2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கோப்பா டெல் ரே: வென்றது பார்சிலோனோ

Editorial   / 2017 மே 29 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்ற கோப்பா டெல் ரேயில் இறுதிப் போட்டியில், அலவேஸ் கழகத்தை, பார்சிலோனா வென்றுள்ளது. இம்முறையுடன் தொடர்ச்சியாக மூன்றாவதாக ஆண்டாக கோப்பா டெல் ரேயை வென்றுள்ள பார்சிலோனா, மொத்தமாக 29 தடவைகள்,  கோப்பா டெல் ரேயை வென்றுள்ளது. வரலாற்றில், அதிக தடவைகள் கோப்பா டெல் ரேயை வென்றுள்ள கழகம் பார்சிலோனா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

இதேவேளை, இப்போட்டியுடன் பார்சிலோனாவை விட்டு, பார்சிலோனாவின் முகாமையாளர் லூயிஸ் என்றிக்கே விலகுகின்ற நிலையில், என்றிக்கேக்கு வெற்றிப் பிரியாவிடையை,  பார்சிலோனா வழங்கியுள்ளது. பார்சிலோனாவின் புதிய முகாமையாளர், இன்று (29) அறிவிக்கப்படவுள்ளார்.  

அத்லெட்டிகோ மட்ரிட் கழக மைதானத்தில், இலங்கை நேரப்படி, நேற்று (28) அதிகாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில், நேமருடன் பந்தைப் பரிமாறிக் கொண்டு வந்த லியனல் மெஸ்ஸி, போட்டியின் 30ஆவது நிமிடத்தில், கோல் கம்பத்திலிருந்து 20 அடி தூரத்திலிருந்து உதைந்த உதையின் மூலம் கோலொன்றைப் பெற்று, பார்சிலோனாவுக்கு முன்னிலையை வழங்கினார். எனினும், அடுத்த மூன்றாவது நிமிடத்தில், “பிறீ கிக்” மூலம் கோலொன்றைப் பெற்ற தியோ ஹெர்ணான்டஸ், கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.  

இதன்பின்னர், போட்டியின் 45ஆவது நிமிடத்தில், மெஸ்ஸி அன்ட்ரே கோமேஸிடம் வழங்கிய பந்தைப் பெற்று, கோல் கம்பத்துக்கருகிலிருந்து கோலைப் பெற்ற நேமர், பார்சிலோனாவுக்கு முன்னிலையை வழங்கினார். பின்னர், போட்டியின் முதற்பாதியின் மேலதிகமான மூன்றாவது நிமிடத்தில், மெஸ்ஸியிடமிருந்து பெற்ற பந்தின் மூலம் பக்கோ அல்கேஸர் பெற்ற கோலோடு, 3-1 என்ற கோல் கணக்கில், இறுதியில் பார்சிலோனா வென்றது.  

இப்பருவகால லா லிகாவில் இரண்டாமிடத்தையே பெற்ற பார்சிலோனா, சம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிப் போட்டியில், இத்தாலியக் கழகமான ஜுவென்டஸினால் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், கோப்பா டெல் ரேயை வென்றமை, ஆறுதலாக அமைந்திருந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .