2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘புகையிலைக்குத் தடை என்றால் மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன?’

Kogilavani   / 2017 ஜூலை 05 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

“புகையிலைச் செய்கை தடை செய்யப்படுகின்ற நிலையில், புகையிலைச் செய்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கு மாற்றுப் பயிர்ச் செய்கைகள் என்ற வகையில் என்னென்ன பயிர்ச் செய்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இல்லையேல் அறிமுகப்படுத்தப்படவுள்ளன” என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார்.   

நாடாளுமன்றத்தில், நிலையியற் கட்டளையின் கீழ், நேற்று (04) அறிக்கையொன்றை விடுத்து கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

“இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், யாழ்ப்பாணத்தில் சுமார் 400 ஆண்டு காலத்துக்கும் அதிகமான காலமாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற புகையிலைச் செய்கையானது, அச் செய்கையில் ஈடுபடுகின்ற மக்களுக்கு ஒரு பணப் பயிர் என்ற வகையில் பொருளாதார ரீதியில் பாரியளவிலான நலன்களை ஈட்டிக் கொடுத்துவருகிறது.   

“எனினும், 2020ஆம் ஆண்டுக்குள் புகையிலைச் செய்கை முற்றாகத் தடை செய்யப்படும் என, உலக சுகாதார ஒன்றியத்திடம் இலங்கை உறுதியளித்துள்ள நிலையில், மேற்படி புகையிலைச் செய்கையை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டு, அதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெறுகின்ற மக்களுக்கு மாற்று பயிர்ச் செய்கைகளை அறிமுகப்படுத்தி, அதனை ஊக்குவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.   

“வடக்கில் அனைத்து மாவட்டங்களிலும், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் புகையிலைச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், யாழ்ப்பாணத்திலேயே அதிகளவில் இப்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.   

“அந்த வகையில், இம்முறை யாழ்ப்பாணத்தில் 741.615 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் 1,956 விவசாயிகள் மேற்படி புகையிலைச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. அதாவது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமார் 27,952 குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், சுமார் 3,035 குடும்பங்கள் மேற்படி புகையிலைச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது மொத்த விவசாய செய்கையாளர்களில் நூற்றுக்கு 10.87 வீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைவிட இப் பயிர்ச்செய்கையில் தங்கியிருப்போரது எண்ணிக்கையும் பாரியதாகவுள்ளது.   

“தற்போது, யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மிளகாய் மற்றும் வெங்காயச் செய்கைகள் ஒப்பீட்டளவில் புகையிலைச் செய்கைக்கு அடுத்தபடியாக பொருளாதார ரீதியில் சாதகமான நிலையினைத் தருவதாக கூறப்படுகின்ற நிலையில், புகையிலைச் செய்கையில் ஈடுபட்டு வருகின்ற விவசாயிகளுக்கான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ற வகையில், வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுவதற்காக மானியங்கள், ஊக்குவிப்புக்கள் மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படுமா?” எனவும் வினவினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .