2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமைச்சர் பதவியை ஏற்குமாறு சம்பந்தனுக்கு அழைப்பு

Editorial   / 2018 ஜூன் 23 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சுப் பதவியை ஏற்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

“அரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும். வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியைப் பெற்றுக்கொடுங்கள்” என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ, “இதை நான் முழுக்க, முழுக்க வடக்கு, கிழக்கில் வாழும் பாமர மக்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேன் என்பதை சம்பந்தன் புரிந்துக்கொள்வார் என நம்புகிறேன்”  என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கோட்டை, மிலோதா மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்க , அரசகரும மொழிகள் அமைச்சின் தேசிய மொழி கல்வி பயிலக நிறுவனத்தின் பயிற்சி பெற்ற மொழியாசிரியர்களுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர், அரசாங்கத்தில் இணைந்து அரசியல் தீர்வையும், அபிவிருத்தியையும் ஒருசேர முன்னெடுக்க எனது தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சுத்தான் தேவை என்றால் அதையும் கொடுத்து விட நான் தயாராக இருக்கிறேன்.

“அவர் எதிர்கட்சி தலைவர் பதவியில் இருப்பதை விட, அமைச்சுப் பதவியில் இருந்து அதிகம் பணி செய்யலாமென எண்ணுகிறேன். 

“வட, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும், இதோ இங்கே என்னுடன் நிற்கும் பிரதியமைச்சர் ஹலி ஷாகிர் மௌலானா உட்பட அனைத்து முஸ்லிம் எம்.பிக்களும் அரசில் இணைந்து தம் மக்களுக்கு அபிவிருத்திப் பணிகளை ஆற்றுகிறார்கள். இது மிகவும் பாராட்டுக்குரிய பணியாகும்.

“இதேபோல் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் இன்றைய தேவைகளை நிறைவேற்ற இதை நீங்களும் செய்யுங்கள் என நல்லெண்ண நோக்கில் அழைக்கிறேன்.

“எதிர்க்கட்சி தலைவர் பதவி உண்மையில் நாடாளுமன்ற விதிமுறைகளின் கீழேயே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், சபையில் எதிர்க்கட்சி வரிசையில் அதிக எண்ணிக்கை கொண்ட எம்.பிக்கள் பொது எதிரணியில்தான் உள்ளார்கள். நீங்கள் ஏதோ அவர்களுக்கு உரிய ஒரு பதவியை பிடித்து வைத்துகொன்டுள்ளது போல் அவர்கள் பேசுகிறார்கள். உண்மையில் இந்த பதவியை ஏற்றதன் மூலம் நீங்கள் தமிழ் அரசியல் பரப்பில் பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்துள்ளீர்கள் என  நான் நினைக்கிறேன்.

“இந்நிலையில், இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை சபையில் அதிக எண்ணிக்கை கொண்ட குழுவுக்கு வழங்கி விட்டு, தமிழ் மக்களுக்கு இன்று தேவையான அபிவிருத்தியை பெற்றுத்தர அமைச்சு பதவிகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .