2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதிர்ச்சியான அரசியல் தலைமை எங்களிடம் உண்டு

காரை துர்க்கா   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனிமையான ஒரு மாலைப் பொழுது; மழையோ வெயிலோ இல்லாத இ(மி)தமான ஒரு காலநிலை. யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள சனசமூக நிலையத்தில், புதினப் பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன்....  

சனசமூக நிலையத்துக்கு வெளியே இருந்த வேப்பமரத்தடி நிழலில், சிலர் அரசியல் உரையாடலில் மூழ்கிப் போயிருந்தனர். கலகலப்பாகவும் ஆனால், அர்த்தங்கள் நிறைந்ததாகவும் உரையாடல் போய்க் கொண்டிருந்தது. கதைக்கின்ற அவர்களைக் காட்டிலும், கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கிடைத்த மாதிரியான உணர்வு ஏற்பட்டது.  

“என்ன, எங்கட சுமந்திரன் ஐயா, தங்களிடம் முதிர்ச்சியான அரசியல் தலைமை உண்டு எனக் கூறியுள்ளாராமே” என ஒருவர் கூறினார்.   

“அங்கு தலைமையில் உள்ளவர்கள் எல்லாரும், எங்களைப் போல முதியவர்கள் தானே; அதைத்தான் சுமந்திரன் சொல்லியுள்ளார் போலும்” எனச் சொன்னார் இன்னொரு முதியவர். வேடிக்கையாகச் சொன்னாலும், உள்ளே மறைமுகமாக ஆழமான கருத்து உள்ளதுதானே?  

யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி வகுப்பறைக் கட்டடத் தொகுதி திறப்பு விழா, கடந்த மாத இறுதியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன், “எங்களிடம் முதிர்ச்சியான அரசியல்த் தலைமை உண்டு” எனக் கூறியிருந்தார்.   

மேலும், அங்கு அபிவிருத்தி நடவடிக்கைகளின் முக்கியத்துவம், கம்பெரலியவின் நோக்கம் எனப் பல விடயங்களைத் தொட்டுப் பேசி உள்ளார். அபிவிருத்தி நடவடிக்கைகள், முக்கியத்துவம் நிறைந்தனவே; அவை விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டியவைகளே; அதில் மாறுபட்ட கருத்துகளுக்கு இடம் கிடையாது.  

இன்னும் சிறிது காலங்களில், நிறைவுக்கு வரவுள்ள நல்லாட்சி அரசாங்கத்தில், அரசியல்த் தீர்வு விடயத்திலும் கூட, கூட்டமைப்பு பல விட்டுக் கொடுப்புகளைச் செய்துள்ளது. என்ன விதத்திலாவது, புதிய அரசமைப்பை உருவாக்குவதன் ஊடாக, நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என முழுமையாக நம்பி நடந்துள்ளது.  

இந்நிலையில், “ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவோம் என, எழுத்து மூலமான உறுதி மொழியை வழங்கத் தயங்கினால் அல்லது தவறினால், ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என, இலங்கைத் தமிழரசுகக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் அவைத் தலைவருமான சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.  

சி.வி.கே சிவஞானம் சிரேஷ்ட அரச அதிகாரியாகப் பணியாற்றியவர். அத்துடன், நீண்ட காலமாக அரசியலிலும் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக, முக்கிய பதவியில் உள்ளார். இவரது இந்தப் பேச்சு, ‘முதிர்ச்சி’யான அரசியல் பேச்சா என விளங்கவில்லை.  

மேலும், “தேர்தல் பகிஷ்கரிப்பு, தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதிய விடயம் அல்ல; 2005ஆம் ஆண்டிலும் செய்து காட்டியிருந்தார்கள்” எனவும் கூறி உள்ளார்.   

சரி பிழைகளுக்கு அப்பால், 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் கடுமையான விளைவுகளை, இன்னமும் தமிழினம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றது என்பதையும் நாம் உணர வேண்டிய நிலையில் உள்ளோம்.  

மறுபக்கத்தில், கடந்த காலங்களில் இனப்பிரச்சினை விடயத்தில், இந்த நாடு பல உடன்படிக்கைகளை, ஒப்பந்தங்களை எழுத்து வடிவில் கண்டது. அவற்றுக்கு எல்லாம் ஈற்றில் என்ன நடந்தது?  

