2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆசிரிய நியமனத்தில் இடம்பெற்ற முறைகேட்டை விசாரிக்க சுயாதீனக் குழு வேண்டும்

Editorial   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எப்.முபாரக், பைஷல் இஸ்மாயில்,  கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

கிழக்கு மாகாணத்தில்  அண்மையில்  வழங்கப்பட்ட  பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின்போது  பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்பதற்கு, ஜனாதிபதி  செயலகத்தின் அதிகாரிகள் மூலம் சுயாதீனக்  குழுவொன்றை  நியமிக்குமாறு,  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர்  அஹமட், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை  அனுப்பி வைத்துள்ளார்.

இன்று (13) அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கிழக்கு  மாகாணத்தில்  3,000 ஆயிரத்துக்கு நியமன வெற்றிடங்கள் நிலவுகின்ற வேளையில் 1,441 பேருக்கான நியமனத்திற்கு அனுமதி இருந்தும் 1,119 பேருக்கே அண்மையில் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

“அண்மையில்  வழங்கப்பட்ட  பட்டதாரி  ஆசிரியர்  நியமனங்கள்  குறித்து  பட்டதாரிகள்  ஊடாக  மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற வண்ணமுள்ளன.

“இதனை நோக்குமிடத்து  குறித்த பட்டதாரி நியமனங்களின்  போது, அநீதிகள் மற்றும் குறைபாடுகள்  இடம்பெற்றுள்ளதை  உணர முடிகின்றது.

“எனவே, இதன்  காரணமாக  வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுக்கும் ஆர்பாட்டங்களைப்   புறந்தள்ளி விடமுடியாது.

“இந்நிலையில்  பட்டதாரி நியமனத்தில்  இடம்பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பில்  விசாரிக்க ஆளுநரால் அவரின் செயலாளரின் தலைமையில்  நியமிக்கப்பட்டுள்ள குழுவானது  குற்றஞ்சாட்டப்பட்டவரே குற்றத்தை விசாரிக்க நீதிபதிக் குழாத்தை நியமிப்பதற்கு ஒப்பானதாகும்.

“இவ்வாறான  செயற்பாடுகள் மூலம்  அநீதிக்குள்ளாக்கப்பட்டுள்ள பட்டதாரிகளின் அதிருப்தியும் கோபமும் நல்லாட்சி மீதே திரும்பும் என்பதையும் நாம்  புறந்தள்ளிவிட முடியாது.

“ஆகவே , ஜனாதிபதியவர்கள்  இந்த விடயத்தில் தலையிட்டு  பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளின் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரிக்க, சுயாதீனக் குழுவொன்றை நியமிக்குமாறு, கிழக்கு  மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சார்பில்  கோரிக்கை விடுக்கின்றேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .