2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யேமனில் தொடரும் மனிதாபிமான அவலம்

Editorial   / 2019 மார்ச் 04 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனகன் முத்துக்குமார்

உலகிலேயே மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடியில் இப்போது யேமன் சிக்கியுள்ளது. 2.9 மில்லியனுக்கும் மேலான பொதுமக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ள இந்நிலையில், 21 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் - அதாவது மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதிக்கு மேலானவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு வ மே மாதம் கொலரா தொற்று பரவியத்திலிருந்து, 911,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டதாக பதிவாகியுள்ள இந்நிலையில் அதில் குறைந்தது 2,195 பேர் வரை இறந்திருந்தமை பதியப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கை உண்மையான நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை எனவும், உண்மையில் இறந்தவர்களின் தொகை மிகவும் அதிகம் எனவும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்கள் அறிக்கைகளில் தெரிவித்துள்ளன.

ஹீதி போராளிகளுக்கும் பல்வேறு அரச சார்பு சார்பு இராணுவ போராளிகளுக்கும் இடையிலான வன்முறை, சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியின் வான்வழித் தாக்குதல்களை அடுத்தும் மார்ச் 2015 முதல் யேமனில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 10,000 க்கும் அதிகமானது. 5,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் டிசம்பர் 2017இல் மதிப்பிட்டுள்ள போதிலும், உண்மையான இறப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருக்கும் என்றே நம்பப்படுகின்றது. குறித்த இடைவிடாத மோதல்கள் ஒரு மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில், குறித்த போர்ச்சூழல் காரணமாக சுமார் ஏழு மில்லியன் மக்கள் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறுபட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தங்கள், இடைக்கால ஐக்கிய நாடுகள் சமாதான பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்துக்கும் ஹூதி போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்றிருந்த போதிலும், யேமன் அரசாங்கம், போராளிகளுக்கு இடையிலான மோதல்கள் பாரிய அட்டூழியத்துக்கான குற்றங்களை பொதுமக்கள் மீது புரிய ஏதுவாய் இருந்திருந்தது. 2016 நவம்பர் 19 ஆம் திகதி இறுதியாக ஏற்படுத்தப்பட்டிருந்த 48 மணிநேர யுத்த நிறுத்த உடன்படிக்கை 48 மணித்தியாலங்களுக்குள் அரசியல் பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டமையை தொடர்ந்து முறிவடைந்ததை தொடர்ந்து ஏற்பட்ட யுத்தமானது, ஓராண்டுக்கு மேற்பட்ட காலமாக கண்மூடித்தனமான ஷெல், வான் தாக்குதல்கள் உள்ளடங்கலாக தொடர்கின்றது. சமீபத்திய மாதங்களில் குறித்த யுத்தமானது சனா மாநிலத்தை அண்டிய பிரதேசங்களில் நடைபெறுவது பாரிய மனித அவலத்தை தோற்றுவித்துள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக 2017 நவம்பர் 4 ஆம் திகதி, ஹூதி படைகள், சவூதி அரேபியாவுக்கு எதிராக ஏவுகணை தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்ததை தொடர்ந்து, சவுதி அரேபியா யேமனுடனான அனைத்து கடல், விமான வழி போக்குவரத்து, ஏற்றுமதி, இறக்குமதியை தடைசெய்திருந்தது. யேமன் அதன் பிரதான உணவு விநியோகத்தில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்கின்ற இந்நிலையில் குறித்த தடையானது ஏற்கனவே மனித அவலத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவுப்பஞ்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலைகள், மருத்துவமனைகள், அத்துடன் சர்வதேச மனிதாபிமான தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் உட்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை ஹூதி, அரசாங்க-சார்பு சக்திகள் தொடர்ந்து வருகின்றனர். குழந்தைகள், ஆயுத மோதல் பற்றிய ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் = வருடாந்த அறிக்கையானது, யேமனில் 2016 ஆம் ஆண்டில் 502 குழந்தைகளின் இறப்புக்களை ஆவணப்படுத்தியுள்ளது. சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணி குறைந்தபட்சம் 683 குழந்தைகளைக் கொன்று அல்லது காயப்படுத்தியதாகக் கூறும் குறித்த அறிக்கை, ஹூதிகள் 414 பேர் கொல்லப்பட்டதற்கு காரணம் குறித்த வான்வெளித் தாக்குதலே என அறிவித்திருந்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR), சர்வதேச மனிதாபிமான சட்டம் (IHL), சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களின் ஏற்பாடுகளை இரு தரப்பினரும் மீறியதாக உறுதி செய்துள்ளது. டிசம்பர் 19, 2018 அன்று, யேமனில் தடைசெய்யப்பட்டிருந்த ஏவுகணை தாக்குதல்களை சவூதி யயேமன் உள்நாட்டு போரில் பயன்படுத்தியதாக சவூதி அரேபியாவே உறுதிசெய்திருந்தது. ஏப்ரல் 20 ம் தேதி ஹூதி-சாலே படைகள் தடைசெய்யப்பட்ட மிதிவெடி, கண்ணிவெடிகளை பயன்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 4,500 சிறுவர்கள் படையினர்கள் ஆட்சேர்ப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக ஐ.நா. குழந்தைகள் அமைப்பின் அறிக்கை கண்டனம் தெரிவித்துள்ளது. OHCHR இன் தகவல்களின் படி, மோதல் நாட்டின் பஹாய் இன மக்களுக்கு எதிரான மதரீதியான துன்புறுத்தல் அதிகரிக்கவும் காரணமாக அமைந்திருந்தது.

இவ்வளவு இருந்தபோதிலும், ஐக்கிய நாடுகள் வழமை போலவே செயலிழந்து காணப்படுவது ஐக்கிய நாடுகளின் உண்மையான இருப்பையே கேள்விக்குட்படுத்தும் செயல்பாடாகும். சாத்தியமான போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றமை ஆதாரபூர்வமாக வெளிவரும் போதிலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை யேமனில் நடைபெறும் மோதலுக்கு போதுமான அளவில் இன்னமும் பதிலளிக்கவில்லை. ஏப்ரல் 2015க்கு பின்னரான காலப்பகுதியில் யேமன் மீதான எந்த ஒரு பாதுகாப்பு சபை தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை, மேலும் தரப்புக்களுக்கிடையில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு பாதுகாப்பு சபை எவ்வித நடவடிக்கையும் மேற்கொண்டிருக்காமை ஐக்கிய நாடுகளின் தோற்றுவிப்பு நோக்குக்கு விரோதமானது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பிராந்திய இராணுவ கூட்டணியை ஆதரிக்கும் பிரதான சக்திகளாக இருக்கும் அதே வேளையில், ஈரான் ஹூதிகளுக்கு தொடர்ச்சியாக இராணுவ உதவி வழங்கி வருவது ஒரு பதிலி யுத்தத்தின் வடிவாகும். சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை நிறுத்த அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுக்கு சர்வதேச அழுத்தம் கிடைக்காதவரை அல்லது குறித்த பிராந்தியத்தில் மூன்றாவது நாடு தலையிடும் வரை குறித்த மனித அவலம் ஓயாது என்பதே உண்மை நிலையாகும். இந்நிலையிலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் பாதுகாப்பு சபையின் இயலாமைக்கு எதிரான கண்டனம் பார்க்கப்பட வேண்டியதாகும்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X