2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘3,000 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள்’

வா.கிருஸ்ணா   / 2018 மே 15 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட, கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள சுமார் 3,000 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, இந்து கலாசார அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி உட்பட முக்கிய இராணுவ முகாம்கள் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு 820 மில்லியன் ரூபாய் தேவையாகவுள்ளது. இவற்றுக்கான நிதியைப் பெறுவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதுடன், அதற்கான நிதிகள் கிடைக்குமிடத்து, காணிகள் விடுவிக்கப்படும்.

“யுத்தம் முடிந்ததன் பின்னர் 58 ஆயிரம் ஏக்கர் காணிகள் படையினர் வசம்கொண்டுவரப்பட்டன. இவற்றில் 28ஆயிரம் ஏக்கர் காணிகள் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன. இன்னும் தனியார் காணிகள் 7,650 ஏக்கர் காணிகள் படையினர் வசம் உள்ளன.

“அரச காணிகளில் இருந்து உடனடியாக இராணுவம் வெளியேறமுடியாத நிலையே இருக்கின்றது. இந்த தனியார் காணிகளில் 3,000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,750 ஏக்கர் காணிகள் மேலதிகமாக படையினர் வசம் உள்ளபோதிலும் அதனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

“மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு உட்படாத காணிகளில் உள்ள படைமுகாம்களை அவ்வாறே இயங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்துக்கும் பொதுமக்களுக்கும் தேவையாகவுள்ள காணிகளை விடுவிப்பதற்கும் அதற்கு மாற்றுக்காணிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், படைமுகாம்களை இடமாற்றுவதற்கு 6 மாதங்கள் தொடக்கம் ஒரு வருடங்கள் வரை தேவைப்படலாம்.

“காணி விடுவிப்புகள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று செயற்பட்டுவருகின்றது.

“அதடிப்படையில், ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் கூட்டம் ஒன்றுநடைபெறும். அதில் இந்த காணி விடுவிப்புகள் தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .