2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’தமிழ் தேசிய இனத்தை உருவாக்கலாம்’

க. அகரன்   / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 06:07 - 1     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் உள்ள தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்தால் மாத்திரமே, ஈழத்தமிழர்கள் என்ற உண்மையான தமிழ் தேசிய இனத்தை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ள தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், இதன்மூலம், தமிழர்களின் அடையாளத்தையும் இருப்பையும் அறிவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வவுனியாவில் இன்று (17) நடைபெற்ற அகதேசிய முற்போக்குக் கழகத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

​ எங்க​ளை நாமே தாழ்த்தி வைத்துக்கொண்டிருப்போம் என்றால், பெரும்பான்மை இனத்தவர்களிடம், சம உரிமையைக் கோருவதற்கான தார்மீக உரிமையை நாம் இழந்துவிடுவோம் என்று கூறிய அவர், எனவே, எம்மை நாம் திருத்திக்கொள்ளவேண்டும் என்று அவர் கூறினார்.

இன்று உள்ள பாராபட்சங்கள், தள்ளிவைப்புகள் அனைத்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இருக்கவில்லை என்று கூறிய அவர், இன்று சமாதானம் வந்துவிட்டது, சட்டத்தின் ஆட்சி வந்திருப்பதாகக் கூறினாலும், அன்று இருந்த சமத்துவம், இன்று காணாமல் போய்விட்டது என்றும் கூறினார்.

அப்படியானால், புலிகள் மீண்டும் வந்து, சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமா என்றும் என்றும் அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைக் கூறி அரசியல் செய்யும் பலர்கூட, மலையக மக்கள் மீது பாரபட்சம் காட்டும் செயற்பாடுகளை இன்றும் முன்னெடுத்து வருவதாகவும் எனவே, இன்று உருவாகியுள்ள அமைப்பு, பிரதேசவாதத்தைத் தூண்டும் ஒரு அமைப்பாக இருக்ககூடாது என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 1

  • மு. கேசவன் Monday, 18 February 2019 07:39 AM

    ஏற்ககனவே கட்சிகள் கொடிகள் என மக்கள் பிளவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களை ஒன்றிணைக்கிறோம்என்ற கோஷத்துடன் புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு,அவ்வமைப்பின் கூட்டத்தில் தமிழ்மக்கள் ஒன்றுசேரவேண்டும் என அமைச்சர் கூறுவது எந்த அர்த்தத்தில் என்பது தெளிவு படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும் இரண்டாவது ,புலிகள் காலத்தில்பாரபட்சங்கள் தள்ளிவைப்புக்கள் இருந்ததில்லை என்பது. புலிகள் தவிர்ந்த வேறு எவரும் வடக்கு மற்றும் கிழக்கிலும், வெளிநாடுகளிலிருந்தும் புலிக்கொடியின் கீழ் அல்லாமல் ,வேறு கட்சிகள் அசியலில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டமையை,தாக்கி அழிக்கப்பட்ட சம்பவங்களை அமைச்சர் அறிந்திருக்கவில்லையா? கடந்த காலங்களில் அவரது பல நல்ல கருத்துக்களை கேட்டு ஆச்சரியம் அடைந்திருந்த எனக்கு ,இந்த கருத்துக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒற்றுமை மிக மிக அவசியம் ,அதற்கான விட்டுக்கொடுப்புக்களிற்கு தமிழ் கட்சிகள் தரப்பில் இன்றும் தயாரின்மையை காண்கின்றோம் என்பது உண்மையே. இலண்டனில் இருந்து கேசவன் நன்றி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .