2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அடுத்த 72 மணி நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி வாக்குமூலம்

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலமளிக்க தயாராக உள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டது.

இதன்போது, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டது.

அவர்கள் இருவரையும் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

இதன்போது, குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார் தரப்பில் மன்றில் ஆஜரான அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேகுணவர்னவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர் மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் தாக்குல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை (07) அல்லது நாளை மறுதினம் (08) வாக்குமூலம் அளிப்பதற்கு  தயாராக உள்ளதாக அறிவித்துள்ளதாகவும் அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் மன்றில் வெளிப்படுத்தினார்.

எனினும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதுவரை தினமொன்றை ஒதுக்கித்தரவில்லை என்றும் அவர் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .