2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’சர்வதேச விசாரணைக்கு இலங்கை இணங்கவில்லை’

Editorial   / 2018 மார்ச் 27 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கமல்

யுத்தக் குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சர்வதேச நீதிபதிகளுக்கான அனுமதிகளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வழங்க இணக்கம் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அரசமைப்புக்கு முரணாக இலங்கை அரசாங்கம் செயற்படாது என்றும் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

'ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு, இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேசத்துக்குத் தெளிவுபடுத்தியது.

'குறிப்பாக இலங்கையில் சகழ்வாழ்வு என்ற விடயம் குறித்துப் பெரிதும் சுட்டிக்காட்டப்பட்டது. மேற்படி விடயங்களில் குறைந்த வேகத்தில் இலங்கை செயற்படுகின்றது என்று சர்வதேச தரப்புகள் கூறியிருந்தனர்.

'இருப்பினும், காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இலங்கைக்குப் பாராட்டும் கிடைத்தது. அதனையடுத்து கண்டி திகனையில் இடம்பெற்ற கலவர நிலைமைகள் குறித்து பல தரப்புகள் கேள்வி எழுப்பினர். அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன வாக்குறுதி வழங்கினார்.

'இவ்வாறிருக்கையில் இலங்கையில் சர்வதேச நீதிபதிகளைக் கொண்டு யுத்தக்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதற்கு அண்மையில் இடம்பெற்ற ஜெனீவா அமர்வில் இலங்கை இணக்கம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. இது உண்மைக்குப் புறம்பான விடயமாகும்.

'எவ்வாறாயினும் யுத்தக்குற்ற விவகாரங்களை இலங்கை அரசு அரசமைப்பில் கூறப்பட்டுள்ள நியதிகளைப் பின்பற்றியே முன்னெடுக்கும் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன வாக்குறுதி வழங்கினார். அதனால் இலங்கை அரசமைப்பில் எந்த அத்தியாயத்திலும் சர்வதேச நீதிபதிகளை அனுமதிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.

எனவே மேற்படி விவகாரம் குறித்து போலி தகவல்களை வெளியிடுவதற்கான அவசியமில்லை. சர்வதேச நீதிபதிகளின் விசாரணைக்க இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்காது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .