2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புலிகள் செய்த தவறுக்கு கூட்டமைப்பு பிராயச்சித்தம் நல்க வேண்டும்

Editorial   / 2017 ஜூன் 07 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக, தமிழ்க் தேசியக் கூட்டமைப்பினர் அந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்கான  ஒத்துழைப்பையும், ஆதரவையும் தரவேண்டும். இல்லையென்றால், 'முடியாது' என்று பகிரங்கமாக சொல்லிவிட்டு, 'வேண்டிய நடவடிக்கையை நீங்கள் எடுங்கள்' என்று, எங்களிடத்தில் கூறவேண்டும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் அரசியல் இலாபம் கருதியும் அரசியல் வாதிகள் தங்களது எழுச்சி, இருப்பு மற்றும் சொந்த நலன்களை முன்நிறுத்தியும் செயற்பட்டதனாலேயே இந்த நாடு அழிவுப்பாதைக்கு சென்றது. அத்துடன் சுதந்திரத்தக்குப்  பின்னர் நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் விட்ட தவறுகளினால் இந்த நாட்டிலே இரத்த ஆறு பெருக்கெடுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி, ஜெனீவா தீர்மானம் தொடர்பிலான, சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை செவ்வாய்க்கிழமை (06) முன்வைத்தார்.

அந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

30 வருடகால யுத்தம் முடிவடைந்து சர்வதேச மட்டம் வரை உள்நாட்டு பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னர் நம் நாட்டில்  அரசியல் அமைப்பு சபை ஒன்று உருவாக்கப்பட்டு, தீர்வு முயற்சிகளுக்காக எல்லா கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படுகின்றது.

இந்த உயர் சபையிலே எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஐயாவும், அவரது கட்சியை சார்ந்த சுமந்திரன் எம்.பியும் வீற்றிருக்கும் போது, நான் ஒரு விடயத்தை வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். புலிகளினால் வெளியேற்றப்பட்டு அகதிகளாக வாழ்ந்து வந்த வடக்கு முஸ்லிம்கள் 25 வருடங்களுக்குப் பின்னர் மீளக்குடியேற செல்லும் போது உங்கள் கட்சியைச் சார்ந்த ஒரு சிலர்  அவர்களின் மீள்குடியேற்றத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்த்து வருகின்றனர். முல்லைத்தீவில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை அப்பட்டமாக இடம்பெறுகின்றது.

யாழ்ப்பாணத்தில் அந்த பிரதேச முஸ்லிம்கள் மீள்குடியேறுவதற்காக வீடுகளை அமைக்கவென மீள்குடியேற்ற செயலணி மூலம் நிதி ஒதுக்கப்பட்ட போது அதற்கு அனுமதிக்க முடியாது என்று உங்கள் கட்சியைச்சார்ந்த ஒரு சிலர் அடம்பிடித்துள்ளனர்.  

மாகாண சபை உறுப்பினர் ஒருவருடன்  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சேர்ந்து இந்த  எதிர்ப்பை வெளிகாட்டி இருப்பது வெட்கமாக இருக்கின்றது. எனினும், நாங்கள் இந்த மக்களை மீள்குடியேற்றும் விடயத்தில் மிகவும் திறந்த மனதுடனும், உறுதியாகவும் இருக்கின்றோம் என்பதை இந்த உயர் சபையிலே உங்களுக்க கூறி வைக்க விரும்புகின்றோம் என்றும் கேட்டுக்கொண்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .