2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

2ஆவது சுற்றுடன் வெளியேற்றப்பட்டார் முதல்நிலை வீராங்கனை

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவின் டொரன்டோவில் இடம்பெற்றுவருகின்ற றோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியுடன் உலகின் முதல்நிலை வீராங்கனையான அஷ்லெய் பார்ட்டி வெளியேற்றப்பட்டார்.

முதலாவது சுற்றுப் போட்டியில் இடையை பெற்றிருந்த அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி, இன்று அதிகாலை இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்காவின் சோஃபியா கெனினுடனான தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் டைபிரேக்கர் வரை சென்ற முதலாவது செட்டை 7-6 (7-5) என்ற ரீதியில் கைப்பற்றியபோதும், இரண்டாவது, மூன்றாவது செட்களை 3-6, 4-6 என்ற நிலையில் இழந்து தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, முதலாவது சுற்றுப் போட்டியில் இடையைப் பெற்றிருந்த உலகின் ஐந்தாம்நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பேர்ட்டன்ஸ், தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் ஃபிரான்ஸெஸ்கா டி லொரென்ஸோவை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், முதலாவது சுற்றுப் போட்டியில் இடையைப் பெற்றிருந்த உலகின் எட்டாம்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீவன்ஸ், தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் செக் குடியரசின் மரி புஸ்கோவாவிடம் 2-6, 5-7 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் அனஸ்டசியா பவ்லுசென்கோவாவை எதிர்கொண்ட உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அர்யானா சபலெங்கா, 6-3, 3-6, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இடையைப் பெற்றிருந்த உலகின் ஏழாம்நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 7-6 (7-4), 6-4 என்ற நேர் செட்களில் பிரித்தானியாவின் கமரன் நோரியை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .