2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மனவுறுதியின் மகிமை

Editorial   / 2018 ஜனவரி 08 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பன்கங்கை நீருற்று  
அம்பன் கங்கையே, மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் நீருற்று ஆகும்.   அம்பன் கங்கை நீரினால், ரஜரட்ட வயல் நிலங்களைச் செழிப்படையச் செய்தல் பற்றிய வரலாறு, 2000 வருடங்களுக்கு முற்பட்டதாகும். கி.பி முதலாம் நூற்றாண்டில், எமது நாட்டை ஆட்சிபுரிந்த வசப மன்னன், அம்பன் கங்கைக்கு குறுக்காக எலஹெர குளத்தை நிர்மாணித்து, அதில் தேங்கிய நீரைக்கொண்டு வயல் நிலங்களைச் செழிப்படைய செய்தான்.

அதன்பின், சுமார் 200 வருடங்களுக்குப் பின்னர் மின்னேரிய குளத்தைப் போஷிப்பதற்காக, எலஹெர நீர்ப்பாசனக் கட்டமைப்பை விருத்தி செய்வதற்கான நடவடிக்கையை, மகாசேன மன்னன் எடுத்தான். மகா பராக்கிரமபாகு மன்னன், பராக்கிரம சமுத்திரத்தை நீரால் போஷிப்பதற்கு, அம்பன் கங்கையின் நீரைப் பெற்றுக்கொள்வதற்காக, அங்கமெடில்ல கால்வாயை நிர்மாணித்து, அதிலிருந்து நீரைக் கொண்டு செல்வதற்காக, ஆகாய கங்கையின் பெயரில் பாரிய கால்வாயை நிர்மாணித்தான்.   

“அம்பன் கங்கையின் நீரை விவசாயத்துக்கு உபயோகிக்கும் வரலாற்றைப் பற்றி, நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே, நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   

மகாவலி அபிவிருத்தி  
அம்பன் கங்கை நீரை, விவசாய அபிவிருத்திக்காக உபயோகிக்கும் அண்மைக்கால வரலாறு, மகாவலி அபிவிருத்தித் திட்டத்துடன் ஆரம்பமாகின்றது. சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் அழைப்பில், அறுபதுகளில் நாட்டுக்கு வருகை தந்த விசேட நிபுணர் குழுவினர், மகாவலி அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகள், தற்போதைய மகாவலி அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் அடிப்படையாகும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட மகாவலி பாரிய அபிவிருத்தித் திட்டத்தில், அம்பன் கங்கை விசேட பங்கு வகிக்கின்றது. அத்திட்டத்தில், அம்பன் கங்கைக்கு குறுக்காக அணைக்கட்டுக்களை நிர்மாணித்து, இரு நீர்த்தேக்கங்களை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டிருந்தது.

அதன் முதலாவது நீர்த்தேக்கமானது, போவத்தன நீர்த்தேக்கமாகும். மிகப் பாரிய பயனுள்ள மொரகஹாகந்த நீர்த்தேக்கம் இரண்டாவதாகும். மகாவலி பாரிய அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் ஆரம்ப அத்தியாயமாக, உக்குவெல நீர்மின் உற்பத்தி நிலையத்துடன் பொல்கொல்ல நீர்த்தேக்கமும் போவத்தென்ன நீர்த்தேக்கத்துடன் நீர்மின் உற்பத்தி நிலையமும் நிர்மாணிப்பட்டது.

1976 ஜனவரி 8ஆம் திகதி, சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமரினால், பொல்கொல்லையில் இருந்து மகாவலி நீரை ரஜரட்டைக்குத் திறந்துவிட்டதன் மூலம், அக்கட்டம் பூர்த்தியடைந்தது. அதே வருடம் ஓகஸ்ட் மாதத்தில், பதில் பிரதமர் மைத்ரிபால சேனாநாயக்கவினால் போவத்தென்ன திருப்புமுனையின் மூலம் மகாவலி நீர், கலா வாவிக்கும் நுவர வாவிக்கும் திறந்துவிடப்பட்டது.  

பொல்கொல்ல மற்றும் போவத்தென்ன நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதே, அப்போதைய மகாவலி அமைச்சர் மைத்ரிபால சேனாநாயக்கவின் எதிர்பார்ப்பாக இருந்தது.   

மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தை நிர்மாணித்து, அதில் ஒன்று சேரும் பாரிய நீரை, 106 மைல்கள் நீளமான வடமத்திய யோதஎல கால்வாயினூடாக வடக்கின் இரணைமடு வாவிக்குக் கொண்டு செல்வதே, அவரது நோக்கமாக இருந்தது. அத்துடன், இன்று போலவே அன்றும் நீர்ப் பற்றாக்குறையினால் வாடிய பதவிய, வாஹல்கட மற்றும் ஹூருலு வாவி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாவிகளை, அந்நீரைக் கொண்டு நிரப்புவதே அவரது எதிர்பார்ப்பாக அமைந்தது.

ஆயினும், 1977 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில், அவரது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாது போயின.   

1977இல் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம், மகாவலி செயற்றிட்டத்தை துரித அபிவிருத்தித் திட்டமாக முன்னெடுத்ததுடன், நீர் மின்னுற்பத்தி மூலம் நாட்டைக் கைத்தொழில் மயமாக்குவதே அதன் நோக்கமாக இருந்தது.  

அதற்கமைய, விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகலை, மாதுருஓய மற்றும் மொரகஹகந்த நீர்த்தேக்கங்களை, ஆறு வருடங்களுக்குள் நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டது. ஆயினும், மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகள் காலவரையின்றி பிற்போடப்பட்டன.  

இப்படியிருந்தபோதிலும், மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் கட்டாயத் தேவை, பரவலாக உணரப்பட்டது. அதற்கமைய, 1979ஆம் ஆண்டு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் அனுசரணையில், இச்செயற்றிட்டம் பற்றிய விரிவான சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், 1989ஆம் ஆண்டில் அதனை இற்றைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

மைத்ரிபால சிறிசேன, 1998ஆம் ஆண்டில், மகாவலி அபிவிருத்தி அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர், மொரகஹகந்த நீர்த்தேக்க செயற்றிட்டத்தில் புரட்சிகர மாற்றம் ஏற்பட்டது.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களின் நீர்ப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான ஒரே மார்க்கம், மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகளை துரிதமாக ஆரம்பித்தலே என பெரிதும் நம்பிய அவர், ஜேர்மனியின் லான்யார் சர்வதேச ஆலோசனை நிறுவனமும் இலங்கை பொறியியல் செயற்பாடுகள் பற்றிய மத்திய ஆலோசனைப் பணியகமும் இணைந்து நடத்திய 4 வருட சாத்தியவள ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைத்தார்.  

மொரகஹாகந்த நீர்த்தேக்கம்  

வரலாற்றுச் சிறப்புமிக்க எலஹெர அணைக்கட்டிலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்தில் ஆற்றங்கரைக்கு மேல் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொங்கிரீட் அணைக்கட்டை அடித்தளமாகக்கொண்ட மூன்று தடுப்பு அணைகளைக் கொண்டதாக மொரகஹகந்த நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

58 மீற்றர் உயரமான கொங்கிரீட் அணைக்கட்டு, 375 மீற்றர் நீளமானதாகும். கற்கள் நிரப்பப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதான தடுப்பு அணை, 470 மீற்றர் நீளமும் 61.03 மீற்றர் உயரமும் உடையது. மண் நிரப்பப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டாவது தடுப்பு அணை, 275 மீற்றர் நீளத்தையும் 21 மீற்றர் உயரத்தையும் கொண்டுள்ளது.   

மொரகஹகந்த நீர்த்தேக்கம், 570 மில்லியன் கன மீற்றர்கள் நீர்க்கொள்ளளவைக் கொண்டதாகும்.  
இதன் அணைக்கட்டுக்களையும் மின் உற்பத்தி நிலையத்தையும் நிர்மாணிப்பதற்கான மொத்தச் செலவினம், 33,862.6 மில்லியன் ரூபாய்களாகும். இந்த முதலீட்டில் 15 சதவீதம், அதாவது 4,920.5 மில்லியன் ரூபாய்கள், தேசிய நிதியத்திலிருந்து பெறப்பட்டுள்ளதுடன், 28,952.1 மில்லியன் ரூபாய்கள் சீன அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது.

களுகங்கை நீர்த்தேக்கம்  

பல்லேகமயில் இருந்து 4 கிலோமீற்றர் தூரத்தில், களுகங்கைக்கு குறுக்கே அமைக்கப்பட்ட இரு தடுப்பு அணைகளைக் கொண்டதாக, களுகங்கை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.   

களுகங்கையின் பிரதான அணைக்கட்டு, கற்கள் நிரப்பப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 68 மீற்றர் உயரத்தையும் 568 மீற்றர் நீளத்தையும் கொண்டுள்ளது. அவ்வணைக்கட்டின் உச்சி, 8 மீற்றர் அகலத்தைக் கொண்டுள்ளது.   

719 மீற்றர் நீளமும் 28 மீற்றர் உயரமும் உடைய களுகங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டாவது அணைக்கட்டும், கற்கள் நிரப்பப்பட்டே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.   

களுகங்கை நீர்த்தேக்கம், 84 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், அதன் மொத்த நீர்க்கொள்ளளவு, 265.2 மில்லியன் கன மீற்றர்களாகும்.  

அதற்கேற்ப, மொரகஹாகந்த - களுகங்கை அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் மூலம் தேக்கி வைக்கப்படும் நீரின் கொள்ளளவு, 818 மில்லியன் கன மீற்றர்களாகும். அது, பொலன்னறுவையிலுள்ள பராக்கிரம சமுத்திரத்தின் நீர்க்கொள்ளளவைப் போல் ஆறு மடங்காகும்.  

சுரங்கக் கால்வாய்  
களுகங்கை நீர்த்தேக்கத்தை, மொரகஹாகந்த நீர்த்தேக்கத்துடன் இணைக்கும் சுரங்கக் கால்வாய், இந்தச் செயற்றிட்டத்தின் விசேட அம்சமாகும். செக்கனுக்கு 35 கன மீற்றர் நீர்க்கொள்ளளவை உடைய இந்தச் சுரங்கக் கால்வாயின் நீளம், 7.85 கிலோமீற்றர் ஆகும்.   

நீர்மின் உற்பத்தி  

மொரகஹாகந்த நீர்த்தேக்கத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர்மின் உற்பத்தி நிலையம், 25 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது.  

பெறுபேறு  

மொரகஹகந்த, களுகங்கை நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்கப்படுவதனால், அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் 82,000 ஹெக்டெயார்களுக்கும் அதிகமான வயல்நிலங்களுக்கு, தொடர்ச்சியாக நீரை வழங்க முடியும். இதனூடாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வருடாந்த இலாபம், 4,000 மில்லியன் ரூபாய்களை விட அதிகமாகும்.  

மொரகஹகந்த நீர் மின் உற்பத்தி நிலையத்தினால் உற்பத்தி செய்யப்படும் நீர் மின்சக்தியினால் பெற்றுக்கொள்ளப்படும் இலாபம், 336 மில்லியன் ரூபாய்களாகும்.  

மொரகஹாகந்த - களுகங்கை செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படுவதனால், வடமத்திய மாகாணம் மற்றும் அதனையண்டிய பிரதேசங்களிலுள்ள சுமார் 1,500 குளங்களுக்கு மேலதிக நீரைப் பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருப்பதுடன், இப்பிரதேச மக்களின் குடிநீர்த் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.   

எதிர்கால நோக்கு  

மகாவலி அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் இறுதி இலக்காக, விவசாய அபிவிருத்தியையும் பரவலாக்கத்தையும் அதன்மூலம் பொருளாதார அபிவிருத்தியையும் குறிப்பாக வடமத்திய, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் பெற்றுக்கொடுப்பதைக் கொண்டுள்ளது.

அதன்மூலம், வறுமையைப் போக்கி பொருளாதார வளர்ச்சிமிக்க ஒரு தேசத்தை உருவாக்குவதற்கும் மின்னுற்பத்தி மூலம் இலங்கையை ஒளிமயமாக்குவதற்கும் அதனூடாக, சுபீட்சமிக்க நாட்டை கட்டியெழுப்ப முயற்சிக்கப்படும்.

சில தசாப்தங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்றிட்டத்தின் இறுதி நீர்த்தேக்கத்தை அபிவிருத்திச் செய்யும் பணி, இன்று மொரகஹாகந்தயுடன் பூர்த்தியடைகின்றது. அதன்மூலம், இதுவரை வரட்சியினால் பாதிக்கப்பட்டு வந்த மக்களுக்கு புதிய அபிவிருத்திக்கான வழியை வகுக்கும் புதிய பாதையாக இது அமையும்.

இதன் முன்னோடியான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் அரசாங்கத்துக்கும் பொதுவாக நாட்டுக்கும், ஒரு மகத்தான அதேநேரம் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகவும் அமையும்.  

2018 ஆம் ஆண்டில், இந்தியா நேர்மறையான, முற்போக்கு வழியில் செல்லுமென, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில், அறிவித்தார். அதனையே இலங்கையர்களாகிய எம்மாலும் மீள் உச்சரிக்கக்கூடிய நிலை, இதன்மூலம் எமக்கும் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X