2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தமிழ்க் கட்சிகளுக்கு ஆதாயம்; தமிழ் மக்களுக்குச் சேதாரம்

Editorial   / 2019 மார்ச் 28 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இலட்சுமணன்

போட்டிபோட்டுக் கொண்டு அலைபேசிக் கம்பனிகள் வெகுமதிகளை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அநேக மக்கள் அது குறித்து ஆர்வம் இல்லாது இருக்கின்றார்கள்.  அதைப்போலத்தான் சேதாரங்களை நினைத்தே, அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கும் நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் இருக்கிறார்கள்.  

பொதுவாகவே, அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்பதில் நாம் எல்லோரும் கெட்டிக்காரர்கள்தான். ஆனால், பதில்களைக் கண்டுபிடிப்பதில்தான் சிரமங்களை எதிர் கொள்கிறோம். 

தமிழ் மக்களின் அரசியலில், பொதுவானதும் முக்கியமானதுமான பிரச்சினைகளிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்  உள்ள கட்சிகளுக்குள்ளேயே ஒருமித்த கருத்தில்லையென்றால், என்ன செய்வது என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. 

எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும், டெலோவின் சிறிகாந்தா ஒன்றையும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் இன்னொன்றையும் புளொட்டின் சித்தார்த்தன் வேறொன்றையும் என, வெவ்வேறு நிலைப்பாடுகளை வெளியிடுகையில், கேள்விகளும் சந்தேகங்களும் தமிழ் மக்களுக்கு ஏற்படுவது இயல்பானதே. 

இந்த இடத்தில்தான், இது கட்சிகளின் அல்லது தனிப்பட்ட அங்கத்தவர்களின் ஆதாயத்துக்கான வழியா, தேர்தல் வாக்குவேட்டையின் பாற்பட்டதா என்றெல்லாம் ஆராயவேண்டி ஏற்படுகிறது. 

கூடிப்பேசித் தீர்மானம் எடுக்கும் போது ஆமோதிப்பவர்களே, வெளியில் வேறு கதையைச் சொல்லிக் கொள்வதானது கட்டுக்கோப்பின்மையையே காண்பிக்கிறது.  பிரித்து வைத்தல், குழப்பங்களை ஏற்படுத்தல் தமிழர்களின் அரசியலின் சாதாரணமானதாக இருந்தாலும் இத்தகைய நிலைமை கவலைக்குரியதாகும். 

“ரணில் சார்புக்கு இது காலமல்ல” என்று சிறிகாந்தா அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். இத்தகைய கருத்துகள் உசிதமானவையல்ல. ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் ஒருமித்த கட்சியாகச் செயற்படுதல் வேண்டும். அவ்வாறு செயற்படவில்லை என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கக்கூடாது. ஒருமித்த கட்சியாகச் செயற்படுவதற்கான ஏற்பாடுகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான ஏற்பாடு இல்லாமை காரணமாகவே,  கூட்டமைப்பிலிருந்த இரண்டு கட்சிகள், வெளியேறிச் சென்றன. இந்த இடத்தில்தான், தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு, தலைமை இன்மையென்ற குறைபாடு, தெளிவாகத் தெரிகிறது, 

கூட்டமைப்பின் கட்சிகள், தனித்தனி வழியில் பயணிப்பவைகளாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம், இல்லாமல் போய்விட்டது; குறைந்து விட்டது என்றே அர்த்தமாகும்.  இது வெறும் எதிர்வுகூறலாக அல்லாமல், விரைவில் பொய்ப்பிக்க, வழி தேடுதல் வேண்டும். குறிப்பாக, கிழக்கு மாகாணம் இதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.

தமிழ் மக்களின் வாக்குகளை இலக்குவைத்து, ஆளும் தரப்புக் கட்சிகள், கிழக்கில் செயற்பட ஆரம்பித்திருக்கின்றன; முஸ்லிம் கட்சிகள் செயற்படுகின்றன. சோஷலிசக் கட்சி,  ஜே.வி.பி போன்ற இடது சாரிக் கொள்கையுடைய கட்சிகளும் இயங்குகின்றன. இவ்வாறானவற்றுக்குள் புதிதாகவும் கட்சிகள் முளைக்கின்றன. அண்மையில் அறிவிக்கப்பட்ட மறத்தமிழர் கட்சி, நமது தலைமுறை கட்சி போன்றவற்றைக் குறிப்பிட முடியும். அத்துடன், கிழக்குத் தமிழர் ஒன்றியம் எடுக்கும் முன்னெடுப்புகளும் செயற்பாடுகளும் மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்துகின்றன. 

“தமிழ் மக்கள், முற்று முழுதாக நம்பாத நிலையில், கிழக்கு மாகாணத்தை நிமிர்த்திவிட்டு, தேசிய அரசியலுக்குப் போக இருக்கிறேன்” என்று கூறும், கிழக்கு ஆளுநரின் கருத்தில், எந்த அடிப்படை பொதித்திருக்கிறது என்று ஆராய்ந்து கொள்ள வேண்டும். 

கிழக்கு ஆளுநர் தொடர்பில், தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற எதிர்ப்பு நிலைப்பாட்டைச் சீர் செய்வதற்கு, கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எடுக்கும் முயற்சிகள், வெற்றியளிக்குமா?

அவர் எடுக்கும் முயற்சிகள், எந்த அடிப்படையிலானவை என்று பார்த்தால், முஸ்லிம் மக்கள் சார்ந்ததா, பொதுவிலானவையா? தமிழ் மக்கள் முற்று முழுதாக நம்பாத நிலையில், அவரது அரசியல் எப்படியிருக்கும் என்பது, தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் ஒரு சவாலானதே. 

