2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘ கூட்டமைப்பு ஆதரவளிக்காது ‘

Editorial   / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

தேசிய அரசாங்கம் என்பது, அரசாங்கத்தின் நிலைப்பாடென்பதால், அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும் பங்காளியாக இருக்காதெனத் தெரிவித்துள்ள நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், அதற்கு ஒருபோது, கூட்டமைப்பு ஆதரவளிக்காது எனவும் தெரிவித்தார்.

“தமிழ் மக்களின் விடுதலையென்பது இன்னும் முற்றுப்பெறவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை அடக்கும் சக்திகள் பல்வேறு நிலைகளில் இருந்தன” எனத் தெரிவித்த அவர், “அதனை நாங்கள் கதைத்தால் இனவாதமென்பர். நில அபகரிப்பு, அரசாங்கத்தால் மட்டும் செய்யப்படவில்லை. பல்வேறு வழிகளில் இடம்பெறுகின்றன. கிழக்கில் மக்களை வழிநடத்தவேண்டுமானால் அது இளைஞர்களினாலேயே முடியும்” என்றார்.  

தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் பொதுக்கூட்டம், சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

“அன்றாடப் பிரச்சினையைத் தீர்ப்பது. அடுத்ததாக தமிழ் மக்களின் இறையாண்மை, நிலங்களைப் பாதுகாத்தல் என, தமிழர்களின் பிரச்சினைகளை இரண்டாக பார்க்கவேண்டும்” என்று தெரிவித்த அவர், “இவ்விரண்டு விடயங்களிலும் இளைஞர்கள் கவனமெடுக்கவேண்டும். அதற்காக ஆயுதமேந்தி சண்டையிடுங்கள் என்று சொல்லவில்லை. அவ்வாறான நிலையொன்று இனி ஏற்படப்போவதுமில்லை” என்றார்.  

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் பல்வேறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சிங்கள தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை விடவும் தமிழர்கள் தரப்பில் இருந்தே அதிகளவான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன” என்று தெரிவித்த அவர், “சிங்களத் தரப்பை விமர்சிப்பதை விடவும் தமிழர் தரப்பை விமர்சிக்கும் நிலையே தமிழர் தரப்பில் அதிகமாகக் காணப்படுகின்றது” என்றார்.  

இந்த அரசாங்கத்துடன், கூட்டமைப்பு சோரம்போயுள்ளதென யாராவது விரல் நீட்டமுடியாது என நினைவுபடுத்திய அவர், “கடந்த மூன்று ஆண்டுகளாக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். காணாமல்போனோர் பிரச்சினைக்காக ஓர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கவேண்டுமென நாங்கள் கோரிவருகின்றோம். 

“கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரின் பேச்சுகளே, கூட்டமைப்புக்கு எதிரான கருத்துகளை உருவாக்கியுள்ளது. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முற்றாகத் தீர்க்கப்படவில்லை. எங்களுக்கு சுதந்திரமில்லை. அதனை எங்கள் மக்கள் சொல்லுகின்றபோது, அதற்கு மாறான கருத்துகளை தெரிவிக்கும்போதே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன” என்றார்.  

“சோரம் போகாமலே, இந்த அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் என்றடிப்படையில், வெளியிலிருந்து ஆதரவு வழங்கிவருகின்றோம்” என்று தெரிவித்த அவர், “தாங்கள் நினைத்திருந்தால் பல அமைச்சுகளை பெற்றிருக்கமுடியும்” என்றார்.  

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வைத்துக்கொண்டு, தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அது அரசாங்கத்தின் நிலைப்பாடாகுமெனத் தெரிவித்த அவர், “அதில், கூட்டமைப்பு ஒருபோதும் பங்காளியாக இருக்காது” என்றார்.  

“கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை எடுத்தாலென்ன என்ற கருத்தாடல், தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. முஸ்லிம்களின் கிராமங்களைப் பார்க்கும்போது செழிப்பான வளமான பிரதேசமாக உள்ளன” என்று தெரிவித்த அவர், “எங்களது கிராமங்களும் அவ்வாறு செழிப்பாகவே இருக்கின்றன. 16 எம்.பிக்களைக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு, அமைச்சுகளைப் பொறுப்பேற்றால், பல விடயங்களைச்செய்யலாம் என மக்கள் நினைக்கும் நிலையும் உள்ளது. ஆனால் நாங்கள் அதனைச்செய்யவில்லை” என்றார்.  

“கூட்டமைப்பு இன்றும் நிதானமாகவே செயற்பட்டுவருகின்றது. இனப்பிரச்சினை, ஐ.நா சபையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதை, இங்கு வருகைதருகின்ற சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்” என்று நினைவுபடுத்திய அவர், ஐ.நா சபையின் தீர்மானங்களைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்கு, இந்த அரசாங்கத்துக்கு உடந்தையாக இருக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .