2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

காணாமல் போயிருந்த 3 பெண்களும் சரணடைந்தனர்

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நிர்ஷன் இராமானுஜம் 

கொலன்னாவை பகுதியில் காணாமல்போனதாகக் கூறப்படும் மூன்று பெண்களும், பொலிஸ் நிலையங்களில் நேற்று (18) சரணடைந்துள்ளதுடன், அவர்கள் வழங்கியுள்ள வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுப்பதில், பொலிஸார் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். 

கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பெண் மற்றும் 15,14 வயதுடைய சிறுமியர் காணாமல் போயுள்ளனர் என, கடந்த சனிக்கிழமை, வெல்லம்பிட்டிய, கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையங்களில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், 19 வயதுடைய பெண்ணும் அவருடைய கணவரின் தங்கையான 15 வயதுடைய சிறுமியும், வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திலும்,14 வயதுடைய சிறுமி கம்பஹா பொலிஸ் நிலையத்திலும் சரணடைந்துள்ளனர். 

இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, குறித்த பெண்களின் அலைபேசிகளுக்கு மேற்கொண்டதாகக் கூறப்படும் அழைப்புகளின் விவரங்களைப் பெற்றுக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அதன்பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், 15 வயதுடைய சிறுமியின் காதலர் எனக் கூறப்படும் ஒருவரைக் கைது செய்து, விசாரணை நடத்தியுள்ளனர். 

அந்த விசாரணைகளின் பின்னரே, இவர்கள் சரணடைந்துள்ளனர் என, பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. 

குறித்த மூவரையும் நேற்று (18) பிற்பகல் வெல்லம்பிட்டிய பொலிஸார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதுடன் 19 வயதான ஒரு பிள்ளையின் தாய், மற்றும் மற்றுமொரு சந்தேகநபரை, தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தத் தீர்மானித்துள்ளனர். 

இந்த மூவரும், காணாமல்போன விடயம் தொடர்பாக விளக்கமளிக்கவில்லை எனவும் வெவ்வேறு விதமான வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன் சிறுமியர் இருவரையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X