ஓப்பந்தங்களைத் தூக்கியெறிவதும், எரிப்பதும், கிழிப்பதும் பேரினவாதிகளுக்குக் கடினமான காரியங்கள் அல்ல; இவற்றை விவரிக்க வேண்டிய தேவைப்பாடு இல்லை.  

இந்நிலையில், அன்று தமிழ் இளைஞர்கள் கரங்களில் மட்டும் இருந்த ஆயுதம், இன்று அனைத்துத் தமிழ் மக்கள் கைகளிலும் உள்ளன. ஆம்! அதுவே வாக்கு எனும் ஆயுதம். அதுவே, தற்போது தமிழ் மக்களிடம் எஞ்சியுள்ள பலமான ஆயுதம்; அத்துடன் உரிமையும் கூட.  அதை எவ்வாறு உத்தமமாகப் பயன்படுத்தலாம் எனத் திட்டம் தீட்டுவதும், அதை உச்சமாகப் பயன்படுத்துவதும் அதற்கான ஊக்கத்தைக் கொடுக்க வேண்டியவர்களும் வாக்கு என்ற ஆயுதத்தை வெற்றுக் காகிதங்களாகப் பார்க்கின்றார்களா?  

தமிழ் மக்கள் விரும்பியோ, விரும்பாமலோ தேர்தலில் வாக்களித்தோ, புறக்கணித்தோ பௌத்த சிங்களவரே இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வரவுள்ளார். இந்த நிதர்சனமான உண்மையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.  

ஆகவே, தமிழ் மக்கள் வாக்களிக்காது ஒதுங்கி, விலகி இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, ஒற்றுமையாகக் கணிசமான தமிழ்க் கட்சிகள் ஒன்று கூடித் தீர்மானம் எடுத்து, தமிழ்த் தலைமை சுட்டு விரல் காட்டும் சிங்கள வேட்பாளருக்கு, வாக்களிக்க வேண்டும்.  

இதனூடாக, இலங்கைத் தீவின் ஐனாதிபதியைத் தீர்மானிக்கும் வல்லமை பொருந்தியவர்களாகத் தமிழினம் மாற வேண்டும். மாறாக, ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் விடயத்தில் ஒ(ப)துங்கி இருக்கக் கூடாது.   கொழும்பிலிருக்கும் சிங்களத் தலைமை, திருகோணமலையில் இருக்கும் தமிழ்த் தலைமையிடம் நேராகச் சென்று ‘வாக்கு’க் கொடுத்து, வாக்குக் கேட்க வைக்க வேண்டும். 

எதிர்காலத்தில், தமிழ் மக்களது வாக்குகளைப் பெற்று, ஐனாதிபதியாகிய பின்னர், தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்காமலும் போகலாம் என்ற பயமும், தமிழர்களுக்கு உள்ளூர உண்டு.   

மறுபுறத்தில், தமிழ் மக்கள் வாக்களிக்காது விடுவதால், தெரிவு செய்யப்படும் வேட்பாளராலும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படலாம் தானே?  

ஆனால், சி.வி.கே. சிவஞானம் கூறுவது போல, “நாம் தேர்தலைப் புறக்கணித்து, ஒதுங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், யார் அதன் பின் ஆட்சிக்கு வருகின்றார்களோ, அவர்களுக்குச் சர்வதேச சமூகத்தின் ஊடாக, எமது பிரச்சினைக்குத் தீர்வை வழங்க அழுத்தம் கொடுப்போம்” என்பது எந்தளவு சாத்தியப்பாடானது?  

தமிழ் மக்கள் விடயத்தில், சர்வதேசம் என்பது, எப்போதோ முடிந்த காரியம் என்றாகி விட்டது என்றே, தமிழ் மக்கள் கருதுகின்றார்கள். ‘சீவன் துடிக்கத் துடிக்கப் போன போது, வேடிக்கை பார்த்தவர்கள், அந்தியேட்டிக்கு வந்தது போல’ போர் முடிந்தும் பத்து ஆண்டுகளில், தமிழ் மக்கள் விரும்பும்படியாகக் குறிப்பிட்டுக் கூறும்படியாக, சர்வதேசத்தால் என்னத்தைச் சாதிக்க முடிந்தது?   

ஆகவே, சர்வதேசம் என இன்னும் எத்தனை நாள்களுக்குக் கூறிக் கொண்டு இருக்கப் போகின்றோம். களத்தின் தோற்றப்பாடும், காலத்தின் தேவைப்பாடும் தமிழர்கள், தங்களது சர்வ வல்லமையைப் பெருக்குவதிலேயே முற்றிலும் தங்கி உள்ளது.  

இதேவேளை, பேரினவாதம் தங்களுக்குள் கதிரைக்கான அரசியல் போட்டி என்று வரும் போதே, குடும்ப ஆட்சி வேண்டுமா, நாட்டைக் கட்டி எழுப்பும் தலைவர் வேண்டுமா, அராஜக ஆட்சி வேண்டுமா, சமாதான ஆட்சி வேண்டுமா எனக் கேள்வி கேட்பார்கள்.  

ஆனால், நாடு என்று வரும் போது, வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமை வட்டத்துக்குள் வந்து விடுவார்கள். “பயங்கரவாதத்தை முறியடித்தவரை, மின்சாரக் கதிரையிலிருந்து நானே காப்பாற்றினேன்” எனக் காப்பாற்றவும் அடைக்கலம் கொடுக்கவும் முண்டியடிப்பார்கள். அதுவே, முதிர்ச்சியான அரசியல்த் தலைமைத்துவம் ஆகும்.  

தமிழ் மக்களிடம், முதிர்ச்சியான அரசியல் தலைமை இல்லை என்றே கூற வேண்டும். தற்போது, தமிழர்கள் அரசியலில் வெறுமையே நிலவுகின்றது. தகுதியான தமிழ்த் தலைமைக்கான பதவி, இன்னமும் வெற்றிடமாகவே உள்ளது.  

“தமிழ்க் கட்சித் தலைவர்களே தயவு செய்து ஓரணியில் அணி திரளுங்கள். ஒன்றுபட்டுத் தேர்தலை எதிர்கொள்வோம்” எனத் தமிழ்ச் சமூக சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என ஒட்டுமொத்தச் சமூகத்தினரும் கோரிக்கை விடுத்தும், ஒற்றுமை என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.  

எந்தத் தமிழ்க் கட்சியும் தங்களது கட்சி நலனையும் தங்களது சொந்த நலனையும் விட்டுக் கொடுக்கத் தயார் இல்லை. அதேவேளை, தமிழ் மக்களும் எந்தத் தமிழ்க் கட்சியையும் எந்தத் தமிழ்த் தலைவரையும் தனியாக முன்னுரிமைப்படுத்தவும் தயார் இல்லை.  

அநியாயமாகக் கொல்லப்பட்ட தமிழ்ச் சமூகத்தில், அதன் அரசியல்த் தலைவர்கள் தங்களது மக்களது விடிவுக்காக அணியாகச் செயற்பட இன்னமும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை. மாறி மாறி மற்றவர்கள் மீது குறைகளைச் சொல்லுவதும் குழிபறிப்பதும் குறுக்கே நிற்பதும் தொடர் கதையாகவே உள்ளது.  

இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பாள்புரம், பாலைப்பாணி, கொல்லவிளாங்குளம், வடகாடு ஆகிய பகுதிகளில் சீரான போக்குவரத்து வசதிகள் இன்மையால் 45க்கு மேற்பட்ட மாணவர்கள், பாடசாலையை விட்டு இடைவிலகி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.  

பிரதேச சபையிலும் மாகாண சபையிலும் நாடாளுமன்றத்திலும் தங்களது கதிரைகளைப் பிடிக்க முண்டியடிக்கும் அரசியல்வாதிகளால், அப்பாவிச் சிறுவர்களது போக்குவரத்து வசதிகளைச் சீர்படுத்தி, பாடசாலைக் கதிரைகளில் அவர்களை அமர்த்த முடியாது உள்ளது.  

முல்லைத்தீவு மாவட்டத்தில், இரண்டு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராகத் தமிழர் உள்ளார். இதைவிடத் தமிழ் மக்களது உரிமைகளைக் கடமைகளை நிறைவேற்றவென, பல தமிழ்க் கட்சிகள் உண்டு. ஆகவே, அவர்கள் அனைவரும் இதற்கும் பொறுப்புக் கூறல் வேண்டும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X