2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘பேச்சுக்காக பேசும் பேச்சு’

Editorial   / 2019 ஜூலை 04 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ் தீர்வுகள் கிடைக்கும் சாத்தியங்கள் தென்படவில்லையெனத் தெரிவித்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மூன்று மாதங்களுக்குள் தீர்வுகள் கிடைக்காவிடின் ஆயுதமேந்துவோம் எனக் கூறுவதில் எவ்விதமான பின்னணியும் இல்லை. இது சும்மா பேச்சுக்காகப் பேசும் பேச்சு போலவே தெரிகிறது என்றார்.  

சம்பந்தனின் தலைமைத்துவதின் கீழ் அவரது காலத்தில் தீர்வுகள் கிடைக்குமென்ற சாத்தியங்கள் தென்படவில்லை என்றும் கூறிய அவர், ஆயுதமேந்தும் நிலையில் தமிழர்கள் இல்லையென்றார்.  

கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தில் நோர்வே சுன்மோர வாழ் மக்களின் நிதியுதவியுடன் நேற்று(03) இடம்பெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,  

“அரசியல் தீர்வு கிடைக்காது விடின் ஆயுதமேந்தி போராடுவது பற்றி தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டி வருமெனக் கூறியிருக்கும் சம்பந்தனின் கூற்று தமிழ் மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். நாங்கள் ஆயுதமேந்தக் கூடிய ஒரு நிலையில் இல்லை” என்றார்.  

ஆயுதமேந்த வேண்டிய சூழல் ஏற்பட்டு முப்பது வருடங்களாக ஆயுதம் ஏந்திய தாக்கம் இப்போதும் எங்களிடம் இருக்கிறது எனக் கூறிய விக்னேஸ்வரன், எனவே, இது சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனக் கூறியிருக்கலாமே தவிர ஆயுதங்கள் எடுப்போம் என்ற பேச்சு, கூற்று மனவருத்தத்துக்குரியது என்பது என்னுடைய கருத்தாகும் என்றார்.  

 “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் 2016இல், இவ்வருட இறுதிக்குள் தீர்வு கிடைக்கும் என்றார். அவ்வாறே 2017இலும் 2018 இலும் கூறினார். இப்பொழுது எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறுகின்றார்” என நினைவு படுத்தினார்.  

அரசாங்கம் எப்பொழுதுமே மனமுவந்து தீர்வை வழங்காது என, நாங்கள் இதைதான் அப்பொழுதிலிருந்தே கூறி வந்தோம். அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை, அழுத்தங்களை கொடுத்தே தீர்வுகளை பெறவேண்டும். அல்லது அவர்கள் தங்களின் சுயநலன் கருதி தீர்வுகளை வழங்கலாம் எனத் தெரிவித்த அவர், இதனை விடுத்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தீர்வை தருவார்கள் என நம்புவது சிறுபிள்ளைத் தனமானது என்றார். 

சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு தீர்வுகளை கிடைக்கக் கூடுமென்று சாத்தியக் கூறுகள் எதுவும் தென்படவில்லை. சம்பந்தன், நூறு வயது வரையிலும் இருந்தால் சில வேளையில் அவரது காலத்தில் தீர்வு கிடைக்க கூடும். ரணில் அவர்கள் சில வேளைகளில் இந்த தேர்தல் காலங்களில் அரசியல் காரணங்களுக்காக ஏதேனும் தீர்வுகளை தரலாம் என கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது. அது நடக்குமா என்பதனை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .