2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’வருட நடுப்பகுதியில் இடமாற்றம் கற்பித்தலில் பாதிப்பை ஏற்படுத்தும்’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 20 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தை வருட நடுப்பகுதியில் மேற்கொள்வதன் மூலம் தரம் -5, க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அதன் தாக்கம் பரீட்சைகளிலும் காணப்படும் என, கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமாhர் பிரசன்னா தெரிவித்தார்.

பதில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் கூட, சிலவேளைகளில் அதன் தாக்கம் காணப்படும் எனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணசபை அமர்வு, அதன் தவிசாளர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் மாகாணசபையில் இன்று நடைபெற்றது. அதன்போது, ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான அவசரப் பிரேரணையை முன்வைத்து அவர் உரையாற்றியபோதே, மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'தேசிய இடமாற்றக் கொள்கையின் பிரகாரம் மே, ஜுன் ஆகிய மாதங்களில் ஆசிரியர் இடமாற்றத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஓகஸ்ட் மாதத்துக்குள் கல்வி வலயங்களிலிருந்து இடமாற்றத்துக்கான விண்ணப்பங்கள் மாகாணத்துக்கு கிடைக்க வேண்டும். அப்போதே, நவம்பர் மாதத்துக்குள் இடமாற்றப் பட்டியலைத் தயாரித்து, டிசெம்பர் மாதத்தில்; வெளியிட முடியும். இருந்த போதிலும், கிழக்கு மாகாணத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.

'கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில்; ஆசிரியர்களிடம் இடமாற்றத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இது காலதாமதத்துக்கு காரணமாக அமைந்தது.
வருடத்தின் நடுப்பகுதியில் இடமாற்றம் வழங்குவதானது, வருடாந்த இடமாற்றம் என்று சொல்ல முடியாது.  

'மேலும், முறையற்ற இடமாற்றங்களால் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்துவிட்டு, இம்மாகாணத்தில் பெறுபேறுகள் வீழ்ச்சி அடைந்துவிட்டதெனக் கூறுவதில் எந்தவித அர்த்தமுமில்லை' என்றார்.   

'ஆசிரியர்களை மட்டும் இடமாற்றுவதை விட, வலயங்களில் 5 வருடங்களுக்கு மேலாகக் கடமையாற்றிவரும் அதிகாரிகளையும் இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அத்துடன், 10 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றும் அதிபர்களுக்கான இடமாற்றம்  தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .