2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’நிர்வாக சேவை தெரிவில் சிறுபான்மையினர் புறக்கணிப்பு’

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 14 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீட்

இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்டப் போட்டிப் பரீட்சை மூலமான தெரிவில் சிறுபான்மையினர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டார்களா ஏன்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் இன்று (14) ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது,

“இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கு நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் 69 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம் உத்தியோகத்தர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றினர். எனினும், இத்தெரிவில் தமிழ், முஸ்லிம் உத்தியோகத்தர்கள் எவருமில்லை.

“கடந்த காலங்களில் நடத்தப்பட்ட சகல போட்டிப் பரீட்சைகளிலும் தமிழ், முஸ்லிம் உத்தியோகத்தர்கள் சித்தியடைந்துள்ளார்கள். சிறுபான்மையினத்தவர்களுள் திறமையானவர்கள் பலர் இருக்கின்ற போதும், இந்தப் பரீட்சையில் மட்டும் ஏன் சிறுபான்மையினர் எவரும் தெரிவாகவில்லை என்ற கேள்வி சிறுபான்மையின மக்களிடையே எழுந்துள்ளது. 

“இந்த அரசாங்கத்தில் சிறுபான்மையினர் புறக்கணிப்பாக இது இருக்கலாமென பலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

“அரசால் நடத்தப்படுகின்ற பாடசாலை மட்டத்திலான புலமைப் பரிசில் பரீட்சை, சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தேசிய மட்டச் சாதனைகளை, சிறுபான்மையின மாணவர்கள் புரிந்து வருகின்றனர்.

“பல்கலைக்கழகப் பரீட்சைகள், போட்டிப் பரீட்சைகளில் சிறுபான்மையின மாணவர்கள் பெருந்திறமைகளைக் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பரீட்சையில் மட்டும் சிறுபான்மையினர் தோற்று விட்டார்களா என்பதை ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கின்றது என்பது நியாயமான கருத்தாகும்.

“எனவே, பொது நிர்வாக அமைச்சர் இந்த விடயத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும். பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த நியாயமான சந்தேகத்தை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .