2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க ஆயத்தமாகவுள்ளோம்

Editorial   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா

எமது தேர்தல்கால வாக்குறுதிகளுக்கு அமைவாக, மக்களது நம்பிக்கை சிதறடிக்கப்படாமலும், தமிழ்த் தேசியம் சிதையா வண்ணமும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க நாங்கள் ஆயத்தமாகவுள்ளோம் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார்.

நேற்று (16)  காலை இடம்பெற்ற மட்டக்களப்பு மாநகர சபையின் முதல் அமர்வில் தலைமையுரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக அனைவரையும் வரவேற்பதுடன், என்னை முதல்வராக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும், இதர சக்திகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரிடமும் தனித்துவமான விசேட ஆற்றல்கள், திறமைகள் இருப்பதன் மூலமே மக்கள் இவர்களை இனங்கண்டு தெரிவு செய்துள்ளனர். உங்களது சுயம் அல்லது தனித்துவம் இழக்கப்படாமலும், மக்களது நம்பிக்கை சிதறடிக்கப்படாமலும் எமது பணிகளைச் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

மாநகரின் அடிப்படைத் தேவைகள், உடனடித் தேவைகள், நிலைபேறான தன்மையுள்ள நிரந்தரத் தேவைகள் முதலான அனைத்தையும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பட்டியலிட்டு முன்னுரிமை அடிப்படையில் முறைப்படுத்தப்பட்ட வகையில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதனை வலுவூட்ட மாநகரில் வசிக்கும் பல்துறை சார்ந்த வல்லுனர்கள், புத்திஜீவிகள் கொண்ட ஆலோசனை சபைகளை அமைக்கவுள்ளோம்.  

பசுமை நிறைந்த எழில்நகரம், மாநகரப் பணிக்குழுவினரின் வேலைத் திறனையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தல், அரச திணைக்களங்களின் உதவிகளை முழுமையாகப் பெறுதல், துறைசார் அபிவிருத்திகளை வழங்கும் நிதி மூலங்களைப் பெற்றுக் கொள்ளல் இவை போன்ற அனைத்து நலன்சார் அபிவிருத்திகளையும் மேற்கொள்ளவுள்ளோம்

இவை போன்ற கால, தேச வர்த்தமான நிகழ்வுகளுக்கேற்ப அபிவிருத்திகளை முன்னெடுத்து அனைவரது ஒத்துழைப்புடன், இந்த மாநகரை முதன்மையாக்க பாடுபட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .