2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்து

Editorial   / 2018 நவம்பர் 21 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் கூட்டமைப்பு லீக்கின் அரையிறுதிப் போட்டிக்கு, இறுதி நிமிடங்களில் பெற்ற இரண்டு கோல்களால், நெதர்லாந்து தகுதிபெற்றது.

ஜேர்மனியில், இலங்கை நேரப்படி நேற்று (20) அதிகாலை இடம்பெற்ற ஜேர்மனியுடனான குழு ஏ - 1 போட்டியைச் சமநிலையில் முடித்துக் கொண்டு ஒரு புள்ளியைப் பெற்ற நிலையிலேயே, குழுவில் முதலிடம் பெற்று, அரையிறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து தகுதிபெற்றது.

நெதர்லாந்தும் நடப்பு உலகச் சம்பியன்கள் பிரான்ஸும், தலா ஏழு புள்ளிகளையே பெற்றிருந்தபோதும், நெதர்லாந்துக்கும் பிரான்ஸுக்குமிடையேயான போட்டியில் நெதர்லாந்து சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தமை காரணமாகவே, நெதர்லாந்து அணி, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இப்போட்டியின் ஒன்பதாவது நிமிடத்தில், தன்னிடம் வந்த பந்தொன்றைத் தனது தலையால் கட்டுப்படுத்திக் கோலொன்றைப் பெற்ற ஜேர்மனியின் திமோ வேர்னர், தனது அணிக்கு ஆரம்பத்திலேயே முன்னிலையை வழங்கினார். அடுத்த 10ஆவது நிமிடத்தில், நீண்ட தூரத்திலிருந்து டொனி க்றூஸ் வழங்கிய பந்தைக் கோலாக்கிய லெரோய் சனே, தனது அணியின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

எவ்வாறெனினும், போட்டி முடிவடைய ஐந்து நிமிடங்கள் இருக்கையில், நெதர்லாந்தின் இளம் முன்கள வீரர் குயின்ஸி புரோமெஸ், கோல் கம்பத்துக்கருகிலிருந்து பெற்ற கோலின் மூலம், ஜேர்மனியின் முன்னிலையை ஒரு கோலால் குறைத்தார். அதன் பின்னர், போட்டியின் இறுதி நிமிடத்தில், டொனி வில்ஹெனாஸிடமிருந்து வந்த பந்தை, நெதர்லாந்து அணியின் தலைவர் வேர்ஜில் வான் டிஜிக் கோலாக்க, போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தி, ஒரு புள்ளியைப் பெற்ற நெதர்லாந்து, அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

அந்தவகையில், தமது அரையிறுதிப் போட்டியில், போர்த்துக்கல்லை, நெதர்லாந்து சந்திக்கவுள்ளது.

இதேவேளை, பிரான்ஸிடம் 2-1 என்ற கோல் கணக்கில் கடந்த மாதம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரண்டாம் பிரிவுக்குத் தரமிறக்கப்பட்ட ஜேர்மனி, போர்த்துக்கல்லுடனான போட்டியில் போலந்து வென்றால், 2020ஆம் ஆண்டு யூரோ கிண்ணப் போட்டிகளுக்கான குழுநிலைத் தரப்படுத்தல்களிலும் பின்தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .