2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாற்றுத் தலைமைக்கான வாய்ப்புகளைத் தோற்கடிப்பது யார்?

புருஜோத்தமன் தங்கமயில்   / 2017 ஜூலை 19 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோடைக் காலத்தில் எப்போதாவது ஒருநாள் சில மணித்துளிகள் பெய்யும் சிறுமழையை நம்பி, விவசாயம் செய்ய முடியுமா? அதுவும், வரட்சியின் உச்சத்தில் நிலம் வெடித்து வெம்மையை கக்கிக் கொண்டிருக்கின்ற தருணத்தில், சிறுமழையை நம்பி விவசாயத்துக்கான பெரும் ஏற்பாடுகளைச் செய்யும் தொழிலாளியை மற்றவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்?  

 அந்த மழையின் ஈரம், நிலத்தில் அரையடி இறக்கும் முன்னரே, நிலத்தின் வெம்மையினால் கானலாக மாறி, காணாமற்போய்விடும். இப்படியான நிலையை எந்தவொரு மனிதனும் உணர்ந்து வைத்திருப்பான். அதுவும், வடக்கு- கிழக்கில் அந்த மண்ணோடும் அதன் வாசத்தோடும் வாழும் மக்களிடம், சிறுமழையை மாரி மழைபோல கருத வேண்டும் என்று கோருவதும், அதற்குண்டான காட்சிகளை வடிவமைப்பதும் எவ்வகையான புத்திஜீவித்தனம்?  

இப்படியான காட்சியொன்றையே கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, தொடர்ச்சியாகப் பிரதிபலித்து வருகின்றது; மக்களை நோக்கி முன்வைக்கின்றது. இது உண்மையிலேயே பொறுப்புணர்வுள்ள நிலையா? சமூகத்தின் மீதான சதியில்லையா?  

வடக்கு- கிழக்கு என்கிற நிலம், முப்பது ஆண்டுகளாக இடைவிடாது ஓடிய பெரு நதியொன்றைக் கண்டு, அதன் அக-புறத் தாக்கங்களோடு இருந்து வருகின்றது. அப்படிப்பட்ட நிலையில், அந்த நதியின் ஓட்டம் நின்றுவிட்டது என்பதற்காக, சில மணித்துளிகள் பெய்யும் சிறுமழையை பெரு நதி போல காட்டிக் கொள்வதற்குப் பெயர் என்ன?   
இந்தக் கேள்விகள், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஊடகங்கள், அரசியல் பத்தியாளர்கள் என்கிற அனைத்துத் தரப்புகளையும் நோக்கியது. குறிப்பாக, பட்டறிவுகளுக்கு அப்பால் நின்று புத்திஜீவித்தனம் பேசும் தரப்புகள் மீதானது.  

“...மாற்றுத் தலைமை காலத்தின் கட்டாயம். தற்போதைய சூழலில் சரியான பாதையில் பயணிப்பதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தயங்குவாரானால், இன்னொரு தலைமையையோ அல்லது கூட்டுத் தலைமையையோ உருவாக்குவதற்குப் பின்நிற்க மாட்டோம்...” என்று கடந்த வாரம் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போது ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார்.  

மாற்றுத் தலைமையை ஏற்பதற்கு முன்வருவீர்களாக? என்கிற கேள்விக்கு, 
“...மாற்றுத் தலைமை தொடர்பில் முடிவு எடுப்பதற்கு ஒன்றுமில்லை. முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். எமது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்த இடத்தில் எமது தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் முரண்பாடுகளை முன்வைத்துப் பிரிவுகளை ஏற்படுத்துவது எமக்கு நல்லதல்ல. இங்கு எந்தவிதப் பிரிவினைக்கும் இடமில்லை...” என்று விக்னேஸ்வரன் பதிலளித்து, சில நாள்களுக்குள்ளேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கும் தலைமைக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இருப்பது கொள்கை ரீதியான முரண்பாடுகள் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அவரே, தனிப்பட்ட குரோதங்களுக்காக பிளவுபட முடியாது என்கிற தோரணையில் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.   

கடந்த பொதுத் தேர்தல் காலத்திலிருந்து கூட்டமைப்பின் நிலைப்பாடுகளுக்கு அப்பால் நின்று இயங்கி வரும் விக்னேஸ்வரன், ஒரு கட்டம் வரையில் கொள்கை ரீதியான முரண்பாடு என்பது மாதிரியாகத்தான் காட்டிக் கொண்டு வந்தார். 

அப்படித்தான், அவரை முன்னிறுத்தி காட்சிகளுக்கான திரைக்கதையை எழுதியவர்களும் நம்பினார்கள். அல்லது நம்புவதுபோல நடித்தார்கள். இன்றைக்கு அவர்களையே விக்னேஸ்வரன் நட்டாற்றில் விட்டிருக்கின்றார். அவர்களோ கதறிக் கொண்டிருக்கின்றார்கள்.  

தமிழ் மக்கள் பேரவை உருவாகிய காலத்தில், பேரவை தொடர்பில் சிறியளவிலான நம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கான உந்துதல்களைப் பேரவை, அரசியல் ரீதியான அழுத்தங்களினூடு வழங்கும் என்றும் நம்பினார்கள்.   

ஆனால், இன்று பேரவை வந்து சேர்ந்திருக்கின்ற இடம் இது? அதனால், இரண்டு ‘எழுக தமிழ்’ நிகழ்வுகள், தீர்வுத் திட்ட யோசனை வரைபு, ஒரு பண்பாட்டு விழா தவிர்ந்து ஆற்றிய கருமங்கள் என்ன? உண்மையிலேயே பேரவைக்குள் இருக்கின்றவர்கள் அதன் செயற்பாடுகளுக்காக ஒரு நாளில் சில நிமிடங்களையாவது ஒதுக்குகின்றார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.  

குறிப்பாக, பேரவைக்குள் இருக்கும் அரசியல் கட்சிகளைத் தவிர்ந்த புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள் தரப்பு, பேரவையின் முன்னோக்கிய பயணத்துக்காக ஒருநாளைக்கு 10 நிமிடங்களைக்கூட ஒதுக்குவதற்குத் தயாராக இல்லை என்று அந்த அமைப்புக்குள் இருக்கின்ற முக்கியஸ்தர் ஒருவர் குற்றம்சாட்டுகின்றார்.  

தமிழ்த் தேசிய அரசியலின் நல்மாற்றங்கள் தொடர்பில் ஆர்வத்தோடு இருப்பது நல்ல விடயம். ஆனால், அதைச் செயற்பாட்டுத் தளத்துக்கு நகர்த்தாது, அதற்காக சில நிமிடங்களைக்கூட ஒதுக்கத் தயாராக இல்லாதவர்களினால், உண்மையில் மாற்றம் நிகழுமா? அப்படியானால், அரசியல்வாதிகளின் தேர்தல் கால பேச்சுகளுக்கும் இவர்களின் நடத்தைக்கும் இடையிலான வித்தியாசம் என்ன? இரண்டுமே உணர்ச்சி ஊட்டல்களுடனான சில ஆதாயங்களுக்கானது மட்டுந்தானா?  

தமிழ்த் தேசிய அரசியல், கடந்த இரண்டரை ஆண்டுகளாகக் கிடைத்துள்ள சிறு (ஜனநாயக) வெளியை வீணாக்கிக் கொண்டிருக்கின்றது; காலம் கடத்துகின்றது; போலிகள் மீது நம்பிக்கையைக் கட்டமைத்து மக்களை நட்டாற்றில் தள்ள நினைத்திருக்கின்றது. இது, தொடர்பில் சாதாரண மக்களின் கேள்விகளுக்கு, புத்தஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் அரசியல் பத்தியாளர்களும் பதிலளிக்கத் தயாராக இருக்கின்றார்களா என்றால், பதில் இல்லை.  

புளோட் அமைப்பில் 1980 களில் இயங்கிய முன்னாள் போராளி ஒருவருடன், தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட காலத்தில் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர் கூறினார்.  

“...உண்மையிலேயே ஆயுதப் போராட்ட இயக்கங்களிலேயே படித்த இளைஞர்கள் அதிகம் இருந்தது புளொட்டில்தான். தமிழீழம் கிடைத்தால், அதை எப்படிக் கல்வி, பண்பாடு மற்றும் பொருளாதார ரீதியில் கட்டமைத்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெளிவான உரையாடல்கள் நடத்தப்பட்டு, திட்டங்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால், புளொட்டின் பிரச்சினை என்னவென்றால், திட்டங்களைத் தீட்டுவதோடு விடயங்களை அப்படியே விட்டுவிடுவார்கள்.

 ஆனால், விடுதலைப் புலிகள் அப்படியல்ல. அவர்கள் திட்டங்களை நிதானமாகவும் தெளிவாகவும் தீட்டுவார்கள். அத்தோடு, அதைச் சரியாக நடைமுறைப்படுத்துவார்கள். அதுதான், அவர்களின் வெற்றியாக இருந்தது.