அந்த வகையில், ஆளுநர் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்; ஆளும் தரப்புடன் இணைந்திருக்கின்ற கட்சிகள், தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பவையும் பார்க்கப்பட வேண்டும். 

குறிப்பாக, 52 நாள் அரசியல் குழப்ப காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து, மஹிந்த தரப்புக்கு ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை, பதவி கொடுத்து நகர்த்த முயலும் நடவடிக்கையும் ஜனாதிபதியின் நிலைப்பாடும் கிழக்கின் அரசியலில் தாக்கம் செலுத்தவே செய்யும். 

இலங்கையில், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஆயுத ரீதியாக முடிவுக்குக் கொண்டுவந்த, மனித உரிமைகள் குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்பட வேண்டும் என்று, தமிழர் தரப்பு முயன்று கொண்டிருக்கின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை ஆட்சியிலிருந்து தூக்கி வீச எடுக்கப்பட்ட முயற்சியில், முற்று முழுதாக ஆதரவு வழங்கிய தமிழ் மக்கள், ஒற்றுமை குலைக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இது ஒரு வகையில் தோல்வியாகவே பார்க்கப்படவேண்டும். குறிப்பாக, கிழக்கு மாகாணத்துக்குப் பெரும் தோல்வியே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளின் அடிப்படையில், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆக்கியதில் தமிழ் மக்கள் தோல்வி கண்டிருக்கிறார்கள். அதேபோன்று, ரணில் விக்கிரம சிங்கவைப் பிரதமராக்கியதில்  பிரயோசனம் இருக்கிறதா என்றால், அதுவும் தோல்விதான். இந்நிலையில், தமிழ் மக்களின் நிலை என்ன என்பதுதான், முக்கிய கேள்வி. 

வடக்கை விடவும் கிழக்கில் அரசாங்கச் சார்புக்கட்சிகள் முன்னெடுக்கின்ற செயற்பாடுகள், தமிழ்த் தேசியக் கட்சிகளால் முடியாதவைகள் என்ற அடிப்படைகளின் பிரகாரமாக இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குறை கூறிக் கொண்டே, நகரும் ஆளும் தரப்பு சார் கட்சிகள், கிழக்கின் அரசியலை,  எதிர்காலத்தில் தீர்மானிப்பவையாக இருக்குமா என்ற சந்தேகம் உருவாகி வருகிறது. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பெரும்பான்மைக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றில் தமிழ்ப் பிரதிநிதிகள் போட்டியிட்டிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மாத்திரமே, தமிழ்ப் பிரதிநிதித்துவங்கள் கிடைத்திருந்தன. 

ஐ.தே.கவுக்கு ஓட்டமாவடியைச் சேர்ந்த அமீர் அலி தெரிவு செய்யப்பட்டார். கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) இணைந்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி)  தோல்வி கிடைத்தாலும் தேசியப்பட்டியலில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்ற உறுப்பினரானார். அந்த அடிப்படையில், மட்டக்களப்பில் தமிழ்ப் பிரதிநிதிகள் மூன்று பேர், முஸ்லிம் பிரதிநிதிகள் மூன்றுபேர் என்று சமப்படுத்தப்பட்டது. அடுத்து பிரதி, இராஜாங்க அமைச்சுகள் என்று மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் அமைச்சர்களானார்கள். தமிழர் தரப்பு, வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள். 

இதனை அரசியல் பலம் என்றுதான் சொல்லிக் கொள்ள வேண்டும். அதனை விடவும் பரிதாபம், கிழக்கு மாகாணத்துக்கு வருகை தரும் அமைச்சர்கள், தமக்கு அறிவிக்க வேண்டும் என்று கேட்கின்ற கேவலமான நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆட்சிக்காலம் முடிவடைகின்ற நிலையில், அபிவிருத்தியில் வடக்கைப் போல் கிழக்கும் பார்க்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வேறு முன்வைக்கப்படுகிறது. 

நல்லாட்சி அரசாங்கம், ஆட்சி அமைத்ததிலிருந்து தொடர்ச்சியாக ஆதரவு வழங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைந்து கொண்ட ஒரேயொரு விடயம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மாத்திரமே. அதுவும் 52 நாள் அரசியல் குழப்பத்தின் பின்னர், இல்லாமல் போனது. இப்போது,  அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுப்பவர்கள் என்ற பெயர் மாத்திரமே, இருந்து கொண்டிருக்கிறது. 

அந்த வகையில் தான், ஆதாயம் தமிழ் கட்சிகளுக்கு! ஆனால், தமிழ் மக்களுக்கு  சேதாரம் என்கின்ற நிலைமைதான் உருவாகியிருக்கிறது. இதனை தமிழர்கள் உணர்ந்து கொள்ள, நீண்டகாலம் எடுக்காது. 

காலம் காலமாக உரிமை, சுதந்திரம், சுயநிர்ணயம் என்று வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட தமிழ் மக்கள், தங்களை மீண்டும் வேறு ஒரு நிலைக்கு கொண்டு செல்வதில், சிரமத்தையே அனுபவிக்கிறார்கள். அது முக்கியமாக உளவியல் ரீதியான, இரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாகவே இருக்கிறது. இருந்தாலும், புதிய தலைமுறைகளின் முன் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதில், இவ்விடயங்கள் தாக்கம் செலுத்தவில்லை. 

அந்த வகையில்தான், கூட்டமைப்பிலுள்ள கட்சிகளின் தனித்தனிப் போக்குகள், எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஆதாயத்தைத் தரப்போவதில்லை. 

எப்படிப் பார்த்தாலும், ஆதாயம் அவரவர் கட்சிகளுக்குத்தான். சேதாரம் தமிழ் மக்களுக்கு என்பது தான் முடிவாக இருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X