2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியை ’விமர்சித்தோர், கட்சி தாவியோருக்கு நடவடிக்கை’

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச, அந்த விசாரணையின் பரிந்துரைக்கமைய, அவர்களது கட்சி உறுப்புரிமையைத் தடைசெய்ய முடியுமெனவும் கூறினார். 

 

இதேவேளை, பிரதமரின் அறிவுரைக்கமைய அமைச்சர்களை நியமிக்கும் ஜனாதிபதி, அரசமைப்புக்கமைய அவரது நிலைப்பாட்டில் இருப்பாரென்றும் அவரை அதிகமாக விமர்சித்தவர்கள், அவரது கொள்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவர்கள் தொடர்பில், ஜனாதிபதி சில முடிவுகளை எடுப்பாரென்றும் கூறினார்.

அத்துடன், அடிக்கடி கட்சி மாறும் உறுப்பினர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் இவர்கள் தொடர்பில் ஒழுக்காற்றுக் குழு நடவடிக்கை எடுக்கும் என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் கூறினார்.

இது ​தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்கார, சுதந்திரக் கட்சியிலிருந்து ஆளுங்கட்சியில் இணைந்து கொண்டவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்க முடியாதெனக் கூற, ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லையென்றும் பிரதமரால் பரிந்துரை செய்யப்படுபவர்களுக்கு, அமைச்சுப் பதவி வழங்கியே ஆகவேண்டும் என்றும், எனினும், தாம் பதவிகளை எதிர்ப்பார்த்து வரவில்லை என்றும் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணித் தலைவர் சாந்த பண்டார,ஜனாதிபதியின் முடிவுக்கு மத்திய குழுவின் அனுமதி கிடைத்துள்ளது என்றார்.

வேறோர் அரசாங்கத்துக்கோ கட்சிக்கோ ஆதரவளிப்பதென, சு.க தீர்மானம் எடுக்கவில்லை என்ற போதிலும், எவரேனும் கட்சி மாறுவார்களாயின், அது அவர்களது தனிப்பட்ட விருப்பமென்றும் கூறிய சாந்த பண்டார எம்.பி, ஆனால் அவ்வாறு சென்றவர்களுக்கு எவ்வித அமைச்சுப் பதவியையும் வழங்காதிருக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்றுக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X