2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘முன்னோக்கிப் பயணிக்க வேண்டுமாயின் பற்று அவசியம்’

Editorial   / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
“நாடு முன்னோக்கிப் பயணிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு நோக்கம் மற்றும் இலக்கு என்பன அவசியமாவதோடு, நாட்டுப்பற்றும் அவசியப்படுகின்றது” என்று தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, “நாட்டு மக்களைக் குழப்பி, அவர்களைத் தூண்டிவிடுவோர், நாட்டுக்குத் துரோகம் செய்பவர்களாகவே கருதப்படுவர்” என்றும் தெரிவித்தார். 

காமினி திஸாநாயக்க மன்றத்தின் கற்கைநெறி நிறுவனத்தின் ஊடாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள், ஆளுமை விருத்தியாளர்கள், கணினி மற்றும் ஆங்கில அறிவு தொடர்பில் தமது டிப்ளோமா பாடத்துக்கு தேர்ச்சிப் பெற்ற 250 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் கௌரவிப்பு நிகழ்வும், நுவரெலியா அரலிய ஹொட்டலில் நேற்று (17) இடம்பெற்றன.  

மன்றத்தின் தலைவரும் பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

“ஆசியாவில் 70 வருட ஜனநாயக அரசியலைக் கொண்ட நாடாக இலங்கை காணப்பட்டாலும், இந்த 70 வருட வரலாற்றில் இரண்டு அரசியல் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவையிரண்டும் தோல்வி கண்டிருந்தன” என்றார்.   

“அதற்கு மேல் நாட்டில் பயங்கரவாதம் ஏற்பட்டது. அவற்றினால், நாம் பின்தள்ளப்பட்டோம், நாடு என்ற ரீதியிலும் பின்தள்ளப்பட்டோம். சுதந்திரம் பெற்ற காலப்பகுதியில் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை விட பொருளாதாரத்தில் மேம்பட்டு காணப்பட்டோம். அவ்வாறு முன்னேற்றம் கண்ட இலங்கை தற்போது பின்னடைந்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.  

“இலங்கை தற்போது பின்னடைந்துள்ளதை மாற்ற முடியுமா? என்பதே எமது தற்போதைய எதிர்பார்ப்பாகவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஊழல் தொடர்பில் ஆராய ஓர் ஆணைக்குழு என பல சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கி அவற்றை செயற்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம்.  
அதற்கமைய, எதிர்காலத்தில் நீதியானதும் சுயாதீனதுமான தேர்தல் ஒன்று நடைபெறும் என நம்புகின்றேன். முன்னைய ஆட்சியில் தேர்தல் நடைபெற்ற விதம் தொடர்பில் நீங்கள் அறிவீர்கள். இன்று அவ்வாறு அல்ல. அரச சொத்துகளை வீணாகப் பயன்படுத்த முடியாது என்பதோடு, பண வீண்விரயத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் நடைபெறுகின்றது” என்றார்.   

“அவ்வாறான சூழலில் மக்கள் தமது பிரதிநிதிகளை தமது விருப்பத்துக்கு ஏற்ப தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது. இந்த நிலையில், நாட்டை மீண்டும் பிளவுபடுத்த, நாட்டில் இனவாதத்தைத் தூண்ட பலர் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதை எண்ணி நான் கவலையடைகின்றேன். இறந்தகாலத்தை அழித்துக்கொண்டது போல் எதிர்காலத்தையும் அழித்துக்கொள்ள இடமளிக்க முடியாது.  

“நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது இனத்தையோ, மதத்தையோ கேட்பதில்லை. ஆகவே, தேவையற்ற விதத்தில் நாட்டு மக்களைக் குழப்பி, அவர்களை தூண்டிவிடுவோர், நாட்டுக்குத் துரோகம் செய்பவர்களாகவே கருதப்படுவர்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .