2024 மார்ச் 28, வியாழக்கிழமை

குட்டையைக் குழப்பும் விக்கி

Johnsan Bastiampillai   / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-புருஜோத்தமன் தங்கமயில்  

முதலமைச்சர் பதவிக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தகுதியற்றவர் என்று, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து, அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.  

சித்திரை வருடப் பிறப்புக்கு முதல் நாள், சமூக காணொளி ஊடகமொன்றுக்கு விக்னேஸ்வரன் பேட்டியளித்தார். வழக்கம் போலவே, அந்தப் பேட்டியும் முன்னதாகவே கேள்வி- பதில்கள் தயார்படுத்தப்பட்டு, அதன் பிரதிகளை வைத்துக் கொண்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதாவது, ஏற்கெனவே தயார்படுத்தப்பட்ட கேள்விகளை நெறியாளர் கேட்டதும், அதற்குப் பதில்களை பிரதித் தாள்களைப் பார்த்து, விக்னேஸ்வரன் வாசிப்பார். அப்படித்தான் அந்தப் பேட்டியும் போய்க் கொண்டிருந்தது. 

ஆனால், வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பிலான கேள்விக்கு, விக்னேஸ்வரன் ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட பதில்களுக்குப் பதிலாக, அந்தத் தருணத்தில் தோன்றிய பதிலை வழங்கியது போன்ற தோற்றம் காணப்பட்டது.  

அந்தப் பதில், “....முதலமைச்சர் பதவிக்கு மாவை சேனாதிராஜா தகுதியற்றவர். அதனால்தான், 2013இல் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என்னை முன்னிறுத்தினார். வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக வேலன் சுவாமியை முன்னிறுத்தலாம். அனைத்துக் கட்சிகளும் இணைந்து கோரிக்கை விடுத்தால், மீண்டும் நான் முதலமைச்சர் வேட்பாளராகுவது குறித்துச் சிந்திப்பேன்...” என்றவாறாக இருந்தது.  

அடிப்படை அரசியல் நாகரிகம், அரசியல் அறம் பற்றிய எந்தவித எண்ணமும் இல்லாத ஒருவராக விக்னேஸ்வரன், தேர்தல் அரசியலுக்கு வந்த காலம் முதல் காண்பித்து வந்திருக்கிறார். 

அத்தோடு, அவர் நேரடி அரசியலுக்கு வந்து சுமார் எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், அரசியலில் இன்னமும் முன்பள்ளிக் காலத்து பிள்ளைகளின் நடவடிக்கைகளுக்கு ஒப்பான ஓர் அரசியல்வாதியாகவே இருக்கிறார்.   

அரசியல் உரையாடல்களில், ஏற்கெனவே தயார்படுத்தப்பட்ட உரைகள், கேள்வி- பதில்கள் இல்லாத பல சந்தர்ப்பங்களில், தன்னுடைய உண்மையான அரசியல் அறிவின் அளவு எப்படி என்று நிரூபித்து இருக்கின்றார். மாவை குறித்த ‘முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்’ என்கிற கூற்றும், அப்படிப்பட்ட ஒன்றுதான்.  

அரசியல்வாதிகளோ, பேச்சாளர்களோ யாராக இருந்தாலும், ஏற்கெனவே தயார்படுத்தப்பட்ட உரைகளை ஆற்றுவது குறித்து, எவ்வித பிரச்சினைகளும் இல்லை. அப்படியான உரைகள், பல நேரங்களில் நேர்த்தியாக அமையும் என்பது திண்ணம். 

ஆனால், ஓர் அரசியல்வாதி அல்லது சமூகத்தின் தலைவனாகத் தன்னை முன்னிறுத்தும் ஒருவர், கேள்விகளுக்கான பதில்களை உடனடியாக வழங்கும் வன்மையோடும் இருக்க வேண்டும். அது, மக்களின் மனங்களைப் பிரதிபலிப்பதனூடும், அரசியல் மாற்றங்களை உள்வாங்கி, சமயோசிதமாகச் சிந்திப்பதனூடும் வருவது. அது, சிலருக்கு இயல்பாக வாய்க்கும். இன்னும் சிலரோ, படிப்பினைகள் மூலம் அதை வளர்த்துக் கொள்வார்கள். 

ஆனால், விக்னேஸ்வரன், தனக்கு இல்லாத ஒன்றை, வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. அதுதான், அவரின் முன்பள்ளிக்காலத்து அரசியல் நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.   

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக, எண்பது வயதை அண்மிக்கும் மாவை சேனாதிராஜா முன்னிறுத்தப்பட்டால், அது கடுமையான விமர்சனத்துக்குரியது.  ஏற்கெனவே ஒரு தடவை, வடக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றி, ஏதும் செய்யாது கோட்டைவிட்ட பெருமை கூட்டமைப்புக்கு இருக்கிறது. 

அப்படியான நிலையில், அரசியல் தூரநோக்கும், நிர்வாக அனுபவமும் உள்ள ஒருவர், குறிப்பாக, வயது மூப்பால் அல்லாடாத ஒருவர், கூட்டமைப்பால் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டும்; அதன்மூலம், செயற்பாட்டுத் திறனுள்ள மாகாண சபையைக் கட்டமைக்க வேண்டும். மாறாக, பதவிகளுக்காக அங்கலாய்க்கும் தரப்புகளால் ஆக்கிரமிக்கப்படும் மாகாண சபையொன்று, இனியும் உருவாகக் கூடாது.  

கடந்த பொதுத் தேர்தலில் மாவை சேனாதிராஜா தோற்றதும், அவரை முதலமைச்சர் கனவுக்குள் பல தரப்புகளும் சேர்ந்து தள்ளின. குறிப்பாக, அவரோடு சேர்ந்து கடந்த தேர்தலில் தோற்றுப்போனவர்களும் அவரை முதலமைச்சர் கதிரையில் ஒப்புக்கு இருந்திவிட்டு, மாகாண சபையைத் தாங்கள் ஆக்கிரமிக்கலாம் என்று காத்திருக்கும் சில குள்ள நரிகளுமே, இத்தகைய உசுப்பேத்தல்களின் பின்னணியில் இருக்கிறார்கள்.  

2013ஆம் ஆண்டு காலத்தில் முதலமைச்சர் வேட்பாளராக, மாவை முன்மொழியப்பட்டிருந்தால் அது வரவேற்கப்பட்டிருக்கும். அதன் மீதான விமர்சனங்கள் பெரியளவில் எழுந்திருக்கவும் வாய்ப்பில்லை. 

ஆனால், தற்போதுள்ள நிலையில், உடல்நிலை, வயது மூப்பு அத்தோடு குடும்ப அரசியல் ஒன்றுக்கான ஆர்வம் உள்ளிட்ட பாதகமான விடயங்கள், அவரை முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்துவதில் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன. 

அத்தோடு, கடந்த சில ஆண்டுகளாக அவர், தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த போதிலும், கட்சியைக் கட்டுக்கோப்பாகப் பேணாத நிலையில், அவர் தலைமையில் அமையும் மாகாண சபைக்குள், அதன் அமைச்சர்களும் உறுப்பினர்களும் எப்படி கட்டுப்படுவார்கள் என்ற கேள்வி முக்கியமானது?  

தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து, வயது மூப்பு குறிப்பாக, நாளாந்த அரசியல் நடவடிக்கைகளை மற்றவர்களின் உதவியின்றிச் செய்ய முடியாத நிலையில் இருக்கின்ற அனைத்து அரசியல்வாதிகளும், தேர்தல் மைய அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டு கட்சிகளின், அமைப்புகளின் போசகர்கள் நிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட யாரும் விதிவிலக்கல்ல. 

மக்கள் நலன் சார் அரசியலில், அடுத்த தலைமுறைத் தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்தல் என்பது தார்மீகமாகும். ஆனால், அந்தத் தார்மீகத்தை, தந்தை செல்வாவுக்குப் பிறகு எந்த தமிழ்க் கட்சியின் தலைவரும் செய்யவில்லை என்பது வெட்கக் கேடானது. 

இதில், பல தலைவர்களும் அடுத்த கட்டத் தலைவர்கள் உருவாகுவதைத் தடுத்துக் கொண்டிருப்பவர்கள். அதில் சம்பந்தன் ஓரளவுக்குப் பொறுப்புடன் இருந்திருக்கின்றார். அடுத்த தலைமுறைத் தலைவர்களாக ஒரு சிலரை, அவர் அடையாளப்படுத்தி இருக்கிறார்.  

ஆனால், விக்னேஸ்வரனைப் பொறுத்தளவில், தன்னுடைய எழுபது வயதின் பின்னர், அரசியல் கட்சியை ஆரம்பித்த அவர், தனது கட்சிக்குள் இரண்டாம் நிலைத் தலைவர் என்ற ஒருவரை, இதுவரை அடையாளப்படுத்தவே இல்லை. மாறாக, தானே ஏகமும் என்கிற நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறார். 

அப்படியான நிலையில் இருந்து கொண்டு, மற்றவர்களின் தகுதி குறித்துக் கருத்துக்கூற முனைவது, அரசியல் அறமன்று.  

கடந்த பொதுத் தேர்தலில், விக்னேஸ்வரன் வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு ஒரு தொகுதி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அதனை மதிக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும். 

ஆனால், அந்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்ளாமல், தனியாவர்த்தனம் செய்து, குட்டையைக் குழப்பும் வேலையை, விக்னேஸ்வரன் செய்து கொண்டிருக்கும் போது, அவரின் அரசியலுக்கான தகுதி குறித்து, மற்றவர்களும் கருத்துக்கூறவும் விமர்சிக்கவும் விளைவார்கள்.  

தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தளவில், சிறிய இடைவெளியொன்றை நிரப்பிக் கொண்டிருக்கும் ஒருவர் என்கிற அளவைத் தாண்டி, விக்னேஸ்வரனது அரசியல் ஆளுமை தொடர்பில் பட்டியல் இடுவதற்கு ஏதுமில்லை. 

கடந்த காலத்தில், விக்னேஸ்வரனைச் சுற்றி ஒளிவட்டங்களை வரைந்தவர்களும் ஜனவசியக் கட்டுரைகளை எழுதியவர்களும் கூட, இன்றைக்கு அவரை விமர்சனத்துக்குரிய  அரசியல்வாதியாகவே நோக்குகிறார்கள்.  

தன்னுடைய நீதியரசர் ஓய்வு காலத்தை, கம்பன் கழக மேடைகளில் கௌரவமாகக் கழித்துக் கொண்டிருந்த விக்னேஸ்வனை, வடக்கு அரசியலுக்கு, சம்பந்தனும் சுமந்திரனுமே அழைத்து வந்திருந்தார்கள். 

அரசியலில் அவரது பாதை சீர்செய்யப்படும் வாய்ப்புகள் அமைந்த போது, யாழ். மையவாதக் குழுவொன்று தமிழ் மக்கள் பேரவையை அமைத்து, விக்னேஸ்வரனுக்கு வாழ்வளித்தது. அது அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கியது. 

ஒவ்வொரு கட்டத்திலும் விக்னேஸ்வரனைத் தாங்கி நின்றவர்கள், அவரைக் காப்பற்றினார்கள்; ஆனால், அவர் யாரையும் காப்பாற்றவில்லை. அதன் வெளிப்பாடே ‘மாவைக்கு தகுதியில்லை’ என்கிற அவரது எண்ணக் கருத்தாகும். 

2013இல் மாவை சேனாதிராஜா, விக்னேஸ்வரனுக்கு வழிவிட்டிருக்காது விட்டால், விக்னேஸ்வரன் இன்னமும் கொழும்பில், ஏதாவது மேடையில் ஒரு பிரசங்கியாக இருந்திருப்பார். சிலவேளை, அவர் அதில் நன்றாகச் செயற்பட்டிருக்கக் கூடும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X