2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’கூட்டணி உறுதி’

Editorial   / 2020 பெப்ரவரி 02 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சஜித் பிரேமதாஸவின் வாசஸ்தலத்தில் இன்று (02) மதியம் இடம்பெற்ற கூட்டத்தின்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கடந்த வார ஆரம்பத்தில், சஜித் தலைமையில் கூட்டணி அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கிகாரம் வழங்கியிருந்தது. ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்தவர்களான எங்களின் யோசனையை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கிகரித்தமை மகிழ்ச்சிக்குரியது. அதனடிப்படையில், இன்று மதியம், சஜித் பிரேமதாஸவின் இல்லத்தில் நானும் சம்பிக்க ரணவக்கவும் ரவூப் ஹக்கீமும் கூடி ஆராய்ந்தோம்.

'சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கிய அங்கிகாரத்தின் பிரகாரம், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ரஞ்சித் மத்தும பண்டாரவை, கூட்டணியின் பொதுச் செயலாளராக நியமிக்கும் பரிந்துரையை முன்வைத்திருக்கிறோம். இக்கூட்டணிக்கு சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கவுள்ளதோடு, கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் அங்கம் வகிப்பர்.

'நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேட்பாளர் நியமன சபையின் தலைவராக சஜித் பிரேமதாஸ இருப்பதோடு, பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர் நியமன சபையின் அங்கத்தவர்களாக இருப்பார்கள். வேட்பாளர்கள் நியமனம் தொடர்பான இறுதி முடிவை இந்தச் சபையே தீர்மானிக்கும். 

'சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய கூட்டணியின் பெயர், சின்னம் தொடர்பில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இன்னமும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை. பெயர், சின்னம் தொடர்பில் இவ்வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படுவதோடு கூட்டணித் தலைவர்களுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்படும்' என, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .