2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புலிகளை அழிக்க உதவிய பிரித்தானியா; ஆவணங்கள் அழிப்பு

Editorial   / 2018 மே 24 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சுமார் 200  ஆவணங்களை (கோப்புகள்) அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட காலப்பகுதியில், அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு, பிரித்தானியாவின் எம்.ஐ 5 (இராணுவ புலனாய்வு பிரிவு - 5) மற்றும்  எஸ்.ஏ.எஸ் (விசேட வான் சேவை) ஆகிய அமைப்புகள், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் குறித்த கோப்புகளில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

‘தி கார்டியன்’ ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதால், இலங்கையில் நடைபெற்ற மிகக்கொடூரமான யுத்தத்தின் ஆரம்ப காலத்தில், பிரித்தானிய மற்றும் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியமை தொடர்பான, எந்தவொரு பதிவுகளும் இல்லாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானிய பொது ஆவணங்கள் சட்டத்தின்படி, அரச திணைக்களங்கள், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளபோதிலும், இந்த ஆவணங்கள் பாதுகாக்கத் தேவையற்றவை என பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தொடர்பிலான 195 கோப்புகள் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம், குறித்த கோப்புகள் 1978க்கும் 1980க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், அதாவது இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்று மூன்று தசாப்தங்களின் பின்னரான காலப்பகுதிக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் அந்த கோப்புகள் எங்கு? யாரால்? எப்படி அழிக்கப்பட்டன என்பது தொடர்பிலான தகவல்களை வெளியிடவில்லை.

இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதால், இலங்கையின் பாதுகாப்பு நடைமுறைகளில் பிரித்தானியாவின் பங்களிப்பு மற்றும் தொடர்புகள் குறித்த, தகவல்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாக, மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இலங்கைத் தொடர்பான நிபுணரும், குற்றவியல் நிபுணருமான ரெச்சல் செயோக் (Rachel Seoighe) தெரிவித்துள்ளார்.

மேலும், கென்னியா போன்ற பல இடங்களில் நடந்த குற்றங்களை மறைப்பதற்காக, உத்தியோகபூர்வ ஆவணங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன என்பது தெரியும்.  காணாமல் ஆக்கப்படுதல் கொடூரங்கள் இழைக்கப்பட்ட, யுத்தத்தில் பிரித்தானியாவின் பங்கு எவ்வகையது? எவ்வாறு உதவியது என்பது தொடர்பில் அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு காணப்படுகின்றது, எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .