2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

காலி முகத்திடலில் கடலலையை மேவியது சனத்திரள்

Editorial   / 2019 ஒக்டோபர் 11 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. கமல்

நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவிருக்கும்  நாட்டின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவுச் செய்வதற்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன. இந்த ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

அவர்களில் முக்கியமாக மூன்று ​வேட்பாளர்களுக்கு இடையி​லேயே கடுமையான போட்டி நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதான வேட்பாளர்களான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, மக்கள் சக்தியின் வேட்பாளரான ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க ஆகிய மூவருக்கு இடையில் இப்போட்டி நிலவுமெனக் கூறப்படுகின்றது.

அவர்களில் அநுரகுமார திஸாநாயக்கவின் முதலாவது பிரசாரக் கூட்டம், ​ஒக்டோபர் 08 ஆம் திகதி, அநுராதபுரம், தம்புத்தேகமவில் நடைபெற்றது.  கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், அநுராதபுரத்தில், நேற்று முன்தினம் (09) நடைபெற்றது.

இந்நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது பிரசாரக் கூட்டம்,  காலி முகத்திடலில் நேற்று (10) நடைபெற்றது. காலிமுகத்திடலில்  இதற்கு முன்னர் நடைபெற்ற முக்கியக் கூட்டங்களில் பங்கேற்ற மக்கள் தொகையை விஞ்சும் வகையில், நேற்றைய கூட்டம் அமைந்திருந்தது.

காலிமுகத்திடல் மட்டுமன்றி, காலி-கொழும்பு பிரதான வீதியிலும் மக்கள் நிரம்பியிருந்தனர். அங்கிருந்த மரங்களிலும் மக்கள் ஏறியிருந்தனர். கடலுக்கு அண்மித்ததாக இருக்கும் நடை​பாதையிலும் ஆதரவாளர்கள் நிரம்பியிருந்தனர். இன்னும் சிலர், காலி முகத்திடலுக்குச் செல்லமுடியாது, கொழும்பின் மய்ய நகர  வீதிகளில் நின்றிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதான மேடைக்கு வந்ததன் பின்னர், தம்பர அமில தேரர் உரையாற்றினார். அப்போதுதான், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மேடைக்கு வருகை தந்தார். அவர் பிரதான மேடைக்கு வருகை தருவதற்கு சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் எடுத்தது.

அவர் வருகைதந்ததன் பின்னர், பச்சை, மஞ்சள் நிறங்களுடன் கலந்த பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆதரவாளர்களை ஏற்றிவந்திருந்த பஸ்கள், வீதியோரங்களில் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதனால், கொழும்பின் பல பாகங்களில் பெரும் வாகன நெரிசல்கள் ஏற்பட்டிருந்தன.

அந்த பஸ்கள், கொழும்பிலிருந்து வெளியேறுவதற்கு சுமார் நான்கு மணிநேரத்துக்கு மேல்எடுத்தது என்பதுடன், காலி முகத்திடலில் குழுமியிருந்த மக்கள், காலி முகத்திடலை ​மேவியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

(படப்பிடிப்பு; பிரதீப்பத்திரண)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X