2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்த அரசாங்கத்தால் ’தீர்வு வருமென நம்பவில்லை’

வா.கிருஸ்ணா   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கக் காலத்தில், தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு வருமெனப் பலரும் நம்பும் நிலையில், தன்னைப் பொறுத்தவரையில் அந்த நம்பிக்கை இல்லை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தோடு, வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உறுதிமொழியைப் பெறாவிட்டால், வரவு - செலவுத் திட்டத்துக்கு (பாதீடு) ஆதரவளிக்க முடியாதென, தமிழ்த் தலைமைகள் தீர்மானிக்க வேண்டுமெனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட திராய்மடு ஸ்ரீ கிருஸ்ணா விளையாட்டு மைதானத்தின் புனரமைப்புப் பணிகள், நேற்று (21) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டன. தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் 24 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ், இந்த மைதான புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இதன்போது அவர், தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலான, எழுத்துமூலமான உறுதிமொழியை வழங்கும் பட்சத்திலேயே, வரவு - செலவுத் திட்டத்துக்கான ஆதரவை வழங்குவது தொடர்பில் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், “கடந்த மூன்று வரவு - செலவுத் திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாகக் கையை உயர்த்தியுள்ளது. இந்த அரசாங்கம், தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வைத் தரவேண்டும் என்பதற்காகவே அந்த ஆதரவை வழங்கியது.

“கடந்த எழுபது ஆண்டுகளாக, இந்த நாட்டை ஆட்சி செய்த அரச தலைவர்கள், தமிழ்த் தலைமைகளை ஏமாற்றி வந்ததே வரலாறாக இருக்கின்றது. இந்த நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்துள்ள இந்த ஆட்சிக் காலத்திலாவது, அந்த ஏமாற்றத்தைத் தரமாட்டார்கள் என்று நாங்கள் நம்பியது உண்மை" என்று குறிப்பிட்டார்.

நிரந்தரத் தீர்வு தொடர்பான தனது நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்திய அவர், “இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வைத் தரும் என்று நான் கூறவில்லை. யாரும் நம்பலாம். இந்த அரசாங்கத்திடம் முழுமையான தீர்வை எதிர்பார்ப்பது, எட்டாக்கனிக்கு கொட்டாவி விட்ட கதையாக மாறிவிடுமோ என்று நினைக்கின்றேன். எவ்வாறாயினும், ஒரு நம்பிக்கையுடன் பயணித்து வருகின்றோம்" என்று குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு முடிவதற்குள், தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏற்கெனவே பணிப்புரை வழங்கியிருந்த நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமெனத் தெரிவித்த அவர், அதற்கான அழுத்தங்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து வழங்கிவரும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டார்.

“அதேபோன்று, தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும், இந்த அரசாங்கம் உடனடியாக தீர்வொன்றை வழங்கவேண்டும். வரவு - செலவுத் திட்டத்துக்கு வாக்களிக்கும்போது, நிரந்தரத் தீர்வொன்றை நோக்கியதாக எமது ஆதரவை வழங்கவேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .