2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கதிர்காமத்தில் சூடு ; ஒருவர் பலி

Editorial   / 2018 ஜனவரி 22 , மு.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமத்தில்​ பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்சென்றவர் பலியான சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.  

 இந்தத் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தை அடுத்து கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   

சனிக்கிழமை இரவு 10:55 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   

கதிர்காமம் நகரத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகிய இருவரும், வெடிஹிட்டி கந்த பக்கமாக பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.  
அவ்விருவரின் சமிக்ஞையையும் மீறி, மோட்டார் சைக்கிள் பயணித்துள்ளது. இதனையடுத்து பொலிஸ் கான்ஸ்டபிளினால், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

சம்பவத்தில், காயமடைந்த நபர், கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.  

இதனையடுத்து ஆத்திரம் கொண்ட பொதுமக்கள், பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.  
சம்பவத்தை கட்டுப்படுத்துவதற்காக, கண்ணீர்குண்டுப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் ஆகியவற்றை பொலிஸார் மேற்கொண்டு, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்துள்ளனர். 

இதேவேளை, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரில், குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  

அத்துடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ​தெரிவித்த பொலிஸார், நேற்று மாலை வரையிலும் 63 பேரை கைதுசெய்துள்ளதாகவும்​ தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .