2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’தமிழீழ இனவாதிகள் நாட்டுக்கு வெளியே இருக்கின்றனர்’

Editorial   / 2018 மே 20 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில ஊடகங்களும் இனவாத அமைப்புக்களும் தவறாக குறிப்பிடுவதைப் போன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளிலும் எமது பாதுகாப்பு படையினர் மீது யுத்தக் குற்றங்கள் சுமத்தப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு படையினருக்கும் எதிரான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு சார்பானவர்களே இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் எனவும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நேற்று 919) பிற்பகல் நாடாளுமன்ற விளையாட்டரங்கிலுள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெற்ற தேசிய இராணுவ தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்வில்  தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி இராணுவத்தினரையும் தீவிரவாதிகளையும் சிலர் சரியாக இனங்கண்டு கொள்ளாமை கவலைக்குரிய விடயமாகும் எனத் தெரிவித்தார்.

சில அரசியல்வாதிகளுக்கும் பணத்தை மட்டுமே நோக்காகக் கொண்ட சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் கூட இன்று இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையிலான வேறுபாட்டை சரிவர புரிந்துகொள்ள முடியாதுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எமது சிந்தனைகள், தேசத்தின் அடையாளங்கள், மரபுரிமைகள், பண்பாடு என்பவற்றுடன் நாட்டினதும் மக்களினதும் இராணுவத்தினரதும் கௌரவத்தை பேணும் வகையில் சகலரும் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சில அரச ஊடகங்களும் இன்று இராணுவத்தினரை கௌரவிக்க மறந்து போயுள்ளதுடன், சில தனியார் ஊடக நிறுவனங்களும் தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினரின் நன்மைக்காக மேற்கொள்ளும் செயற்திட்டங்கள் தொடர்பாக கருத்துக்களை வெளியிடாமை கவலைக்குரியதாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இராணுவத்தினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல்வாதிகளின் கைபொம்மைகளாக செயற்படக்கூடாது என்பதுடன், அரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவோ அதிகாரத்தை பெற்றுள்ள அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கோ அல்லது அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கவோ இராணுவத்தினரை உபயோகிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

மிலேச்சத்தனமான தீவிரவாத யுத்தம் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த எண்ணங்கள் இன்னும் முற்றாக இல்லாதொழிக்கப்படவில்லை என்பதுடன், நாட்டிற்கு வெளியே இன்றும் தனியான ஈழ நாடு பற்றிய கனவினைக் கொண்டுள்ள இனவாதிகள் காணப்படுவதுடன், அவர்களது அந்த கனவு நிறைவேற ஒருபோதும் தாம் இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த மூன்றரை வருட காலத்தினுள் அரசாங்கம் தனது நட்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் நாட்டைப் பிளவுபடுத்தும் எண்ணங்களை தோற்கடிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுடன், தொடர்ந்தும் அவ்வாறே செயற்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X