2024 மார்ச் 28, வியாழக்கிழமை

டொட்டமுண்டை வீழ்த்தியது டொட்டென்ஹாம்

Editorial   / 2019 பெப்ரவரி 15 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்றுப் போட்டியில் ஜேர்மனியக் புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் வீழ்த்தியது.

தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற குறித்த போட்டியின் இறுக்கமாக அமைந்த முதற்பாதியில் கோலெதுவும் பெறப்படாத நிலையில், இரண்டாவது பாதியின் இரண்டாவது நிமிடத்தில் சக பின்கள வீரர் ஜான் வெர்டோங்கனிடமிருந்து பெற்ற பந்தை, முன்கள வீரர் சண் ஹெயுங் மின் கோலாக்க, டொட்டென்ஹாம் முன்னிலை பெற்றது.

பின்னர், சக பின்கள வீரர் சேர்ஜி ஒரியரிடமிருந்து வந்த பந்தை போட்டியின் 83ஆவது நிமிடத்தில் ஜான் வெர்டோங்கன் கோலாக்க தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிய டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், அடுத்த மூன்றாவது நிமிடத்தில் சக முன்கள வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் செலுத்திய மூலையுதையை மாற்று வீரராகக் களமிறங்கிய முன்கள வீரர் பெர்ணான்டோ லொரென்டே கோலாக்க, இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் வென்றது.

இப்போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டிருந்த டொட்டமுண்டின் இளம் முன்கள வீரர்களான ஜடோன் சஞ்சோ, கிறிஸ்டியன் புலிசிச் ஆகியோர் பிரகாசித்திருக்கவில்லை. இதுதவிர, டொட்டமுண்டின் அணித்தலைவரும் முன்கள வீரருமான மார்கோ றொய்ஸ், காயம் காரணமாக பங்கேற்கவில்லையென்ற நிலையில், டொட்டென்ஹாமின் முன்கள வீரர்களான ஹரி கேன், டெலே அல்லி ஆகியோரும் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்றிருக்கவில்லை.

இந்நிலையில், நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸின் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் வென்றது. ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் சார்பாக, கரிம் பென்ஸீமா, மார்கோ அஸென்ஸியோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், அஜக்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹகிம் ஸியெச் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X