2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிழக்கு பட்டதாரிகளால் மகஜர் கையளிப்பு

Editorial   / 2017 நவம்பர் 22 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கும் கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்குமிடையில் இன்று (22) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற சந்திப்பின் போது, ஆளுநரிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தால் கையளிக்கப்பட்ட அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கிழக்கு மாகாணத்தில் சுமார் 8,000க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். கடந்த காலங்களில் எவ்விதமான நியமனங்களும் இம்மாகாண பட்டதாரிகளுக்கு வழங்கப்படவில்லை. தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த கவனயீர்ப்புப் போராட்டங்களால் 2017.07.31 அன்று, கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.  

“இதில் 6,880 பட்டதாரிகள் தோற்றி, 2,868 பட்டதாரிகளே சித்தியடைந்தனர்.  கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு 2017.10.26 அன்று வெளியிட்ட நேர்முகப் பரீட்சைக்கான பெயர் பட்டியலில் பல்வேறு பாகுபாடுகள் காணப்படுகின்றன.

“இதில், இரண்டு பாடங்களிலும் 40க்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தவர்களின் பெயர்கள் இடம்பெறாமை வேதனைக்குரிய விடயமாகும்.

“ஆசிரியர் போட்டிப் பரீட்சை முடிவுகள் வெளிடப்பட்ட நிலையில், நேர்முகத்தேர்வுக்கான மாவட்ட முதல்நிலைப் புள்ளிகள் அடிப்படையில், பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதிலும், பல்வேறு அநீதிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் பட்டதாரிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“வர்த்தமானி அறிவித்தலின்படி போட்டிப் பரீட்சையில் சராசரியாக இரு பாடங்களிலும் 40 புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் மொத்தப் புள்ளிகளின் மாவட்ட முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்கப்படுமெனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

“ஆனால், நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படாமல் வெற்றிடத்தின் அளவுக்கான சித்தியடைந்த பட்டதாரிகளை மாத்திரம் பெயர்ப்பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளமையானது கேலிக்கூத்தான விடயமாகும்.

“இவ்வாறு பெயர்ப்பட்டியல் வெளியிடப்படுமெனில், ஏன் நேர்முகப் பரீட்சையில் 25 புள்ளிகள் வழங்கப்பட வேண்டும்? நேர்முகப்பரீட்சை புள்ளியின் பின்னரே வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இதுவே தொழில்உள்ளீர்ப்புக்கான பொறிமுறையாகும்.

“மேலும், மாவட்ட அடிப்படையில் வெட்டிப்புள்ளி வழங்கப்படுவதால் குறைந்த புள்ளிகளைப் பெற்ற பட்டதாரிகள் உள்வாங்கப்படும் அதேவேளை, அம்பாறை, மட்டக்களப்பு பட்டதாரிகள் புறக்கணிக்கப்படிக்கின்றனர்.

“அத்தோடு, ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகளின் பெயர்கள், இரண்டு அல்லது மூன்று பட்டியல்களில் உள்வாங்கப்பட்டிருப்பது ஏனைய பட்டதாரிகளின் வயிற்றில் அடிப்பதற்கு சமனாகும்.

“மேலும், அரச திணைக்களத்தில், நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் பெயர்பட்டியலில் உள்வாங்கப்படிருப்பது, அடிப்படைத் தகுதிக்கு முரணான விடயமாகும்.

“கிழக்கு மாகாணத்தில் 4,927 ஆசிரியர் வெற்றுடங்கள் காணப்படுகின்றன என கல்விப் பணிப்பாளர் அறிக்கையிட்ட நிலையில் 1,446 வெற்றிடங்களை நிரப்ப மத்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது.

“எனவே, மீதமுள்ள 3,481 வெற்றிடங்களுக்குள் சராசரியாக 40 புள்ளிகளைப்  பெற்றபட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .