2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாலி: பயங்கரவாதத்துக்கு எதிரான முடிவுறாத யுத்தம்

Editorial   / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனகன் முத்துக்குமார்

கடந்த ஏப்ரல் 10ம் திகதி பிரான்ஸ் மற்றும் மாலி அரசாங்கம் இணைந்து நாடாத்திய பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதலில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட போதிலும், மாலி அரசாங்கம் எதிர்கொள்ளும் பயங்கரவாதம் இலகுவில் தோற்கடிக்க கூடிய ஒன்றல்ல என்பதே வரலாற்று ரீதியில் நாம் கற்கும் பாடமாகும். பிரதானமாக நாட்டின் பயங்கரவாத குழுக்கள் மற்றும் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தீவிரவாத நடவடிக்கைகளை களைதல் மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான உதவிகளை பெறுதல் தொடர்பில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை மாலி முன்வைக்கும் அதேவேளை உள்நாட்டு பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்ச்சியாக பிராந்தியத்துக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியவண்ணமே உள்ளன.

2012 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் இருந்து மாலி பயங்கரவாதத்துக்கு எதிராக முனைப்பாக போராடவேண்டி உள்ளது. ஆசாவாட்வின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் (MNLA) தலைமையின் கீழ், ஒரு கிளர்ச்சி வடக்கு மாலியில் வெடித்ததை தொடர்ந்தும், அதன் பின்னராக பமாகோவில் அரசாங்கம் ஒரு ஆட்சிக் கவிழ்ப்புக்கு முகம்கொடுக்க நேர்ந்ததை தொடர்ந்தும் நிலைமை மேலதிக சிக்கலானதானது. அதே நேரத்தில் MNLA, இஸ்லாமிய மக்ரெப்புக்கான அல்கெய்டா (AQIM) மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவுக்கான ஒற்றுமை மற்றும் ஜிஹாத் (MUJAO) ஆகிய இயக்கங்களுடன் நட்புறவை வளர்த்திருந்ததும், 2015 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அல்ஜீயர்ஸ் சமாதான மற்றும் நல்லிணக்க உடன்படிக்கையை MNLA மீறியமையும், நாட்டில் கொந்தளிப்பான நிலைமை உருவாகவும், வன்முறை தீவிரவாத குழுக்கள் மாலியன் கிடல், காவ் மற்றும் திம்புக்டு நகரங்கள் உட்படசாஹல் (Sahel) மீது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தவும் காரணமாய் அமைந்திருந்தது.

மறுபுறத்தில், 9/11 க்கு பின்னரான காலப்பகுதியில் பயங்கரவாதத்தை களைதல் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகளில் ஒன்றான மாலி, சர்வதேச ரீதியாக பயங்கரவாத செலயல்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக மிகவும் கூடியளவு உதவிகளை பெற்றிருந்தது. எது எவ்வாறிருந்த போதிலும், மாலியின் குறித்த நிலைமைக்கு பன்முகப்பட்ட காரணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றமை அவதானிக்கத்தக்கது. உண்மையில், தற்போதைய சூழ்நிலை பிராந்திய புவிசார் அரசியல் இயக்கங்களின் செல்வாக்கு, ஆயுதக் குழுக்களின் முன்னேற்றம், பயங்கரவாதத்திற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் என்பவற்றுக்கு இடையிலான தொடர்புநிலை வளர்ச்சியடைந்தமை, வரலாற்று ஓரங்கல் விளைவிப்பு மற்றும் இனப் பதட்டங்கள், சிற்றின இருப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும், கடுமையான பொருளாதார சமனின்மை, மற்றும் மோசமான நிர்வாகத்தின் விளைவுகள் அடிப்படையிலுமே தோற்றம் பெற்றதெனலாம்.

சமூகப் பொருளாதார சமத்துவமின்மை மற்றும் இன ரீதியான ஒடுக்கு முறைகள் உண்மையாகவே மாலியில் ஏற்பட்டுள்ள மோதலில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன என்பது வெளிப்படையானது. நாட்டின் தெற்கு மற்றும் வடக்குக்கு இடையேயான பதட்டங்கள் நாட்டினுடைய சுதந்திரத்திற்கு பின்னராக காலப்பகுதியில் அதிகரித்ததுடன், 1962 ஆம் ஆண்டில் மாலியின் அரசாங்கத்துக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி வெடித்திருந்தது. இதனை தொடர்ந்து மேலதிகமாக மூன்று கிளர்ச்சிகள் வெடித்திருந்தன. இது, பமாகோவின் மத்திய அரசாங்கத்தால் வடகிழக்கு வரலாற்று ஓரங்களிப்பு - மற்றும், பரந்த பிரதேசத்தை நிர்வகிப்பதில் மாலி அரசாங்கம் எதிர்கொண்ட சவால்கள் - குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை அங்கீகரிக்க மறுத்த டூரெக் மற்றும் அரபு சமூகங்களை அதிகாரத்துக்குள் தக்கவைத்திருத்தல் - என்பன கடினமான ஒன்றாகவே காணப்பட்டது.

மேலதிகமாக, அசாவட் பிராந்திய கிளர்ச்சியாளர்கள், வறுமை மற்றும் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு நிதி சேகரிக்கும் வகையில், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத வர்த்தகங்களை தொடர்ச்சியாக பேணியத்துடன், குற்றங்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் செய்வதற்கும், போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யவும் தலைப்பட்டிருந்தனர். அதற்காக, சஹாரா போன்ற ஒரு பாலைவன மண்டலம் வரையறுக்கப்பட்ட பொருளாதார வாய்ப்புகளை வழங்குகின்ற போதிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, இப்பகுதி போதைப்பொருட்களை கடத்தல் மற்றும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான புலம்பெயர்ந்தோரின் கடத்தல் ஆகியவற்றிற்கு ஒரு முக்கிய வழியாக மாறிவிட்டது. பயங்கரவாதக் குழுக்கள் தங்கள் நடவடிக்கைகளுக்கு இலாபங்களைப் பெற சட்டவிரோத வர்த்தகத்தை பயன்படுத்தி வருகின்றன. AQIM இன் முன்னோடி என அறியப்படும் பிரசங்கி மற்றும் காம்பாட் (GSPC) க்கான குழு, அல்ஜீரியாவிலிருந்து வடக்கு மாலியில் 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதன் நிதி வருவாய்கள் கடத்தல் உட்பட்ட நடவடிக்கைகளை மாற்றியிருந்தது. இந்நிலையில் AQMI இப்பொழுது "வறிய வனாந்தர இளைஞர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான முதலாளியாக" சித்தரிக்கப்படுகின்றமை குறித்த பிராந்திய மோதல் இப்போதைக்கு முடிவுக்கு வரும் என எண்ணமுடியாமல் உள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .