை எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், “இது நியாயமானது என எவரும் எண்ணுகிறீர்களா?” என்றும் கேள்வியெழுப்பினார்.
மல்லரின் குழு பற்றிய முழுமையான விவரங்கள் வெளிப்படாத போதிலும், மல்லரே, குடியரசுக் கட்சி ஆதரவாளர் என்பதோடு, குடியரசுக் கட்சி ஜனாதிபதியான ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் காலத்திலேயே அவர், எப்.பி.ஐ பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அத்தோடு, ஐ.அமெரிக்க சட்ட விதிகளின்படி, மல்லரின் விசாரணைகளை மேற்பார்வை செய்யும் பணி, சட்டமா அதிபருக்கு உரியது. சட்டமா அதிபர் ஜெப் செஷன்ஸ், ரஷ்ய விசாரணைகளிலிருந்து ஒதுங்கியுள்ளதால், பிரதி சட்டமா அதிபர் றொட் றொசென்ஸ்டெய்னால் அவர் நியமிக்கப்பட்டார். அவரும், குடியரசுக் கட்சி ஆதரவாளராவார். எனவே, கட்சிச் சார்பு என்ற குற்றச்சாட்டு, உண்மையற்றது என, ஜனாதிபதி ட்ரம்ப்பின் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago