2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘திருக்கோணேஸ்வரர் ஆலய சட்டவிரோத கடைகள் அகற்றப்பட வேண்டும்’

Editorial   / 2019 ஜனவரி 03 , பி.ப. 05:11 - 1     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், எஸ்.எம்.றனீஸ்

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்பட்ட வேண்டுமெனவும் இவை ஆலயத்தின் புனிதத்தன்மையைப் பாதிப்பதுடன், இயற்கை சமநிலையைச் சீர்குலைப்பதாகவும், திருகோணமலை நகராட்சி மன்றத் தலைவர் நா.இராசநாயகம் தெரிவித்தார்.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்திலுள்ள கடைகளை, அவ்விடத்திலிருந்து அகற்றி, மலையடிவாரத்தில் அமைப்பது தொடர்பாக, திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இன்று (03) நடைபெற்ற  விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சிநிலமே, க.துரைரெட்ணசிங்கம், மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ புஸ்பகுமார, நகராட்சி மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், திருக்கோணேஸ்வரர் ஆலயப் பரிபாலன சபையினர், கடை வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கும் போது, நாட்டிலுள்ள ஏனைய புனித பிரதேசங்களான அநுராதபுரம், தலதா மாளிகை போன்ற இடங்களில் ஆலயங்கள் உள்ள இடங்களுக்கு அருகாமையில் இவ்வாறான வியாபாரா நிலையங்கள் அமைந்திருக்கவில்லையெனவும் ஆலயங்களுக்கு சற்றுத் தொலைவிலேயே வியாபாரநிலையங்கள் அமையப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு ஆலயத்தின் அருகில் இக்கடைகள் அமைந்திருப்பதால் திருகோணமலை நகரத்தின் அழகை, ஆலயத்திலிருந்து பார்க்கும் பார்வை முகம் மறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இக்கடைகள்  அனுமதியற்ற கடைகளாகவே காணப்படுவதாகவும் நகராட்சி மன்றம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்கம் போன்ற திணைக்களங்களில் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை​ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச செயலகப்பிரிவின் சித்தாறு பாலம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படுமென,  குறித்த பால நிர்மாண ஒப்பந்தக்காரர், இக்கூட்டத்தில் உறுதியளித்துள்ளார்.

இப்பாலம் உரிய காலத்தில் நிர்மாணிக்கப்படாமையால் பிரதேச மக்கள் பல அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 1

  • சபாபதி சந்திரமோகன் Saturday, 05 January 2019 01:53 PM

    இலங்கை தீவின் எந்தவொரு சமய ஆலய வளாகத்திலும் இவ்வாறு வர்த்தக நிலையங்களை காண முடியவில்லை. பொதுவாக பவுத்த வழிபாட்டுத் தலங்கள். அனுமதி அற்ற வியாபார நிலையங்கள் எனின் வழக்கு தாக்கல் செய்ய முடியாதா? கட்டடத்திற்கு பாதிப்பு என்று மரம் தறித்தால் மட்டுமா இங்கு சட்டம்? உண்மையில் சட்ட விரோத வியாபார நிலையங்கள் அகற்றப்பட்டு ஆலயபுனிதம் பேணப்படல் வேண்டும்.வரவேற்பு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .