2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எல்லை தொடர்பான சீனாவின் அதிகாரப்போக்கு

Editorial   / 2018 ஜனவரி 01 , மு.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

எல்லை வரையறை, எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில், ஆசியப் பிராந்திய ஒழுங்துக்கு  மிக முக்கியமான சவாலாக சீனா அமைந்தபோதிலும், அண்மைக்காலங்களில் 23 எல்லைப் பிராந்திய பூசல்களில் 17, சீனாவின்   கணிசமான பிராந்திய சமரச அடிப்படையில் தீர்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் ஹொங்கொங், மக்காவின் எல்லை மறுசீரமைப்பு, சீனாவால் சமரச முயற்சியின் அடிப்படையில் தீர்க்கப்படாமைக்கு சீனா முன்வைக்கும் காரணங்களில் ஒன்று? குறித்த சமரச முயற்சிகள் சீனாவின் தேசிய பாதுகாப்புக்கும் விருப்புக்கும் முரணாக அமையும் நிலையாகும் என்பதுடன், தேசிய நலனுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், கிளர்ச்சிகள், சட்டபூர்வமான நெருக்கடிகள் முன்வைக்கப்பட அவை காரணமாக அமையலாம் என்பதேயாகும். ஏனைய ஆறு எல்லைப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, சீனா தனது கொள்கையை, பல்லாண்டு காலமாக மாற்றாமையே காரணம் எனலாம்.

இந்தியாவின் விடயத்தில், எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் அளவுருக்கள், 2005இல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட போதிலும், சீனா தொடர்ச்சியாக தனது எல்லை மீள்நிர்ணயத்தை, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை உள்ளடங்கலாக விரிவுபடுத்தியமையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருந்தது.

தென்கிழக்கு ஆசிய கடல் எல்லையைப் பொறுத்தவரையிலும் பிரிக்கப்பட முடியாத இறைமை என்னும் அடிப்படையில், சீனாவின் தொடர்ச்சியான ஆதிக்கமே 80 சதவீதமான கடல் பிராந்தியம், சீனாவுக்குச் சொந்தமானது என்ற ஆட்புல நிர்ணயமும், அதைத் தொடர்ந்து, சர்வதேச தீர்ப்பாயம் குறித்த சீனாவின் ஆதிக்கம் சர்வதேச நீதிக்கு முரணானது எனத் தீர்ப்பளித்தமையையும் அவதானிக்கலாம். தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் தொடர்ந்தும், சீனா தனது ஆதிக்கத்தை குறித்த கடற்பரப்பில் செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு சீன கடல் எல்லையைப் பொறுத்தவரை, ஜப்பானுக்குச் சொந்தமான சென்காக்ஸ் தீவுத்திடலைகளை, தனது வான்படைக்கு சொந்தமான பாதுகாப்பு நிலப்பரப்பாக சீனா பிரகடனம் செய்தமையைத் தொடர்ந்து, ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தாய்வானைப் பொறுத்தவரை, ஆயுத நடவடிக்கையை செயற்படுத்தியாவது, தம்முடன் தாய்வான் இணைந்திருப்பதை உறுதிசெய்ய சீனா ஆயத்தமாய் இருப்பது, சீனாவின் பிராந்திய எல்லை நிர்ணயம் தொடர்பான வன்போக்குக்கு, இன்னோர் எடுத்துக்காட்டாகும்.

ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அடுத்ததாகப் பொருளாதார வல்லரசாகவும், ஆசியாவின் இராணுவ வல்லரசாகவும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவமும் பெற்ற சீனா, மேற்குறித்த எல்லை மீள்நிர்ணயங்களால் எவ்வாறாக சர்வதேச மட்டத்தில், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார, பாதுகாப்புக் கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதைப் பற்றியே, இப்பத்தி ஆராய்கின்றது.

இந்திய, ஜப்பானிய எல்லைகள் மீதான திணிப்புகளையும் நெருக்கடிகளையும் உருவாக்கும் வகையில், அச்சுறுத்தும் முயற்சிகள், சீனாவால் கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவையும் ஜப்பானையும், மூலோபாய பங்காளித்தனமொன்றைத் தோற்றுவிக்கத்  தூண்டிவிட்டன. இவை, ஜப்பானும் இந்தியாவும், வருடாவருடம் இராஜதந்திர, பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகள் மூலமான இருதரப்பு பாதுகாப்புப் பயிற்சிகள், ஆயுத பரிவர்த்தனையையும், கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் விரிவுபடுத்துவதன் மூலம், அவற்றில் உருவான கூட்டாண்மையை உறுதிப்படுத்துவதற்குக் காரணங்களாய் அமைந்திருந்தன. குறித்த கூட்டாண்மையானது, அவுஸ்திரேலியாவுடனும் ஐ.அமெரிக்காவுடன் தனித்தனி முக்கோண உரையாடல்களையும் பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளுதல், வருடாந்த மலபார் பயிற்சிகளில் நிரந்தர உறுப்பினராக ஜப்பான் சேர்த்துக்கொள்ளப்படுவது, இந்த நான்கு நாடுகளால் அண்மையில் தோற்றுவிக்கப்பட்ட நான்குமுனை உரையாடல் என்பன, சீன ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு மென்போக்கான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகின்றது.

தாய்வான் பிரச்சினையைப் பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கொள்கைகள், மிகவும் சுயாதீனமாக மாற்றமடைந்தமை, கவனிக்கப்பட வேண்டியதாகும். ஜம்மு மற்றும் காஷ்மிரின் குடியிருப்பாளர்களுக்கு, நிரந்தர வதிவிட உரிமை விசாக்களை சீனா வழங்கியதன் காரணமாக, அதன் கொள்கையில் ஒரு மாற்றத்தைச் சுட்டிக்காட்டி, இந்தியா, 2010இல் இருந்து சீனாவின் ஒரு நாட்டு கொள்கைக்குப்  புறம்பான கொள்கையை இந்தியா அறிவித்திருந்தது. ஓகஸ்ட் 2017இல், இந்திய மக்களவையில், மாநில அமைச்சர் வி.கே.சிங்கால், குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட வேளையில் அவர், “தாய்வான் மீதான இந்தியாவின் கொள்கையானது, தெளிவானது என்பதோடு, உறுதியானது... வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கலாசாரம், கல்வி, பங்குச்சந்தைகளில் ஊக்குவிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் கொள்கையில், எந்த மாற்றமும் இல்லை” எனத் தெரிவித்திருந்தமைவனிக்கப்படவேண்டியதாகும்.

ஜப்பானைப் பொறுத்தவரையிலும் 1970களில் மட்டும் “ஒரு சீனா” கொள்கைக்கு உறுதியளித்த ஜப்பான், அதன் பங்குக்கு, 2000ஆம் ஆண்டுகளில் இருந்து தாய்வானுடனான தொடர்பை அதிகப்படுத்தியுள்ளதுடன், ஐ.அமெரிக்காவுடன் இணைந்து, தாய்வானின் பிரச்சினைக்கு, பொதுவான மூலோபாயத் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கான அவசியத்தை அடையாளம் காட்டியது. ஜப்பான் - ஐ.அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான 2015 வழிகாட்டுதல்கள், “முன்திட்டமிட்ட புவியியல் வரம்பை”? அதன் சுற்றுப்பாதையாக வரையறுக்கவில்லை என்றாலும், இந்நிகழ்ச்சிநிரலானது, ஜப்பான் அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான சட்டங்களை இயற்றியமை, அதன் ஆயுதப் படைகளின் வெளிநாட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியிருந்தமை என்பதுடன், சமாந்தரமாகப் பார்க்கப்படவேண்டியதாகும்.

இது தவிர இந்தியாவும் ஜப்பானும், சீனாவுடனான தங்கள் பிராந்திய எல்லைப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதில் படிப்படியாக முன்னேறத் தொடங்கி இருப்பது, இவ்விரு நாடுகளினதும் வெளிவிவகாரக் கொள்கைகளின் அடிப்படையிலான, ஒரு சமீபத்திய நடவடிக்கையாகும்.

எது எவ்வாறாயிருப்பினும், இரு நாடுகளுக்கும் ஒரு முக்கிய பொருளாதார பங்காளியான சீனாவை, நேரடியாக எதிர்க்க அவை தலைப்படாது என்பதுடன், சீனாவுடன் இணைந்த மூலோபாய பொருளாதாரப் பங்காளித்துவத்தைக் கட்டமைப்பதில், இன்னமும் ஒருமித்த கருத்துடையவைகளாகவே இருக்கின்றமை அவதானிக்க வேண்டியதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .