2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கலை இலக்கியச் சந்திப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

  கே.எல்.ரி.யுதாஜித்

'இருபொழுதில் கூடல் - பேசிப்பறைதல்' எனும் தொனிப்பொருளிலான இலக்கியச் சந்திப்பும் கலந்துரையாடலும், மட்டக்களப்பு தாளங்குடா தேசியக் கல்லூரியில், நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.

சமகால படைப்புலகம் பற்றிய சிந்தனைகளை உருவாக்குதலும் படைப்பாளிகளிடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் மறுகா கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில், இந்த இலக்கியச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

சிறுகதை, நாவல், கவிதை, கலை என இரு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த இலக்கியச் சந்திப்பில், 25ஆம் திகதி சனிக்கிழமை  காலை 9.15 மணிக்கு தொடக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.

தொடக்கவுரையை, மறுகா கலை இலக்கிய வட்டத்தின் தலைவரும் பேசிப்பறைதல் நிகழ்வின் ஏற்பாட்டாளருமான த.மலர்ச்செல்வன் நிகழ்த்துவார்.

பாரம்பரியக் கூத்து, மெல்லிசைப்பாடல், மக்கள் பாடல்கள்களுடன் நடைபெறவுள்ள இந்த இலக்கியச் சந்திப்பில், முதல்நாள் காலை நடைபெறும் சிறுகதை தொடர்பான அமர்வை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஐ.சாந்தன் தலைமையேற்கிறார்.

இந்த அமர்வில், 'சிறுகதை மாற்றமும் அடையாளப்பிரச்சினையும்' என்ற தலைப்பில் எழுத்தாளர் யதார்தன், 'புதிய தளங்களில் சிறுகதைகள்' எனும் தலைப்பில் எழுத்தாளர் அம்பிரிதா ஏஜெம், 'சமகால சிறுகதைகளின் அரசியல்' என்ற தலைப்பில் கவிஞரும் எழுத்தாளருமான அ.ச.பாய்வாவும் உரை நிகழ்த்துகின்றனர்.

மாலை 2.30 மணிக்கு நடைபெறும் நாவல் தொடர்பான அமர்வை, கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராசா தலைமையேற்கிறார்.

இதில், 'புனைவு வெளியில் நாவல்' எனும் தலைப்பில் - எழுத்தாளர் சாஜித், 'நாவல் தமிழில் எத்தகையது?' எனும் தலைப்பில் எழுத்தாளர் ஜிப்பிரிஹசன், 'பிரதிகளின் அரசியலும் கதைமாந்தர்களும்' எனும் தலைப்பில் விமர்சகர் சி.ரமேஸ், 'சமகால மலையக இலக்கியம்' எனும் தலைப்பில் இலக்கியச் செயற்பாட்டாளர் சுதர்மமகாராஜன் ஆகியோர் உரையாற்றுவர்.

அன்றைய தினம் மாலை 7 மணிக்கு, கோவில் குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வைகுந்தம், சுபத்திரை கல்யாணம் ஆகிய கூத்து ஆற்றுகைகள் நடைபெறவுள்ளன.

இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் கவிதை அமர்வுக்கு அக்கரைப்பற்றைச் சேர்ந்த கவிஞர் றியாஸ் குரானா தலைமையேற்கிறார்.

இதில், 'கவிதையும் புரிதலும்' என்ற தலைப்பில் கவிஞர் வாசுதேவனும்;, 'மாற்றுக் கவிதைகள் அல்லது புதிய கவிதைகள்' என்றத் தலைப்பில் கவிஞரும் படைப்பாளியுமான கருணாகரனும் 'கவிதைகளின் புதிய வழி' என்றத் தலைப்பில்  கவிஞர் கிரிசாந்தும், 'திரைமொழி - கல்குடா மீனவர்கள்' எனும் தலைப்பில் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான ஹசின் ஆகியோர் உரையாற்றுவர்.

கலை என்ற தலைப்பில், ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு நடைபெறும் இறுதி அமர்வை, எழுத்தாளரும் கவிஞருமான வே.தவராஜா (ராசாத்தி) தலைமையேற்கிறார்.

இந்த அமர்வில் 'மக்கள் கலையாக்கக்; கூத்து' என்றத் தலைப்பில் கலைச் செயற்பாட்டாளர் து.கௌரீஸ்வரன், 'புலம்பெயர் நாடுகளின் மக்கள் கலை' என்ற தலைப்பில் கலைச் செயற்பாட்டாளர் களப்பூர் தங்கா, 'இயங்குநிலைக் கலைகளின் செயற்பாடுகளும் சவால்களும்' என்றத் தலைப்பில்- கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் எஸ்.சந்திரகுமார் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X