2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மைத்திரியின் குத்துக்கரணமும் கூட்டமைப்பின் முடிவும்

புருஜோத்தமன் தங்கமயில்   / 2018 நவம்பர் 07 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், அப்போதைய பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை நோக்கி, மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர், “இடுப்பில் தைரியமற்றவர்” (ஆண்மையற்றவர்) எனும் அரசியல் நாகரிகமற்ற, இழிவார்த்தைகளை மேடை தோறும் பேசி வந்தனர்.   

சுமார் நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், அதே மாதிரியான நாகரிகமற்ற இழிவார்த்தைகளைப் பேசிக் கொண்டு, மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவு மேடையில் ஏறியிருக்கிறார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.  
நாட்டு மக்களின் ஆணைபெற்ற தலைவராக, மைத்திரிபால சிறிசேனவுக்குப் பாரிய பொறுப்புண்டு. 

வார்த்தைகளில் கண்ணியத்தைப் பேண வேண்டிய கடப்பாடும் உண்டு. ஆனால், அவரோ, ரணில் விக்கிரமசிங்கவையும் அவரது சகாக்களையும் நோக்கி ‘வண்ணாத்துப்பூச்சிகள்’ (ஓரினச்சேர்க்கையாளர்களை சிங்களத்தில் வண்ணத்துப்பூச்சிகள் என்று கேலி செய்வதுண்டு) என்று பேசியிருக்கின்றார்.   இதைக் கூறும் போது, சபையிலுள்ளவர்கள் சிரிப்பதற்கான கால அவகாசத்தை வழங்கித் தானும் சிரித்துக் கொள்கிறார்.   

சாதாரண ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து, பொதுவெளியில் பேசுவதற்கான அதிகாரம், யாருக்கும் இல்லாத போது, நாட்டின் முதற்குடிமகனாக இருப்பவர், இழிவார்த்தைகளின் வழி நின்று, அரசியலை வெற்றிகொள்ள நினைப்பது அநாகரிகமானது.  (நாடாளுமன்றத்துக்கு அருகில், திங்கட்கிழமை (05)மஹிந்த அணியினர் கூட்டிய ‘ஜன மஹிமய’ பேரணி மேடையிலேயே, மைத்திரிபால இவ்வாறாக நடந்து கொண்டார்.)   

தார்மீகத்தின் நாயகனாகவும் கண்ணியத்தின் காவலனாகவும் தன்னை மக்களிடம் முன்னிறுத்தி வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன, இன்றைக்கு வந்து சேர்ந்திருக்கின்ற இடமே அவரை யாரென்று சொல்லப்போதுமானது.   

அரசமைப்பு மீதான அச்சுறுத்தலுக்கும், நாட்டின் குழப்பங்களுக்கும் மூல காரணமாக ஜனாதிபதியே இருக்கின்றார். தான் இழைத்த தவறுகளை நியாயப்படுத்துவதற்காக,  மீண்டும் மீண்டும் அழுக்கைச் சேர்த்துக் கொண்டு செல்கிறார். அதை அவர், பெரும் வெற்றியாகவும் வெளிப்படுத்த முனைகிறார். இது, அவருக்கான பின்னடைவு மாத்திரமல்ல, ஒட்டு மொத்த நாட்டுக்குமான பின்னடைவு.  

அரசமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக்கிவிட்டு, பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நாடாளுமன்றத்தை ஒத்திவைத்திருப்பதனூடாக, மைத்திரிபால சிறிசேன பெரும் ஊழல் மோசடிக்கான வாய்ப்பைத் திறந்து விட்டிருக்கின்றார்.   

ஊழல் மோசடிகளுக்கு எதிராக எழுந்து வந்தவர், ஊழல் மோசடிகளின் வழியே, தன்னுடைய அரசியல் வெற்றியைப் பெற இப்போது நினைக்கிறார். அவரின் புதிய சகாக்கள், ‘குதிரை’ பேரங்களை நியாயப்படுத்துகிறார்கள்.   

குறிப்பாக, முன்னாள் இடதுசாரியும் இந்நாள் ராஜபக்‌ஷவின் விசுவாசியுமான வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கோடிகள் கொடுத்து வாங்குவது நியாயம் என்று, ஊடகங்களிடமே பேசுகிறார்.   

இவ்வாறான நெருக்கடியான நிலையை, நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், அறம் சார்ந்து எதிர்கொள்ள வேண்டிய கடப்பாடு ஏற்படுகின்றது. ஏனெனில், மக்களின் இறைமை கேள்விக்கு உள்ளாக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதனை, மீட்கப் போராடுவது அடிப்படையானது.  

ராஜபக்‌ஷக்களின் ஏதேச்சதிகாரம், ஒட்டுமொத்த நாட்டையும் நெருக்கடிக்குள் தள்ளியபோதுதான், ஆட்சி மாற்றத்துக்கான பெரும் ஆணையை 2015இல் மக்கள் வழங்கினார்கள். அதுதான், ஜனநாயக இடைவெளியைக் குறிப்பிட்டளவு திறந்தும் விட்டது.   

ராஜபக்‌ஷக்களிடம் ஆட்சியதிகாரம் மீண்டும் செல்வதற்கான சூழல் ஏற்பட்டவுடனேயே, அவர்கள் தங்களது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள். அநுராதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) பேசிய கோட்டாபய ராஜபக்‌ஷ, “நல்லாட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர், தனிப்பணியகம் உள்ளிட்ட முன்னோக்கிய விடயங்களை இல்லாமல் செய்வோம்” என்று சூளுரைக்கின்றார்.  

இன்னொரு பக்கம், நாமல் ராஜபக்‌ஷ, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை, ‘குதிரை’ப் பேரத்துக்காகப் பயன்படுத்த முனைகிறார்.   

பஷில் ராஜபக்‌ஷவோ, ஊடக முதலாளிகள், பிரதானிகள், முன்னாள் ஆசிரியர்களை முகவர்களாகக் கொண்டு, பேரம் பேசல்களில் ஈடுபடுகிறார். ஆசை வார்த்தைகளின் வழி தொடங்கும் ‘குதிரை’ பேரம், அச்சுறுத்தல் விடுக்கும் கட்டம் வரை நகர்வதாகக் கூறப்படுகின்றது. இந்தப் பேரங்களில் முகவர்களாகத் தமிழ்த் தேசியம் பேசிய ஊடகக்காரர்களும் இருப்பதுதான் வேதனையானது.  

இவ்வாறான அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில்தான், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஆதரவளிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கின்றது.   

இந்த அறிவிப்பு தொடர்பில், தமிழ்த் தேசிய அரசியல் களத்தில், கூட்டமைப்புக்கு மாற்றான தரப்புகளாகத் தங்களை முன்னிறுத்தும் தரப்புகள், பெரும் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றன. எந்தவிதமான வாக்குறுதிகளையும் வாங்கிக்கொள்ளாது, ரணிலைக் காப்பாற்றும் முயற்சியாகவே கூட்டமைப்பின் ஆதரவைக்  கொள்ள முடியும் என்றும் குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.  

அடிப்படையில், அரசமைப்புக்கு முரணான நடவடிக்கையொன்றை, நியாயத்தின் பக்கம் நின்று எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு, கூட்டமைப்புக்கு உண்டு. அநீதியின் கட்டமொன்று அரங்கேற்றப்பட்டு, அதற்கு அங்கிகாரம் கோரும் சித்து விளையாட்டே, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.   

அப்படியான கட்டத்தில், அநீதிக்கு அங்கிகாரம் பெற்றுக் கொடுக்கும் வேலையை, எந்தவொரு காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது. தமக்கான நீதியையும் நியாயத்தையும் தொடர்ச்சியாகக் கோரும் தரப்பாக, நீதியின் பக்கத்தில் நின்றாக வேண்டிய தார்மீகம், கூட்டமைப்புக்கு உண்டு.   

இந்தத் தருணத்தில் எழுத்துமூல வாக்குறுதிகளை வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவது அபத்தமானது. தற்போது, நிகழ்ந்திருப்பது தேர்தலொன்றுக்குப் பின்னரான ஆட்சி மாற்றமல்ல; ஆட்சியதிகாரத்தைக் குறுக்கு வழியில் கைப்பற்றும் சதிமுயற்சியேயாகும்.   

மக்கள் ஆணையைப்பெற்ற கட்சியாகவும் நாடாளுமன்ற ஜனநாயகங்களைக் காக்க வேண்டிய எதிர்க்கட்சியாகவும் கூட்டமைப்பு தற்போது எடுத்துள்ள முடிவு சரியானது.   

அதுவும், இரு தரப்புக்குள் இடையில், சமரச முயற்சிகளை ஏற்படுத்தி, பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கான கால அவகாசத்தை வழங்கிய பின்னரே, தமது தீர்மானத்துக்கு வந்திருக்கிறார்கள்.   

‘குதிரை’ பேரத்தின் வழி, ராஜபக்‌ஷக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்னும் இன்னும் வாங்கிக் கொள்ளலாம். நாடாளுமன்றம் 14ஆம் திகதி கூடும் போது, பெரும்பான்மையை நிரூபிக்கவும் செய்யலாம். 

ஆனால், அநீதியான நடைமுறையொன்றுக்கு எதிராக, ஜனநாயகக் கடமையைக் கூட்டமைப்பு வெளிப்படுத்தியிருக்கின்றது என்கிற விடயம் பதிவு செய்யப்படும். அது, பிழையான நடவடிக்கைகளுக்குக் கூட்டமைப்பு இணங்கவில்லை என்கிற வரலாற்றை, தென்னிலங்கையின் முகத்திலும் அறைந்து சொல்லும்.  

இன்னும் சிலர், மஹிந்த ராஜபக்‌ஷ அதிகாரத்துக்கு வருவதையே விரும்புகின்றனர். அவர்கள் முன்வைக்கும் வாதம், ராஜபக்‌ஷக்களே ‘வெட்டொன்று துண்டு இரண்டு’ என்று, உறுதியான தீர்மானங்களை எடுக்கக் கூடியவர்கள். அவர்களின் தீர்மானங்களை, தென்னிலங்கையின் கடும்போக்காளர்களும் கூட, எதிர்க்கமாட்டார்கள். அப்படியான கட்டத்தில், ராஜபக்‌ஷக்கள் அதிகாரத்தில் அமர்ந்தால், தீர்வைப்பெற்றுக்கொள்வது இலகுவானது என்கின்றனர்.   

2005இல் ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்‌ஷ, 2009 பேர் வெற்றிக்குப் பின்னர், தனிக்காட்டு ராஜாவாக நின்றார். அவர், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கும் வரையிலான காலம் என்பது, பெரியது.   
அப்போது, அவர், தமிழ் மக்களை எவ்வாறு நடத்தினார் என்பதுவும், அவரது சகோதரர்கள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை குறித்து, எவ்வாறான அணுகுமுறையை வெளிப்படுத்தினார்கள் என்பதுவும் எல்லோருக்கும் தெரியும். அப்படியான கட்டத்தில், ராஜபக்‌ஷக்களிடம் இருந்து, தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கையை, எவ்வாறு வைத்துக்கொள்வது என்று தெரியவில்லை. 

இன்னொரு பக்கம், ராஜபக்ஷக்கள் அதிகாரத்துக்கு வரும் பட்சத்தில் சர்வதேச அழுத்தம் இலங்கை மீது அதிகரிக்கும் என்கிற விடயம் முன்வைக்கப்படுகின்றது.  அது, உண்மையே. 

நாடாளுமன்றத்தில் யார் வென்றாலும் தோற்றாலும், இனி வரப்போகும் அரசாங்கம் எந்தவொரு தீர்க்கமான முடிவுகளையும் எடுக்கும் வல்லமையற்றதாகவே இருக்கும். அது சில மாதங்களுக்கே தொடரும் வாய்ப்புகளும் உண்டு.  

 நாடு மீண்டும் தொடர் தேர்தல்களின் காலத்துக்குள் பிரவேசிக்கின்றது. அப்படியான கட்டத்தில், மைத்திரி, மஹிந்த,  ரணில் எவரோடு வேண்டுமானாலும் பேரம் பேசல்களுக்கோ, எழுத்துமூல ஒப்பந்தமொன்றுக்கோ செல்வது தேவையற்ற ஒன்று. அதைக் கூட்டமைப்பு செய்யவில்லை என்பது, எதிர்கால வெற்றிக்குமான முதலீடாகவே கொள்ள வேண்டும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .