2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

‘தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்’

Editorial   / 2018 மார்ச் 07 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திரமானதும் சுமுகமானதுமான சூழலில், மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய எமது தாய்நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும், அரசு என்ற வகையிலும் அரச தலைவர் என்றவகையிலும், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேனென்பதை, அனைத்து மக்களுக்கும் தெளிவுபடுத்துவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதைத் தெளிவுபடுத்த, வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக, நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற இனங்களுக்கிடையிலான வேற்றுமையையும் மோதல்களையும் ஏற்படுத்தும், ஒற்றுமையைச் சீர்குலைக்கும் மிகவும் கவலைக்குரிய சம்பவங்கள் காரணமாக, நாட்டில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலைமையைக் கவனத்திற்கொண்டே, இந்த விசேட அறிவிப்பை வெளியிடுவதாகவும், நேற்று (06) விடுத்த அறிக்கையொன்றில், ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.  

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

‘இந்தச் சம்பவங்கள் காரணமாக, உயிரிழப்புக்களுக்கும் பொருள் இழப்புக்களுக்கும் முகம்கொடுத்த அனைத்துக் குடும்பங்களுக்கும் அவர்களது உறவுகளுக்கும்;, எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன், மேற்கொள்ளப்பட்ட அனைத்து வன்முறைச் சம்பவங்களையும் இச்சந்தர்ப்பத்தில் நான் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். அந்த அசம்பாவிதங்களை கண்டிக்கின்ற அதேவேளை அச்செயல்களில் ஈடுபட்ட தனி மனிதர்கள், அமைப்புக்கள், குழுக்கள் ஆகிய அனைத்து தரப்புக்களுக்கும் எதிராக, சட்டத்தை மிக நேர்த்தியாகச் செயற்படுத்த வேண்டுமென, நான் பொலிஸ் துறைக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறேன்.

‘அதேபோல், ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலைமையைச் சாந்தப்படுத்துவதற்கும் இந்தப் பதற்ற நிலைமையைப் போக்குவதற்கும், அப்பிரதேசங்களில் சமாதானத்தை ஏற்படுத்தி, நாட்டின் அனைவரும், சுதந்திரமாகவும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு, பொலிஸ், விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் அரச அதிகாரிகள், பிரதேச அரசியல்வாதிகள் ஆகியோரை ஒன்றிணைத்து, அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஆலோசனை வழங்கியிருக்கிறேன்.

‘அதேபோன்று, ஏற்பட்டிருக்கும் இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, நாம் நமது நாட்டினுள் மிகத் தெளிவாக ஏற்படுத்தவேண்டிய தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அந்நியோன்யப் புரிந்துணர்வு, இனங்களுக்கிடையிலான நட்பு ஆகியவற்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, அரசாங்கம் என்றவகையில், எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை, நான் இங்கே கூறவிரும்புகிறேன்.

வணக்கத்துக்குரிய மகாநாயக்கர்கள் உள்ளிட்ட மஹா சங்கத்தினரதும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத் தலைவர்களதும் வழிகாட்டலும் பங்களிப்பும், இச்சமயத்தில் மிக முக்கியமாக தேவைப்படுகின்றது என்பதை மிகுந்த கௌரவத்துடன் வலியுறுத்துகின்ற அதேவேளை, பிரதேச அரசியல் தலைமைகளுக்கு, இம்மோதல்களைத் தடுப்பதற்கும், பதற்றத்;த்தைத் தணிப்பதற்கும் தேவையான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொடுக்குமாறு, நான் கேட்டுக் கொள்கிறேன்.

‘அதேபோல், பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர், நேற்று முதல், இன்றும் எதிர்வரும் நாட்களிலும், 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக செயற்படுவதன் மூலம், இப்பிரதேசங்களில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்; மேற்கொள்ள வேண்டுமென, நான் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன்.

‘ஏற்பட்டுள்ள இந்த நிலைமையைப்பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, விசேட தேசிய பாதுகாப்பு சபை கூட்டமொன்றை நடத்தி தேவையான தீர்மானங்களை எடுத்திருப்பதுடன், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து, எதிர்காலத்துக்குத் தேவையான முறையான திட்டத்தையும் வகுத்திருக்கின்றோம். அதனால், அனைவரும் சமாதானத்துடனும் அமைதியாகவும் வாழ முயற்சிக்கும் அதேவேளை, குறிப்பாக, பௌத்த நாடு என்ற வகையில் ‘குரோதத்தால் குரோதம் தணியாது’, ‘பழிதீர்ப்பதால் பகைமை தீராது’ என்ற பௌத்த சிந்தனையை அறிந்தவர்கள் என்றவகையில், எந்தவிதமான துன்புறுத்தல்களிலோ வன்முறைகளிலோ ஈடுபடுவதன் மூலம், எமது நாட்டுக்கே அவப்பெயரும் களங்கமும் ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

‘அதேபோன்று, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்த நம் நாட்டவர்கள், தத்தமது மதங்களின் வழிகாட்டல்களுக்கமைய சமாதானத்துடனும் சகவாழ்வுடனும்; வாழ்வதன் மூலம் உருவாக்கப்பட்டிருக்கின்ற இந்த சுதந்திரமான சூழலை மென்மேலும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேலோங்கச் செய்து, நம்நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளை ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் ஒன்றுபட்டு, சமாதானமான முறையில் முன்னெடுப்போம் என்ற வேண்டுகோளை விடுக்கின்றேன்.

‘நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் ஒற்றுமையை பலப்படுத்தவும்;, இனங்களுக்கிடையில் ஐக்கியம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தவும், ஓர் அரசு என்றவகையில் எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து, வன்முறையில் ஈடுபடும் தரப்பினருக்கு எதிராக எடுக்கப்படக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை, இங்கு நான் கூறிவைக்க விரும்புகிறேன்.

‘அத்தோடு, பல்வேறு வதந்திகiளையும் கட்டுக்கதைகளையும், சமூக ஊடகங்கள், இணையத்தளங்கள், தொலைபேசி ஆகியவற்றின் ஊடாகப் பரப்பி, மிக மோசமாக, மக்கள் மத்தியிலும் நாட்டினுள்ளும் சமாதானத்தைச் சீர்குலைக்க முயலும் சில தரப்பினர் இருப்பதென்பது தெரியவந்திருக்கின்றது. அவ்வாறானவர்களுக்கு எதிராக, மிக உறுதியான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று, ஜனாதிபதி கூறியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .