2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'வித்தியாவின் வன்புணர்வுக் காட்சி வெளிநாட்டில் விற்பனை'

Kogilavani   / 2017 ஜூன் 29 , மு.ப. 09:48 - 2     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2ஆம், 3ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் எதிராளிகள், மாறி மாறி அம்மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர். அதனால், மாணவியின் பிறப்புறுப்பு மிகவும் மோசமாகப் பாதிப்படைந்து இருந்ததாக, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது” என, பதில் சட்டமா அதிபர் கூறினார்.

“இந்தக் கூட்டு வன்புணர்வை, 5ஆம் மற்றும் 6ஆம் எதிராளிகள், தங்களது அலைபேசியின் மூலம் வீடியோப் பதிவு செய்துள்ளனர். பின்னர் அதனை செம்மையாக்கி, ஒரு முழுமையான வீடியோக் காட்சியாகத் தயாரித்து, வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த வீடியோ விற்பனை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் விசாரணைகள், “ட்ரயல் அட்பார்” முறையில் நேற்று (28), யாழ். நீதிமன்றக் கட்டட தொகுதியின் மூன்றாம் மாடியில், மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அதன்போது எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன் மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிராளிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
பதில் சட்டமா அதிபர் முன்னிலை

நேற்றைய விசாரணையில் ஆரம்ப உரை நிகழ்த்துவதற்கு, பதில் சட்டமா அதிபர் டபிள்யூ டி லிவேரா, தீர்ப்பாயம் முன்பில் முன்னிலையாகி இருந்தார். அவருடன் பிரதி சொலிஸிடர் ஜெனரல் குமார் ரட்ணம் தலைமையிலான அரச சட்டவாதிகள் நால்வர் முன்னிலையாகி இருந்தனர்.

அதேநேரம் 1ஆம், 2ஆம், 3ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் எதிரிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சரங்க பாலசிங்க மற்றும் சட்டத்தரணி மஹிந்த ஜயவர்த்தன ஆகியோரும் 5ஆம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் 4ஆம், 7ஆம் மற்றும் 9ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் மன்றினால் 9 எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலையாகி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகின. அதன்போது, பதில் சட்டமா அதிபர், குற்றப்பகிர்வுப் பத்திரத்தில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும் சான்றுப் பொருட்கள் பட்டியலில் மேலும் 5 சான்றுப்பொருட்களை உள்ளடக்கவும், மேலும் 12 சாட்சியங்களை இணைக்க அனுமதிக்க வேண்டும் எனவும், மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனை நீதிபதிகள் அனுமதித்தனர்.

எதிராளிகள் மறுப்பு

அதனைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட குற்றப்பகிர்வுப் பத்திரம், திறந்த மன்றில் எதிரிகளுக்கு வாசித்துக் காட்டப்பட்டது. குறித்த எதிராளிகளுக்கு எதிராக, 41 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அத்தனைக் குற்றச்சாட்டுகளையும் எதிராளிகள் மறுத்தனர்.

அதில் 1ஆம், 2ஆம், 3ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் எதிரிகளுக்கு எதிராக மாணவியை பலவந்தமாக கடத்தியமை, வன்புணர்வுக்கு உட்படுத்தியமை மற்றும் கொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஏனைய 4ஆம், 7ஆம், 8ஆம் மற்றும் 9ஆம் எதிராளிகள் மீது, குறித்த குற்றச்சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

நியாயாதிக்கம் உண்டு

அதனைத் தொடர்ந்து, 5ஆம் எதிராளியின் சார்பில், முன்னிலையான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, மன்றில் விண்ணப்பம் செய்கையில், அரசாங்கத்துக்கு எதிராகப் போர் தொடுத்தல், அதற்கு உதவுதல், சதித்திட்டம் தீட்டுதல், வெடி பொருட்கள் ஆயுதங்களை தன்வசம் வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்யவே, ட்ரயல் அட்பார் விசாரணைக்கு அதிகாரம் உண்டு. இத்தகைய எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இங்குள்ள எதிராளிகள் மீது சுமத்தப்படவில்லை. எனவே, இந்த வழக்கை விசாரிக்கும் நியாயாதிக்கம், இந்த ட்ரயல் அட்பார்க்கு இல்லை என, மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அதற்கு, பதில் சட்டமா அதிபர் தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார். சட்டத்தரணி கூறிய குற்றச்செயல்கள் தொடர்பில், கட்டாயம் ட்ரயல் அட்பார் முன்னிலையில் தான் விசாரிக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கு விசேட வழக்கு என்பதால்,  சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்கவே பிரதம நீதியரசரால் இந்த ட்ரயல் அட்பார் அமைக்கப்பட்டது என, தனது ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் தமது கட்டளையில், மூன்று நீதிபதிகளும் “5ஆம் எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தை ஏகமனதாக நிராகரிக்கின்றோம். மூன்று நீதிபதிகளுக்கும் இந்த வழக்கை விசாரிக்கும் நியாயாதிக்கம் உண்டு. நீதியின் தேவையையும் அதன் நலனையும் கருதி, விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக, பிரதம நீதியரசரின் பரிந்துரைக்கு அமைவாகவே இந்த ட்ரயல் அட்பார் அமைக்கப்பட்டது எனத் தெரிவித்து, 5ஆம் எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.

அதனைத் தொடர்ந்து, பதில் சட்டமா அதிபர், மன்றின் முன், தனதுரையை நிகழ்த்தினார். அதன்போது அவர் கூறியதாவது,

சர்வதேசக் குற்றம்

“இலங்கை வரலாற்றின் முதல் முறையாக, யாழ்ப்பணத்தில் ட்ரயல் அட்பார் முறைமையில் விசாரணை நடைபெறுகின்றது. இது யாழ்ப்பணத்தில் சட்ட வலுவான நீதியை நிலைநாட்ட வழிசமைக்கும் எனத் திடமாக நம்புகின்றேன். இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டப்பட்டு கடத்தப்பட்டு, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார் மாணவி சிவலோகநாதன் வித்தியா. இந்தக் கொடூரச் சம்பவம் 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.

“இந்தச் சம்பவம், யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல முழு இலங்கையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருந்தது. யாழ்ப்பாணத்தின் சட்டம் நீதி ஒழுங்கில் பாரிய நீதிப் பிறழ்வையும் ஏற்படுத்தியது. மக்களிடையே பய பீதியையும் ஏற்படுத்தி இருந்தது.

“இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருடன் இணைந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனூடாக, காட்டுமிராண்டித் தனமாகப் படுகொலை செய்த குற்றத்துடன் தொடர்புடைய 9 எதிராளிகளை அவர்கள் இனங்கண்டனர். குற்றப்புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு, ஆலோசனைகளையும் நெறிப்படுத்தல்களையும், சட்டமா அதிபர் வழங்கி இருந்தார். இரவு பகலாக பல சிரமங்களுக்கு மத்தியில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

“இந்த வழக்கு விசாரணைகளின் ஊடான தீர்ப்பு, நல்ல செய்தியைச் சொல்லும் என நம்புகின்றேன். இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்து தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கிறேன். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் உரித்துகள் பாதுகாக்கப்படும் எனவும் நம்புகின்றேன்.

“இந்தக் கொடூரச் சம்பவத்தின் பின்னர், சந்தேகநபர்களைப் பாதுகாப்பதற்காக, பலர் முயன்று உள்ளார்கள். அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன. அதன் அடிப்படையில், எதிராளிகளைப் பாதுகாக்க முற்பட்டவர்கள் தொடர்பில், பிறிதொரு வழக்கு நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும்.

“இந்தக் கொடூரச் சம்பவமானது, சாதாரண கடத்தல், வன்புணர்வு, கொலை போன்றது அல்ல. இது முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்றமாகும். இதற்கு, சர்வதேச ரீதியில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அதனால் இதனை, சர்வதேசக் குற்றம் என்றுகூட சொல்லலாம். இதன் பின்னணியில், இந்த நாட்டின் நற்பெயருக்கும் கீர்த்திக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என, திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளனர்.

ரூ. 20 மில்லியனை கைமாற்ற முயற்சி

“இந்தக் குற்றச்செயல் தொடர்பிலான சூழ்நிலைச் சான்றுகள், நிபந்தனைகளின் அடிப்படையில் சட்டமா அதிபரினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடையவர்களின் சாட்சியங்களும் உள்ளன. அவற்றின் அடிப்படையில், இந்தக் குற்றசெயலின் பிரதான சூத்திரதாரி ஒன்பதாம் எதிராளி ஆவார். குறித்த எதிராளி, கூட்டு வன்புணர்வை நேரடியாக வீடியோ ஒளிப்பதிவு செய்து, சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய முயன்றுள்ளார்.

“இந்த ஒன்பதாம் எதிராளி இலங்கையில் பிறந்திருந்தாலும், சுவிட்சர்லாந்தின் குடியுரிமையைப் பெற்றவர். அவர் அந்நாட்டில் இருந்து அடிக்கடி இலங்கைக்கு வந்து செல்பவர். இந்நிலையில், அவர் அந்நாட்டில் இருந்தபடியே, 6 எதிராளிகளுடனும் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

“சர்வதேச சந்தையில், தெற்காசிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண்களை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்துவதை நேரடிக் காட்சியாகவோ அல்லது வீடியோ ஒளிப்பதிவு மூலமாகவே விற்பனை செய்ய முடியும். இவ்விடயம் தொடர்பில், ஒன்பதாவது சந்தேகநபர், தன்னுடன் சிறையில் இருந்த சகபாடிக்கும் சொல்லியிருக்கிறார்.
வெளிநாட்டில் வீடியோ விற்பனை

“அதேவேளை, ஒன்பதாவது சந்தேகநபர், தன்னை இந்தக் குற்றச்செயலில் இருந்து தப்பிக்க உதவுமாறு கோரி, போலிஸ் அதிகாரி ஒருவருக்கு 20 மில்லியன் ரூபாயைக் கைமாற்றம் செய்யவும் முயன்று உள்ளார். இந்த வழக்கின் 2ஆம், 3ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் எதிராளிகளே, மாணவியைக் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர். இவர்கள் நால்வரும், மாறி மாறி மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர். அதனால், மாணவியின் பிறப்பு உறுப்பு மிகவும் மோசமாகப் பாதிப்படைந்து இருந்ததாக, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

“இந்த கூட்டு வன்புணர்வை, 5ஆம் மற்றும் 6ஆம் எதிரிகள், தங்களது அலைபேசியின் மூலம், வீடியோப் பதிவு செய்துள்ளனர். பின்னர் அதனை செம்மையாக்கி, ஒரு முழுமையான வீடியோக் காட்சியாகத் தயாரித்து, அதனை வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். விசாரணைகளின் ஊடாக, வீடியோக் காட்சிகளை மீளஎடுப்பதற்கு குற்றப்புலனாய்வுப்பிரிவினர் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவர்களால் அதனைப் பெறமுடியவில்லை. ஆனால், அந்த வீடியோ விற்பனை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

“மாணவியை 2ஆம், 3ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் எதிராளிகள், பாழடைந்த வீட்டினுள் வைத்தே வன்புணர்வுக்கு உட்படுத்தி இருந்தனர். பின்னர், மாணவியின் சடலம் கிடந்த இடத்துக்கு அவரைத் தூக்கிச்சென்று, அங்குள்ள மரங்களில் கைகள் மற்றும் கால்களைக் கட்டி, கழுத்தை நெரித்துப் படுகொலை செய்துள்ளனர். அதன்போது, குறித்த மாணவி மூச்சடக்கி மரணமடைந்துள்ளார். அதேவேளை, மாணவியின் தலையின் பின் புறத்திலும் காயம் ஏற்பட்டு இருந்துள்ளது. இந்த ஒன்பது எதிராளிகளுக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 41 குற்றச்சாட்டுகளும், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படும் என திடமாக நம்புகின்றேன்” என, பதில் சட்டமா அதிபர், தனதுரையில் தெரிவித்தார்.

தாய் சாட்சியம்

“எமது வீட்டில் இருந்து எனது மகள், தினமும் பாடசாலைக்கு சைக்கிளில் தான் செல்வாள். வீட்டில் இருந்து பாடசாலைக்குச் செல்ல, ஒன்று தொடக்கம் ஒன்றரை மணித்தியாலம் தேவைப்படும். பெரும்பாலும், எனது மகன் (வித்தியாவின் அண்ணா) வித்தியாவை பாடசாலைக்கு அழைத்துச் செல்வான். சிலவேளைகளில், அவனுக்கு வேலை இருந்தால் கூட படிக்கும் சக பிள்ளைகளுடனேயே வித்தியா செல்வாள்.

“எனது கணவர் பாரிசவாத நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருப்பதனால், எமது குடும்பம், பொருளாதாரச் கிக்கலை எதிர்கொண்டது. சூழ்நிலை காரணமாக, மகன் இடையில் படிப்பை கைவிட்டு, வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டான்.

“வீட்டில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் வீதியின் இரு மருங்கிலும் பற்றைக் காடுகளும் பாழடைந்த வீடுகளுமே உள்ளன. அவற்றைத் தாண்டியே, பாடசாலைக்குச் செல்ல வேண்டும். அந்த வீதியும், குன்றும் குழியுமாக இருக்கும். மழை காலத்தில் அந்த வீதியைப் பயன்படுத்த முடியாது. அந்த வீதியில், பெரும்பாலும் சன நடமாட்டம் குறைவாகக் காணப்படும். பாடசாலை நேரத்திலும் சந்தைக்கு பொருட்கள் வாங்க செல்லும் நேரத்திலும் தான், அந்த வீதியில் சன நடமாட்டம் இருக்கும். ஏனைய நேரங்களில் சன நடமாட்டம் குறைவாகவே இருக்கும்.

“சம்பவ தினத்தன்று காலை 7.30 மணிக்கு, வித்தியா பாடசாலை செல்ல புறப்பட்டாள். நானே வீட்டின் கேட் வரையில் சென்று வழியனுப்பி வைத்தேன். அன்றைய தினம் வித்தியா கூட படிக்கும் மாணவியுடன் செல்வதாகக் கூறியே சென்றாள். ஆனால், அன்றைய தினம் அந்த மாணவி பாடசாலை செல்லாத காரணத்தால், வித்தியா தனியாகவே பாடசாலை நோக்கிப் புறப்பட்டாள்.

“பாடசாலை சென்ற வித்தியா, பாடசாலை நேரம் முடிவடைந்து வீட்டுக்கு வரும் நேரத்தைக் கடந்தும், வீடு திரும்பாததால், வித்தியாவைப் பார்த்து வருமாறு, எனது மகனை பாடசாலைக்கு அனுப்பினேன். அவன் அங்கு சென்று பார்த்துவிட்டு, பாடசாலை பூட்டியுள்ளதாக, தொலைபேசி மூலம் தகவல் வழங்கினான். அதன் பின்னர், பாடசாலை மாணவர்களிடம் விசாரித்த போது, வித்தியா இன்றைய தினம் பாடசாலைக்கு வரவில்லை எனக் கூறினார்கள்.

“அதன் பின்னர், நானும் எனது மகனும், வித்தியாவைத் தேடி அலைந்தோம். அந்நேரம் ஊரவர்கள் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள் எனச் சொன்னார்கள். அதனால், மாலை 6.30 மணியளவில் குறிகட்டுவான் பொலிஸ் காவலரணில் முறைப்பாடு செய்யச் சென்றோம். அங்கு அவர்கள் இந்த முறைப்பாட்டை ஏற்க முடியாது. நீங்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்யுங்கள் எனத் தெரிவித்தனர்.

“பின்னர் இரவு 8 மணியளவில், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்ய முற்பட்ட போது, “இந்த வயதுப் பிள்ளைகளை எங்கேனும் போயிருக்குங்கள். திரும்பி வாருங்கள்” என, பொலிஸார் சொன்னார்கள். அதற்கு நாம் எங்கள் பிள்ளை அப்படிப்பட்டவள் இல்லை எனக் கூறியதும், பின்னர் எமது முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டார்கள்.

“பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய, ஓட்டோவில் சென்றிருந்தோம். அதே ஓட்டோவில் இரவு 10 மணியளவில் வீடு திரும்பும் போது, “நான் தினமும் 7.30 மணியளவில் வித்தியாவை ஆலடிச் சந்தியில் காண்கிறனான். இன்றைக்கு காணவில்லை. எனவே, அவர் வீட்டுக்கும் ஆலடிச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் காணாமல் போயிருக்க வேண்டும். எனவே, அந்த பகுதிகளில் தேடிப் பாருங்கள்” என, ஓட்டோ சாரதி சொன்னார்,

“அன்றைய தினம் மழை பெய்துகொண்டு இருந்ததாலும் மிகவும் இருட்டி விட்டதாலும், நாம் இரவு வேளையில் தேடாமல், வீட்டுக்குச் சென்றுவிட்டோம். மீண்டும் மறுநாள்  காலை 6.30 மணியளவில் நானும் மகனும் அயலவர்களுடனும் வித்தியவைத் தேடிச்சென்றோம்.

“அதன்போது வீதியின் இரு மருங்கிலும் இருவர் வீதம் பிரிந்து தேடினோம். எம்முடன் வித்தியா வளர்த்த நாயும் வந்திருந்தது. திடீரென எனது மகனும் அயலவர்களும் கத்தும் சத்தம் கேட்டு நானும் என்னுடன் கூட வந்தவரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினோம்.

“அப்போது என் மகன் ஓடிவந்து “அம்மா வித்தியா” என, கத்திக்கொண்டு மயக்கமுற்று வீழ்ந்தான். அதன் பின்னர், நானும் சுயநினைவின்றி போனேன். எம்முடன் வந்தவர்கள் தான் ஓடிச்சென்று, வேறு ஆட்களை அழைத்து வந்தனர். நான் சுயநினைவுக்கு வந்ததும், வித்தியாவின் சடலம் இருந்த இடத்துக்கு சுமார் 20அடி தூரத்தில் இருந்தே சடலத்தைப் பார்த்தேன். அருகில் செல்லவில்லை. மகன் மயக்கமுற்று வீழ்ந்தமையால், அவனை  வைத்தியசாலைக்குக் கொண்டுசென்று விட்டார்கள்.

பின்னர் காலை 10 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, விசாரணைகளை செய்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் கொண்டுசென்றனர்” என, அந்தத் தாய், கண்ணீர்மல்க, தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார்.


You May Also Like

  Comments - 2

  • Jobitan Friday, 30 June 2017 01:39 AM

    வித்தியா என் சகோதரியானவள். இந்தச் சட்டம் 2வருடமாகியும் இன்னும் முடிவெடுக்காமல் அந்த குடும்பத்துக்கு (அணையும் விளக்கில் எண்ணெய் ஊற்றுவது போல்) மனதை காயப்படுத்தி காயப்படுத்தி கொண்டிருக்கின்றது

    Reply : 0       0

    Arun Chellappah Friday, 30 June 2017 03:55 AM

    சர்வதேசக் குற்றம் “இலங்கை வரலாற்றின் முதல் முறையாக, யாழ்ப்பணத்தில் ட்ரயல் அட்பார் முறைமையில் விசாரணை நடைபெறுகின்றது. இது தவறு. 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஜி ஜி பொன்னம்பலம், திருச்செல்வம், அமிர்தலிங்கம் ஆகிய மூவரும் அரசுக்கு எதிரான சட்ட மூலம் ஒன்றை எதித்து டரியல் அட் பார் முறையில் வாதிட்டு வெற்றியும் பெற்றனர். Arun Chellappah Canada

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .