2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அன்னை’ இந்திரா

என்.கே. அஷோக்பரன்   / 2018 ஜூலை 02 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 150)

அதிகரித்த இந்திய அழுத்தம்  

1984 ஒக்டோபர் இறுதிவாரத்தில், தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத்தாக்குதல்கள், இலங்கை அரசாங்கத்தையும் ஜனாதிபதி ஜே.ஆரையும் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.  

 தன்னுடைய இராணுவவழித் தீர்வுத் திட்டத்துக்கு, இந்தியா கடும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்று ஜே.ஆர், மீண்டும் உணர்ந்த தருணம் இது. 

இதேவேளை, 1984 ஒக்டோபர் 27ஆம் திகதி, அமெரிக்க துணை இராஜாங்கச்  செயலாளர் றிச்சட் மேர்ஃபி, இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்தித்திருந்தார்.   

சந்திப்பைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், “இலங்கை இனப்பிரச்சினை, அரசியல் ரீதியில்தான் தீர்க்கப்பட வேண்டும்; ஆனால், அது இலங்கை அரசாங்கத்தால்தான் தீர்க்கப்பட வேண்டுமேயன்றி, அந்நியர்களால் அல்ல” என்று குறிப்பிட்டிருந்தார். அவர் அங்கு, ‘அந்நியர்’ என்று சுட்டியது, இந்தியாவைத் தான் என்பது வௌ்ளிடைமலை. 

ஜே.ஆரைச் சமாதானப்படுத்த, இத்தகைய கருத்தை அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் தெரிவித்திருந்தாலும், இலங்கை விவகாரத்தில், இந்தியாவுடன் நேரடியாக முரண்பட, அமெரிக்கா ஒரு போதும் தயாராக இருக்கவில்லை என்பதையும் நாம் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.   

இலங்கைக்கு நேரடியாகவும், வௌிப்படையாகவும் அமெரிக்கா எந்த இராணுவ உதவியையும் செய்யவில்லை. இதுபற்றிக் கருத்துரைக்கும் கே.எம்.டி.சில்வா, ‘இந்திய இராஜதந்திர அழுத்தமானது, மேற்கு நாடுகள் இலங்கைக்கு இராணுவ ரீதியில் உதவுவதைத் தடைசெய்தது. ஆனால், இந்திய அழுத்தத்துக்கு உட்படாத பாகிஸ்தான், சீனா மற்றும் இஸ்‌ரேல் ஆகிய நாடுகளிடமிருந்து இலங்கை, தனக்கு தேவையான இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொண்டது’ என்று அவர் பதிவு செய்கிறார்.   
இதில், இஸ்‌ரேல், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் செய்த உதவிகளுக்குப் பின்னால் இருந்தது, அமெரிக்காதான் என்று சில விமர்சகர்கள் கருதுகிறார்கள். 

இலங்கைப் பிரச்சினையையும் ‘பனிப்போரின்’ ஓர் அங்கமாக, அக்ஷய் மிஷ்ரா விவரிக்கிறார். அன்றைய, சோவியத் சார்பு இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் நடந்த பனிப்போரின் முக்கிய களம், இலங்கைத் தீவு என்று அவர் விவரிக்கிறார். 

இந்த விவரணத்தின் ஏற்புடைமை பற்றிய வாதத்தைவிட, இலங்கையின் அரசியலில் சர்வதேச நாடுகளின், வல்லரசுகளின் பங்கு எவ்வளவு தூரம் இருந்தது என்பதை உணர்தல்தான் இங்கு முக்கியமானது.  

 திரைகளுக்கு பின்னால் நடக்கும், இந்த இராஜதந்திர மற்றும் பூகோள அரசியலைப் புரிந்து கொள்ளாமல், இலங்கை அரசியலைப் புரிந்துகொள்ள முடியாது. 

இலங்கையின் 30 வருட கால யுத்தம் என்பது, வெறுமனே, இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ் இளைஞர்ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் நடந்தது என்ற புரிதல் மேலோட்டமானது. அது மட்டுமல்ல, அர்த்தமற்றதும் கூட. 

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறு வடிவமைக்கப்பட்டது; தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் எவ்வாறு உருவாகின; அவற்றின் அரசியல் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது. 

இவை அனைத்தின் பின்னணியிலும் இருந்தவர்கள் யார்? பின்னணியிலிருந்த அரசியல் என்ன? என்பவற்றைப் புரிந்துகொள்ளாது, இலங்கையின் இனப்பிரச்சினையையும் யுத்தத்தையும் அரசியலையும் நாம் புரிந்துகொள்ள முடியாது.  

இந்திராவின் அகால மரணம்  

ஜே.ஆரின் ‘இராணு ரீதியான அணுகுமுறை’ என்ற திட்டத்துக்கு, இந்தியா சிம்மசொப்பனமாக இருந்தது.

இலங்கைக்கு விஜயம் செய்த, அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதி டொனல்ட் றேகனின் விசேட தூதுவர் வேர்னன் வோல்டேர்ஸ், “இலங்கை மீது நேரடி இராணுவ நடவடிக்கையை இந்தியா முன்னெடுக்கக்கூடும்” என்ற எச்சரிக்கையை, ஜனாதிபதி ஜே.ஆருக்குத் தெரிவித்திருந்தார். 

மேலும், இந்தியாவுக்கு விஜயம் செய்த அவர், “இலங்கை மீது நேரடி இராணுவ நடவடிக்கையை, இந்தியா மேற்கொள்ளக்கூடாது” என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார். 

ஆனால், அன்றைய இந்தியா, அமெரிக்க சார்புடைய இந்தியாவாக இருக்கவில்லை. ஆகவே, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை என்று வோல்டேர்ஸ் கூறியதையும் கே.எம்.டி சில்வா பதிவுசெய்கிறார். 

இந்தச் சிக்கல் நிறைந்த சூழலில்தான், 1984 ஒக்டோபர் 31ஆம் திகதி, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அவரது மெய்ப்பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்படும் துயரச்  சம்பவம் இடம்பெற்றது. 

இந்த அதிர்ச்சி மிக்க சம்பவம், ஜே.ஆர் அரசாங்கத்துக்குத் துயரத்திலும் ஓர் ஆசிர்வாதமாக அமைந்தது. தொடர்ந்த இந்திய அழுத்தத்திலிருந்து, ஜே.ஆருக்கு மூச்சுவிட, ஒரு சிறிய இடைவேளை கிடைத்ததைப் போல, இந்தச் சம்பவம் அமைந்தது. 

மேலும், ஜே.ஆர் - இந்திரா ஆகியோருக்கு இடையிலான உறவு, மிகப் பலவீனமானதாகவும் பரஸ்பர ஐயமும், நம்பிக்கையீனமும் கொண்டதாக அமைந்திருந்தது.

இந்த நிலையில் இனி மாற்றம் வரும் என்று ஜே.ஆர் எதிர்பார்த்தார். குறிப்பாக, அடுத்ததாக ஆட்சிக் கட்டில் ஏறிய, இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி, இந்திரா போலல்லாது, நேரு போல, இலங்கை விவகாரத்தைக் கையாள்வார் என்று, ஜே.ஆர் எதிர்பார்த்ததாக கே.எம்.டி சில்வா குறிப்பிடுகிறார்.   

சோகத்தில் தமிழர்கள்  

இந்திராவின் அகால மரணம், இலங்கைத் தமிழ்த் தலைமைகளை, மிகுந்த அதிர்ச்சிக்குள் தள்ளியிருந்தது. “தமிழர்களின் இனப்படுகொலையைத் தடுக்கும் ஒரே தடுப்பரணாக இருந்தவர், இந்திரா காந்தி” என்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மிகுந்த சோகத்துடன் கருத்துரைத்தார்.   

எதிர்காலம் பற்றி, நிச்சயமற்றிருந்த தமிழர்கள், இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, அச்சத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். ராஜீவ் காந்திக்கு, அமிர்தலிங்கம் அனுப்பிய தந்தியில், ‘இலங்கை மக்கள், தமது தாயை இழந்துவிட்டார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.  

 ராஜீவ் காந்திக்கு, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் துயர்பகிர்வுக் கடிதமொன்றை அனுப்பி இருந்தார். 

அதில், இந்திரா காந்தியை ‘அன்னை’ என்று விளித்திருந்தவர், இந்திரா காந்தியின் கொலையை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றமென்றும் அதைத் தாம் கண்டிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.  

 மேலும், அன்னை இந்திரா, அடக்குமுறைக்குள்ளான தமிழீழ மக்கள் மீது இரக்கமும், புரிந்துணர்வும் கொண்டிருந்ததுடன், அவர்களுக்கு உதவியும் செய்ததாகவும் குறிப்பிட்டதுடன், அவரது தனிப்பட்ட அக்கறை இல்லாவிட்டால், எமது சமூகம் துடைத்தெறியப்பட்டிருக்கும் என்றும், தமிழ் மக்கள் எப்போதும் இந்திரா காந்தியை அன்புடனும், மரியாதையுடனும், தீராத நன்றியுடனும் நினைவுகூர்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.  

 இந்திரா காந்தியின் மறைவின் சோகம், வெறுமனே ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளாலும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களாலும் மட்டும் வௌிப்படுத்தப்படவில்லை; மாறாகத் தமிழர் தாயகமே, இந்திராவின் அகாலமரணச் செய்தியறிந்து சோகமயமாகி இருந்தது. 

தமிழர் தாயகமெங்கும், வீடுகள் உட்படக் கறுப்புக் கொடிகள் பறந்தன; கடைகள், பாடசாலைகள் மூடப்பட்டன; போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.   

மறுபுறத்தில், இந்திரா காந்தியின் அகால மரணம், சிங்கள-பௌத்த தேசியவாத அரசியல் தலைமைகளுக்கு மகிழ்ச்சியைத் தந்ததாக, சில விமர்சகர்கள் பதிவு செய்கிறார்கள்.   

வடக்கில், இலங்கை இராணுவத்தினர் சிலர், துக்கம் அனுஷ்டித்த தமிழ் மக்களை நோக்கி, “அம்மா எங்கே?”, “அம்மா எங்கே?” என்று, நக்கலாகக் கேட்டதாகவும் சிலர் பதிவு செய்கிறார்கள்.   

இந்திரா காந்தியின் மரணம், எத்தகைய மகிழ்ச்சியைத் தந்திருக்குமென்பது, இந்திரா காந்தி என்ற ஆளுமையின் கீழான, இந்தியா என்ற பிராந்திய வல்லரசின் மீதான அச்சமும், அதிருப்தியும் எவ்வளவு தூரம் இலங்கை அரசியலில் ஊடுருவி இருந்தது என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.   

தனிப்பட்ட உணர்வுகள் எவ்வாறு அமைந்திருந்தாலும், இந்திரா காந்தியின் இறுதிச் சடங்குகள் இடம்பெற்ற 1984 நவம்பர் மூன்றாம் திகதியை, இலங்கை அரசாங்கம் துக்கதினமாக அறிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.  

இந்திரா காந்தியின் மரணச் செய்தி வௌிவந்த நாள் முதல், அமைதி காத்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கு நடைபெற்ற நவம்பர் மூன்றாம் திகதி, ஏறத்தாழ அரைமணிக்கொருமுறை, வடக்கில் குண்டுகளை வெடிக்கச் செய்தன. 

‘இது மரியாதையின் முகமாக நடத்தப்பட்டது’ என்று, ரீ.சபாரட்ணம் தன்னுடைய நூலில் கருத்துரைக்கிறார்.  

புதியதோர் ஆரம்பம்  

இந்திராவின் மரணம், ஜே.ஆருக்கு மூச்சுவிட, ஓர் இடைவௌியை மட்டுமல்ல, புதிய தலைமையுடனான, புதிய உறவொன்றைக் கட்டியெழுப்பக்கூடிய வாய்ப்பையும் உருவாக்கி இருந்தது.   

இந்திராவின் அகால மறைவைத் தொடர்ந்து, இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி, பிரதமராகப் பதவியேற்றிருந்தார். ராஜீவின் அரசியல் பிரவேசம் கூட, சந்தர்ப்ப சூழலால் அமைந்தது என்பதுதான் பொது அபிப்பிராயம்.   

இந்திராவின் அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவர் ராஜீவின் தம்பியான சஞ்சய் காந்தியே. 
விமானியாகப் பயிற்சி பெற்றிருந்த ராஜீவ், இந்திய விமானசேவையில் விமானியாகப் பணியாற்றிக் கொண்டிருந்ததுடன், 1980 வரை அரசியலிலிருந்து விலகியே இருந்தார்.   

சஞ்சய் காந்திதான், நேரு-காந்தி குடும்பத்தின் அடுத்த அரசியல் வாரிசாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, அவரது தாயார் இந்திரா காந்தியுடன், அரசியல் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.  
 1980 ஜூன் மாதத்தில், விமான சாகச முயற்சியொன்றில் ஏற்பட்ட விபத்தில், சஞ்சய் காந்தி உயிரிழந்தார். 

அதைத் தொடர்ந்து, இந்திராவின் வற்புறுத்தலின் பெயரில், ராஜீவ் காந்தி 1980இன் பிற்பகுதியில் அரசியலில் நுழைந்தார்.  

 1984 நவம்பரில் ராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற போது, அவரது நேரடி அரசியல் அனுபவம் என்பது ஏறத்தாழ நான்கு வருடங்களேயாகும். அவர் அரசியலுக்கு அந்நியர் இல்லை.   

ஆனால், அவரது வாழ்வின் பெரும்பகுதி, அரசியலிலிருந்து அந்நியப்பட்டே இருந்ததால், அவரது நேரடி அரசியல் கள அனுபவம் என்பது, மிகக் குறைவானது. ஜே.ஆர் இதனை ஒரு நல்ல சந்தர்ப்பமாகப் பார்த்தார்.   

இந்திராவுடன் தனக்கு உருவாக்க முடியாதிருந்த நல்ல உறவை, ராஜீவுடன் உருவாக்குவதற்கான நல்லதோர் ஆரம்பமாக, இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கை அவர் பயன்படுத்தினார்.  

 இந்திரா காந்தியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள டெல்லி சென்ற ஜே.ஆர், ராஜீவுடன் மிகச் சுருக்கமான சந்திப்பொன்றை நடத்தியிருந்ததோடு, அந்தச் சந்திப்பில், தனது ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார்.   

இந்தியாவானது, தமிழ் மக்களுக்குச் சார்பாக நடந்துகொள்வதாகவே இலங்கை மக்கள் கருதுகிறார்கள் என்றும், அதற்காகவே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுப்பதாக இலங்கை மக்கள் உணர்கிறார்கள் என்றும் ராஜிவிடம் எடுத்துரைத்த ஜே.ஆர். இந்தியாவின் செல்வாக்கை தாம் விரும்பும் அதேவேளை, இலங்கை தொடர்பில் இந்தியா புதியதோர் அணுகுமுறையை முன்னெடுக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டிருந்தார்.   

இதற்கு ராஜீவிடமிருந்து சாதகமானதொரு பதில் கிடைத்ததானது, ஜே.ஆருக்கு நிறைந்த நம்பிக்கையைத் தந்தது.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .