2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளருக்கான குறும்பட்டியலில் அறுவர்

Editorial   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு குறும்பட்டியலிடப்பட்டுள்ள நியூசிலாந்தின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மைக் ஹெஸன், இலங்கையின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டொம் மூடி, மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான பில் சிமொன்ஸ், இந்திய அணியின் முன்னாள் முகாமையாளரான லால்சன்ட் ராஜ்புட், இந்திய அணியின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் றொபின் சிங், இந்திய அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளர் ரவி ஷாஸ்திரியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைமையகத்தில், இந்திய அணியின் முன்னாள் தலைவரான கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை செயற்குழு நேர்காணவுள்ளது.

துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்களுக்கு ஏறத்தாழ 2,000 விண்ணப்பங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பெற்றதாகக் கூறப்படுகின்றபோதும், தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஒரு சில பிரபலமானவர்களே விண்ணப்பித்திருந்த நிலையில், குறும்பட்டியலிடப்பட்ட அறுவருக்கான நேர்காணல் திகதி, நேரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நேற்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத்தாலேயே துடுப்பாட்ட, பந்துவீச்சு, களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

இந்திய அணியின் தலைவர் விராத் கோலியின் ஆதரவை வெளிப்படையாக ரவி ஷாஸ்திரி பெற்றுள்ள நிலையில் அவரே இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகத் தொடர்வதற்குரிய அதிக வாய்ப்புகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேபோன்று பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராகவும் தற்போதைய பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர் பாரத் அருண் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகையில், தற்போதைய களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளரான ஆர். ஶ்ரீதர், தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் ஜோன்டி ரோட்ஸிடமிருந்து சவாலை எதிர்கொள்வார் எனத் தெரிகிறது. தவிர, தற்போதைய துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் சஞ்சய் பங்கரும், பிரவீன் அம்ரேயிடமிருந்து போட்டியை எதிர்கொள்வார் எனத் தெரிகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X