அதுவே, மக்களை அவர்கள் பின்னால் போகவும் வைத்தது. புலிகளின் ‘தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்’ என்பதெல்லாம் அடிப்படையில் புளொட் உருவாக்கி வைத்திருந்த திட்டங்களில் இருந்த ஒன்றுதான். இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

ஆனால், நாங்கள் படித்தவர்களாக நடந்து கொள்வதில் கவனம் செலுத்தினோம். பெடியள் (புலிகள்), செயற்படுத்திக் காட்டினார்கள். பேரவையைப் பார்க்கும் போதும், எனக்கு அப்படித்தான் தோன்றுகின்றது. அதிகம் வாய்ச்சவடால்களுக்கு இடமிருக்கும். வேறு ஒன்றும் நிகழாது...” என்றார்.  

பேரவை உருவாக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இன்றைக்கு பேரவையின் இயங்குநிலை என்பது ஏதாவது ஒரு விடயம் நிகழும் போது, பிரதிபலிப்பதாக மட்டும் மாறிவிட்டது. தமிழரசுக் கட்சிக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாட்டின் போதும், பேரவை அதிகபட்சம் நிகழ்த்திக் காட்டிய ஹர்த்தாலும் அதன் சார்பிலானதுதான்.   

மற்றப்படி, பேரவை ஏற்படுத்தி வளர்ந்து வந்த, விக்னேஸ்வரன் மீதான பிம்பம் எவ்வகையானது? தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே புலிகளுக்குப் பின்னரான குறைநிரப்பு தரப்பாக மக்கள் கருதிக் கொண்டிருக்கின்ற நிலையில், ஆளுமையான- செயற்பாட்டுத்திறனுள்ள ஒரு தலைமையையோ அல்லது கூட்டுத் தலைமையோ உருவாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதைத் தவிர்த்து, தனிமனிதர்கள் மீது பிம்பங்களை உருவாக்குவதால் என்ன பயன்?  

யாழ்ப்பாணத்தில், கடந்த ஒன்பதாம் திகதி மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியம் நடத்திய ‘தடுமாறா மக்களுக்கு தலைமை தாங்குவது யார்?’ என்கிற தலைப்பிலான அரசியல் கருத்தாடல் நிகழ்வின் போதும், மாற்றுத் தலைமையை ஏற்பது தொடர்பில் விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக காட்டிவரும் பின்னடிப்பு தொடர்பில் பலரும் விமர்சனங்களை முன்வைத்தார்கள். 

வழக்கமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் முடிவுகள், தலைமையின் போக்கு உள்ளிட்டவை தொடர்பிலேயே அதிகளவு விமர்சிக்கப்பட்ட அந்தக் கருத்தாடல் தளத்தில், விக்னேஸ்வரனின் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள், மற்றும் பின்னடிப்புத் தொடர்பிலும் பேசப்பட்டது.  

வடக்கு மாகாண சபை உறுப்பினர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், அரசியல் கட்சிகளின் தலைவர்களைப் பார்த்துக் கேட்டார், “ஏன் விக்னேஸ்வரனைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்? மாற்றுத் தலைமையாக உங்களால் வர முடியாதா” என்று? 

இன்னும் சில அரசியல் ஆய்வாளர்களோ, மாற்றுத் தலைமையை உருவாக்கி நாடாளுமன்றத்தில் ஆசனங்களைப் கைப்பற்றுவதோடு விடயங்கள் முடிந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பினார்கள்? உண்மையில், அந்தக் கேள்வி இன்று எழுந்தது அல்ல.   

தமிழ் மக்களிடம் தொடர்ச்சியாக இருக்கின்ற ஒன்று. அதற்குத் தெளிவான பதிலையும் அதற்கான செயற்பாட்டு வடிவத்தையும் காட்டியிருந்தால், மக்கள் எப்போதோ அந்தப் பக்கம் வந்திருப்பார்கள். அப்படியேதும் நிகழவில்லை என்பதுதானே இங்கு பிரச்சினை. 

கிடைக்கின்ற எல்லாச் சந்தர்ப்பங்களையும் யாரைச் சுற்றியாவது பிம்பம் வரையவும், யாரையாவது ‘பப்பாசி’ மரத்தில் ஏற்றுவதற்கும் செலவளித்துவிட்டு இப்போது அழுது புரள்வதாலும் வெறுமையாக உணர்வதாலும் என்ன பயன்? முதலில் இந்த நிலையிலிருந்து மாற்றம் நிகழ வேண்டும். அப்போதுதான் மாற்றுத் தலைமைக்கான உருப்பாடியான சிந்தனைகள் உருவாகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .